Skip to main content

மரணத்தின் பிரதிபலிப்பு

சமீப காலங்களில்
எங்களுக்குள் இந்த ஊடல்;
எவ்வளவு நாள் காதலித்திருக்கிறேன்!
என்னை அழகு என்று எப்பொழுதும்
சொல்லியதும் நினைவுக்கு வருகிறது.
ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே
எவ்வளவு கணங்கள் கழிந்திருக்கும்
மணமான பின்னும் தொடர்ந்த காதலில்
இப்போதெல்லாம் பிணக்குதான்;
அருகே செல்லவே பிடிக்கவில்லை.
ஒரு மாதிரி அலுத்துவிட்டது -
இருவருக்கும்தான்.
வாழ்க்கையின் சுவையும் ரசமும்
போயே விட்டதாக உணர்ந்தோம்.
தனியே ஒரு நாள் சந்தித்தோம்
நிறைய பேசினோம்
தேய்ந்துபோய் சாதலைவிட
நடுவயது மரணம் மேலானது
இயற்கை மரணத்தைவிட
விபத்துக்கள் சுலபமானவை
என்றெல்லாம் சொல்லியபோது
பெரிதாய் சட்டை செய்யவில்லை
தற்கொலைவரை போகும்
என்று எண்ணவில்லை
அடுத்த நாள் காலை
சுக்குநூறாக சிதறி இருந்ததில்
என் நூறு முகங்கள்.

Comments