Skip to main content

எனக்குப் பிடித்த இரண்டு விருதுகள்





இந்த ஆண்டு மேலாண்மை பொன்னுசாமிக்கு சாகித்ய அகாதெமி விருதும், வைதீஸ்வரனுக்கு விளக்கு விருதும் கிடைத்துள்ளது. மேலாண்மை பொன்னுசாமி, பொன்னீலன், கந்தர்வன், சமுத்திரம், தமிழ்ச்செல்வன், பா ஜெயப்பிரகாசம் முதலிய படைப்பாளிகள் முற்போக்கு முகாமைச் சார்ந்தவர்கள் என்று முத்திரை குத்தினாலும், அவர்கள் அதையும் மீறி படைப்பாளிகள். முதன் முதலாக மேலாண்மை பொன்னுசாமி கதை ஆனந்தவிகடனில் பிரசுரமானபோது, பரவாயில்லை ஆனந்தவிகடன் இவர் எழுதுகிற கதையெல்லாம் போட ஆரம்பித்துவிட்டார்களே என்று மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. செய்திகளுக்குக் கொடுக்கும் மதிப்பு படைப்புகளுக்குக் கிடைப்பதில்லை. படிக்கிற சுவாரசியத்தையே அடிப்படையாகக்கொண்டு செய்திகளை வெளியிடுகிற பெரும் பத்திரிகைகள் படைப்பாளிகளைக் கண்டுகொள்வதில்லை. ஐந்தாம் வகுப்புவரை படிக்கார மேலாண்மை பொன்னுசாமி 22 சிறுகதைத் தொகுதியும், 6 நாவல்களும், 6 குறுநாவல் தொகுதியும் எழுதியுள்ளார். இது அசாத்தியமான முயற்சியாகவே எனக்குத் தோன்றுகிறது. கிராமத்தில் வசிக்கும் பொன்னுசாமி, இந்த விருது கிராமத்து எழுத்தாளர்களுக்குக் கிடைத்த அங்கீகாரமாக நினைக்கிறார்.


ஜெயகாந்தன் மாதிரி மேலாண்மை பொன்னுசாமியும் தனக்கான கல்வியை தானாகவே பெற்று ஒரு படைப்பாளியாக மிளிர்ந்தள்ளார். அவருக்கு விருட்சம் சார்பில் வாழ்த்துகள்.


சாகித்ய அகாதெமி பரிசு எல்லோருக்கும் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் உரிய தருணத்தில் கிடைப்பதில்லை. அதனால் 'விளக்கு' என்கிற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உரிய படைப்பாளிகளுக்கு விருது கொடுத்து கெளரவம் செய்கிறது. அந்த முறையில் இந்த ஆண்டு கவிஞர் வைதீஸ்வரனை கெளரவித்துள்ளது. கவிஞர் வைதீஸ்வரன் 'எழுத்து' காலத்திலிருந்து எழுதி வரும் கவிஞர். யாராலும் கண்டுகொள்ளாத கவிஞர். 70வயதுக்குப் பிறகு அவருக்கு இந்தப் பரிசு கிடைத்துள்ளது. விளக்கு அமைப்பு சாகித்ய அமைப்பு அளிக்கும் தொகையை கிட்டத்தட்ட அளிக்கிறது. அமெரிக்காவில் வசிக்கும் சிலரால் இந்தப் பரிசு ஒவ்வொரு ஆண்டும் அளிக்கப் படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பரிசு குறித்து ஒரு குறை எனக்குண்டு. ஏன் விளம்பரப்படுத்தாமல் இந்தப் பரிசை கொடுக்கிறார்கள் என்பதுதான் அந்தக் குறை. அதைபோல் விழாவை ஏற்பாடு செய்வதும் எல்லோருக்கும் தெரியாமல் செய்கிறார்கள். ஒரு படைப்பாளியை கெளரவிக்கும்போது ஒரு பெரிய விழா மாதிரி நடத்த வேண்டாமா? வெறும் சடங்கு மாதிரி நடத்தினால் என்ன அர்த்தம்? வைதீஸ்வரனுக்கும் விருட்சம் சார்பில் வாழ்த்துகள்.

Comments