Skip to main content

மொழிப்பெயர்ப்புக் கவிதைகள்




சுக்வீர்


வண்ணங்கள்


வண்ணங்கள் சாவதில்லை

அவை கரைந்து விடுகின்றன

அல்லது அடித்துக்கொண்டு போகப்படுகின்றன

அல்லது பூமியின் அந்தகாரத்தில்

விதைக்கப்படுகின்றன.


வண்ணங்கள் மலர்களாக மாறுகின்றன

மேகங்களின் ஒளிர்ந்து

உதடுகளில் புன்னகை பூக்கின்றன

கண்ணீரைப் பெருக்கி

ஒளியை ஈன்றெடுக்கின்றன

வண்ணங்களாகிய நாம்

வண்ணங்களை உருவாக்கும் நாம்

வாழ்க்கையை

நம் முதுகுகளில் சுமந்துகொண்டோ

நம் பின்னால் இழுத்துக்கொண்டோ

நம் சிறகுகளில் அலைந்துகொண்டோ

இங்கு வந்து சேர

நூற்றாண்டுகளைத் தாண்டியிருக்கிறோம்.


இருள் முதல் ஒளிவரை உள்ள

எல்லா வண்ணங்களுமான நாம்

பல தடவைகளில்

அடித்துக்கொண்டு போகப்பட்டு

மறுபடியும் பிறந்திருக்கிறோம்

இன்றும்

காலத்திரையை வண்ணங்கொண்டு தீட்டுகிறோம்


அனாதிகாலத்தொட்டுப் பிறந்து வரும் நாம்

வாழ்க்கையின் அமுதைக் குடித்ததால்

இன்றும்

நஞ்சுடன் கலந்த வாழ்க்கையமுதைச்

சுவைக்கிறோம்

கனவுகளை உருவாக்குகிறோம்

மூலம் : பஞ்சாபி

(ஆங்கில வழி தமிழில் - மேலூர்)

நவீன விருட்சம் இதழ் 5 - JULY - SEPTEMBER 1989

(சுக்வீர் (1925) நாவல், சிறுகதை, கவிதை இத்துறைகளில் பஞ்சாபி மொழியில் சிறந்து விளங்குகிறார். நான்கு கவிதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன. நாற்பத்தைந்து நூல்களுக்கு மேலாக பஞ்சாபியில் மொழிபெயர்த்திருக்கிறார். அவரது கவிதைகளும் கதைகளும் ஆங்கிலத்திலும் வேறு பல இந்திய, அயல்நாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன)

Comments