Skip to main content

மூன்று கவிதைகள்



கவிதை ஒன்று


வெகு நாட்களுக்குப் பிறகு

எனக்கொரு கடிதம் வந்தது

சுட்டெரிக்கும் வெறுமையின் மத்தியில்

எனக்கென தோன்றிவிட்ட மாயையை

அக்கடிதம் ஏற்படுத்தியிருந்தது

நிரம்பி வழியும் தனிமையின் நிழலை

அழித்துவிடுவதற்கேனும் கடிதம் வந்திருக்கலாம்

இன்னும் கிழித்துப் படிக்கவில்லை

இழந்து போனவர்களில் யாரோ ஒருவர்

இதை அனுப்பியிருக்கக் கூடும்

எதன் அடையாளமாகவேனும்

தெரிந்து கொள்ளும் ஆவலில்

கடிதத்தைக் கிழித்தேன்

அதனுள்

ஏதோவொரு பறவையின்

முறிந்த சிறகு கிடந்தது


கவிதை இரண்டு


இரவுகளின் நடனத்தைக்

கண்டவர்

அவ்வளவு எளிதில் உர்ரான்குவதில்லை

கழிதலறியும் உத்திகளை

எவ்வழியிலேனும் கையாளத்

தயாராக இருக்கிறார்

சுயசெய்கைகளுக்கு உட்பட்ட

காமவெளிப்பாடுகள் துருத்தி நிற்கும்

கழியாத இரவொவ்வொன்றும்

அவரை வீழ்த்த எப்பொழுதும்

காத்துக்கிடக்கின்றன

நடனத்தின் அசைவுக்குள்

விழும் எம்முறையும் வெறுக்கிறார்

நெடியுடன் பிறக்கும் விட்டிலை



கவிதை மூன்று


உதிர்தலில் வாடாத மரங்களின்

பெருமூச்சைக் கடந்து செல்லும்

நதியின் சலனமாக கடவுள் உறங்குகிறார்


ஒரு பூனையின் சாதுர்யமாக

கடவுளின் இல்லத்திற்குள் நுழைந்து

அவரது பஞ்சனைக்கு அருகில் அமர்கிறேன்


அவரின் பாதங்களில்

பிரார்த்தனைச் சீட்டுக்கள் விழுகின்றன

ஒவ்வொரு சீட்டினுள்ளும்

கடவுளின் உஷ்ணத்தில் பிறந்து

சூடு தாளாமல் இறந்து போன

யாரோ ஒருவர் இருக்கிறார்

வெகு சிலர் எனது இருப்பை

கடவுளுக்குத் தெரியப்படுத்த முயலுகிறார்கள்

அவர் இன்னும் உறங்கிக்


என் கோணிப்பை நிறைத்திருக்கும்

விஷத்திலிருந்து இரு சொட்டுக்களை

அவரது வாயில் ஊற்றுகிறேன்

அவை வழுக்கிச் சென்று

மரண முடிச்சைத் தேடுகின்றன


கடவுள் திமிருகிறார்

கண்கள் பிதுங்குகின்றன

சிறிது நேரம் மனிதர்கள் பிறப்பது நிற்கிறது

மூச்சு அடங்குகிறது

கடவுள் இறந்து போகிறார்


கடவுளின் இல்லம் விட்டு நகர்கையில்

எனது வாயிலிருந்து இருபற்கள்

நீட்டி முளைத்து நிற்கின்றன

ஒரு பிசாசின் உருவமாக





Comments

வாழ்த்துக்கள் ஆதவா !
ஆதவன் கவிதைகள் படித்தேன்.
அத்தனையும் உள் மனங்களை பிரதிபலிக்கின்றன. நற்கவி ஆதவா.
வாழ்த்துகள்.