Skip to main content

இரண்டு கவிதைகள்




1. முகம்



விபத்தில் அடிபட்டவனைத் தூக்கிச் செல்லும்

அவசர ஊர்தி கடந்துபோனது

வெட்டப்பட்ட வாழைமரமெனத் தொங்கிய

உடல்முழுதும் ரத்தக்கோலம்

அவன் உயிர்பிழைத்துவிட வேண்டுமென

மனமுருக வேண்டிக்கொண்டேன்

என் பயணம் முழுதும்

நிழலென மிதந்துகொண்டிருந்தது

அவன் சிதைந்த முகம்

அவன் காதலி அவன் அலுவலகம்

அவனை நம்பியிருக்கும் தம்பிதங்கைகள்

எல்லாரைப் பற்றியும் நினைவு வந்தது

அவன் உயிர்

மிகமுக்கியமானது என்று சொல்லிக்கொண்டேன்

ஆறுதலாக ஒரு சொல் மிதக்க

அஞ்சவைத்து மிதந்தது மற்றொரு சொல்

பத்தாண்டுகளுக்கு முன்பாக

விபத்தில் அடிபட்டு இறந்துபோன

நண்பனின் முகம் நினைவில் படர்ந்தது

அரள விதையை அரைத்துக் குடித்து

தற்கொலை செய்துகொண்ட

பள்ளித் தோழியின் முகமும் அசைந்தெழந்தது

அகால மரணமடைந்தவர்கள் ஒவ்வொருவராக

ஆழ்மனத்திலிருந்து எழுந்து வந்தார்கள்

துயரம் படர்ந்த முகங்களுடன்

என்னைச் சுற்றி சூழ்ந்து கொண்டார்கள்

எல்லாரும் ஒரே நேரத்தில் பேசினார்கள்

எல்லாரும் ஒரே நேரத்தில் கேள்வி கேட்டார்கள்

எல்லாரும் ஒரே நேரத்தில் கண்ணீர்விட்டு அழுதார்கள்

ஐயோ போதுமே என்று

காதுகளை மூடி நிமிர்ந்தபோது

உதடுகள் அசையாமல் உற்றுப் பார்த்த

விபத்தில் சிதைந்த முகம்கண்டு உறைந்தேன்



2. வாசலில் விழுந்த பறவை


தற்செயலாக

வாசலில் விழுந்த ஒரு பறவை

காலூன்றி நிற்க முற்சித்தது

தடுமாறித் தடுமாறி விழுகிறது

இடைவிடாமல்

சிறகுகளை அடித்துக்கொள்கிறது

ஐயோ எனத் தாவி

அள்ளியெடுத்து

நீவித்தந்த விரல்உதறி

நழுவி நழுவி விழுகிறது

அதன் வேதனையோ காணப் பொறுக்கவில்லை

நொண்டி நொண்டி

நடந்து செல்வதிலும்

பறப்பதிலும்தான்

அதன் கவனம் குவிந்திருக்கிறது

எப்படிப் பெறுவதோ அதன் நம்பிக்கையை

விடையறியா வலியில் துவள்கிறது மனம்

சில கணங்களுக்கு முன் பார்த்தேன்

பாடி முடித்த ஆனந்தத்தில்

தாழ்வான மரக்கிளையில்

துள்ளித்துள்ளி நடந்துகொண்டிருந்தது

அதன் சிறகின் மஞ்சள் அழகால்

மாலைப்பொழுதே வசீகரமானது

அதன் சின்னச்சின்ன நடை

அழகான ஒரு சித்திரம்


எங்கிருந்தோ பறந்துவந்த கூழாங்கல்

எதிர்பாராமல் அதை வீழ்த்திவிட்டது

எவ்வளவோ தடுமாற்றம்

எவ்வளவோ வேதனை

எப்படியோ எழுந்து பறந்தோடிவிட்டது

Comments