Skip to main content

அஞ்சலி : கிருத்திகாவும், சுகந்தியும்............





பிப்ர. 11ஆம் தேதி சுகந்தியும் (வயது 41), 13ம் தேதி கிருத்திகாவும் (வயது 93) மறைந்து விட்டனர். அவர்களுக்கு 'அஞ்சலி'க்கு ஏற்பாடு செய்தனர், மாலதி மைத்ரியும், சுகிர்தராணி போன்ற சிலர் 'அணங்கு' அமைப்பின் மூலம் அஞ்சலிக்கான கூட்டம் சந்திரலேகா (நடனக் கலைஞர்) இல்லத்தில் பிப்ரவரி 28ம் தேதி மாலை நடைப்பெற்றது.


இருவரின் உருவப்படங்களும் (கோட்டோ வியங்களாக) அஞ்சலியன்ற திறக்கப்பட்டன. கிருத்திகாவின் உருவத்தை மணிவண்ணனும், சுகந்தியின் உருவத்தை யோகநாதனும் உருவாக்கி இருந்தனர். சுகந்தியின் சில கவிதைகள் பிரசன்னா ராமசாமியால் நாடக வடிவாக்கப்பட்டன. அசோகமித்திரன், மங்கை, சிட்டியின் மகன் வேணுகோபால், இளம்பிறை, ஏ எஸ் பன்னீர்செல்வம் மற்றம் சிலரும் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டனர்.


மாலதி மைத்ரி தனது ஆரம்ப உரையில் கிருத்திகாவின் எழுத்துக்களை வாசித்ததில்லை. சுகந்தியின் எழுத்துக்களையும் இப்போதுதான் வாசிக்க நேர்ந்தது. அதற்காக தான் மிக மனவருத்தம் அடைவதாகவும், பெண்களின் எழுத்துக்களையாவது பெண்கள் தவற விடாமல் படித்து அதன் தொடர்ச்சிப் பற்றி மனதில் கொள்ள வேண்டும் என்றார். சித்தர் மரபு சுகந்தி என்றார்.


சுகந்தியின் கவிதைகளில் சில நாடகமாக ஆக்கியிருந்த பிரசன்னா அதில் மூன்று நிலை பெண்களைக் குறியீடாகக் கொடுத்திருந்தார். நைட்டி அணிந்தது, சுடிதார் அணிந்தவர், புடவை அணிந்தவர் என. அது கல்வி மற்றும் பொருளாதாரம் சுயஉணர்வு போன்றவற்றை கூறியது. ஒற்றை ஒற்றையாய், ஒரே தளத்தில் ஒரே இருப்பில் இருக்கும் பலரும் தனித்தனியாகவே உலா வருகின்றனர்.


கலவரம் பெண்களைப் பலி கொள்கிறது. ஏதென்று அறியாமலே ஆண்களால் வதைக்கு ஆளாக்கப் படுகின்றனர் பலர். பாதுகாப்புக்கான வீடும், பாதுகாப்புத் தராமல் குழந்தைகளையும், முதியவர்களையும், பெண்களையும் அழிக்கிறது. தப்பிக்க எங்கு செல்ல? வீடும் மரணத்தை தன்னுள் நிரப்பி சுவாசத் திணறலுக்கு உள்ளாக்குகிறது (நகரமெங்கும் கலவரம் - கவிதை).


முகங்களுடன் முகம் என்ற கவிதையும், தனிமுகங்கள் சிலமானதைக் கண்டுகொண்ட பெண்கள், அதைத் தேடி அலையும் நிலையும், எப்படியேனும் கண்டடையும் தீர்மானத்துடன் உலவி அலையும் நிலையும் பதிவாக்கி இருந்தனர். அந்த மூன்று பெண்களும் இறுதியில் அலையும் பெண்கள், தனித்தனியல்ல ஒற்றைப்பெண் என கலந்து வருகின்றனர்.


நாடகம் முழுவதும் பெண்கள் அலைந்து கொண்டே இருந்தனர், தேடலுக்கானதாய். சுகந்தியின் தொலைந்த நிலையும், பெண்களின் அலைந்த நிலையும் பதிவானது.


அசோகமித்திரனின் சுகந்தியைக் குறித்தப் பேச்சு நெகிழ்ந்தும், உணர்வு நிறைந்தும் இருந்தது. மனப்பிறழ்வுக்கு ஆளான சகோதரியுடன் வசித்ததால் சுகந்தியின் மனப்பிறழ்வு குறித்து தீர்மானத்துடன் அவரால் உரையாற்ற முடிந்தது. சுகந்தியின் தெறிவு நிலையிலும், பிறழ்வு நிலையிலும் கண்டவர் அசோகமித்திரன் சொந்த அனுபவம் கலந்த பதிவாகத் தந்தார்.


'இந்நோய்க்கு மருந்து கிடையாது. பூரண குணமும் கிடையாது. நோயாளியைத் தூங்க வைக்க வலுக்கட்டாயமாக - மாத்திரைகளைக் கொடுப்பதுதன் வழி. ஆனால் உறக்கம் கலைந்ததும் நோயாளி திரும்பவும் பழைய நிலையை அடைந்து விடுவார். உறக்கத்திற்கான மருந்துகள் உடலில் ஏற்படுத்தும் பக்க விளைவுகள் வெளியில் தெரியவந்தாலும், மற்றவர்கள் அறிந்திருந்தாலும் கூட வேறு வழியற்றுத்தான் போகிறது,' என்றார்.


இளம்பிளை தான் சுகந்தியை அரை மணி நேரம் மட்டும் சந்தித்த நிகழ்வுபற்றி குறிப்பிட்டுப் பேசினார். ஏதும் பதிலுரைக்காத வந்து பார்த்ததாகவும் மகிழ்வோது ஏற்றுக்கொள்ளாத சுகந்தியைத்தான் அவர் சந்தித்ததாகக் கூறினார். ஒற்றை வரியில் எல்லாக் கேள்விகளுக்கும் பதிலும், சற்றே அவரின் அலுப்பான சந்திப்பாகவே அது இருந்தது என்றும் குறிப்பிட்டார்.


அசோகமித்திரன், கிருத்திகா பற்றிக் குறிப்பிடும்போது அவரின் கணவர் ICS அதிகாரி. நேருவின் கீழ் இருக்கும் முதன்மை அதிகாரிகளில் ஒருவராக இருந்தார் என்றும் அது கிருத்திகாவின் அரசியல் பற்றிய நாவலுக்கு அடித்தளமாயிற்று என்றும் குறிப்பிட்டார். கிருத்திகாவின் நாவல் வாசவேஸ்வரம் வந்த சமயத்திலேயே தி ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்' நாவலும் வெளிவந்தது. எனவே வாசவேஸ்வரம் பேசப்படாமல் போயிற்று. அம்மா வந்தாள் அதிகம் பேசிக்கொண்டே இருக்கப்பட்டது.


ஏ எஸ் பன்னீர்செல்வம் கிருத்திகாவின் வாசவேஸ்வரம் நாவலை இரண்டாம் பதிப்பு கொணர்ந்தவர். சிட்டியின் மகன் வேணுகோபால் கிருத்திகா பற்றிய இலக்கியமில்லாத சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். 'வாசவேஸ்வரம்' கையெழுத்துப் பிரதியாக முதன் முதலில் சிட்டியிடம்தான் அளிக்கப்பட்டது. ஆனால் சிட்டி அதை உடனே படிக்கும் எண்ணம் கொண்டிருக்கவில்லை. ஒரு பெண்ணின் எழுத்து, நாவலில் (அதிலும்) பெரிதாக என்ன இருந்துவிடப் போகிறது என்ற இன்றைய மாறாத மனோபாவமே அன்றும் அவர் கொண்டிருந்திருக்கிறார். சில நாட்கள் கழித்துப் படித்துப்பார்க்க மீள முடியாத ஆச்சரியத்துடன் பாராட்டையும் இருக்கிறார். அது முதல் என்றென்றும் கிருத்திகாவின் எழுத்துகளைப் பிறரிடம் எடுத்துரைப்பதும், அவரை உற்சாகிப்பதுமாக தொடர்ந்து செயலாற்றி இருக்கிறார் சிட்டி என்பதையும் அவர் மகன் வேணுகோபால் கூறினார்.


பன்னீர் செல்வம், இந்திரா பார்த்தசாரதி போன்ற பலரும் கிருத்திகா தனக்கென ஏற்படுத்திக்கொண்ட தனி வெளியைப் பற்றி எடுத்துரைத்து, பெண்கள் தனக்கான வெளியில், அந்தரத்தைக் காத்துக்கொண்டால் மன அழுத்தத்திலிருந்தும், மனச்சிக்களிலிருந்தும் விடுபட இயலும் என்றார். அந்தக் காலத்திலே டென்னிஸ் உடையுடன் பயறிசியை மேற்கொண்டவர் கிருத்திகா. கணவர், மகள், என் எல்லோரிடமிருந்தும் விடுபட்ட தனக்கென்ற ஒரு உள்வட்டம் ஏற்படுத்திக்கொண்டு அதைக் கடைசிவரையிலும் தக்க வைத்துக் கொண்டவர்.


ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் படைப்புகளைக் கொடுத்தாலும் ஆங்கிலத்தில் இருந்த சுதந்திரம், தமிழில் கிட்டவேயில்லை என்ற எண்ணத்தையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தவர் கிருத்திகா. தமிழின் இலக்கிய அரசியல் என்றென்றும் நிலையானது போலிருக்கிறது. கிருத்திகாவின் கல்வி, வளர் சூழல், கணவரின் பணி, பொருளாதாரம், தன் விழிப்பு போன்ற எல்லாவற்றுடனும் தான் அவரின் உள்வட்டம் சாத்தியமாயிருக்கக்கூடும். தன்னை எதிலிருந்தும் விடுவித்துக்கொண்டு இயங்கக்கூடிய சூழல் கொண்ட கிருத்திகாவின் உள்வட்டம் சாதாரணப் பெண்களும் சாத்தியமாக்கிக் கொள்ள வேண்டும். வேண்டியது என்றாலும் கூட வீட்டின் ஒரு அறை கூட பெண்ணுக்கென தனியாக அமைக்கப்படாமல், சமையலறையின் சுவர்களுக்குள் தன் இடம் பொருத்திக் கொள்ளும் பல பெண்களுக்கு பெண் எழுத்தாளர்களுக்கு அது சாத்தியமற்றது. தனியாக குடும்பம், குழந்தை என்று வாழ்க்கை முழுவதும் போராடும் சற்றே தனித்து நிற்கும் பெண்களுக்கும், தனக்கென ஒரு சிறு வெளியயுமின்றி வாழும் அவர்களுக்கும் இவை ஏதும் சாத்யமற்றது.


தனக்கென உள்வட்டத்துடன் வாழ்ந்த கிருத்திகாவும், தனக்கென வட்டம் வாழ்வும் என்ன என்றே அறிந்திராத சுகந்தியும் படைப்பு என்ற பொது வட்டத்தினுள் அஞ்சலி.

Comments