Skip to main content

மூன்று கவிதைகள்






கவிதை : ஒன்று


சிலருடன் பேச விரும்புகிறோம்

ஆனால்பேச முடிவதில்லை


சிலரைப் பார்க்கவே விரும்புவதில்லை


சிலரைத் தேடிப் போகிறோம்


அகப்படுவதில்லை


சிலர்முன்னால்


தேவைப்படாமல் தட்டுப் படுகிறோம்


வானத்தில் கோலம் போடுவதுபோல்


பறவைகள் பறந்து கொண்டிருக்கின்றன


தினமும் அப்படி எதிர்பார்க்க முடியுமா?


ஒருநாள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்


ஒருநாள் துக்கமாக இருக்கிறோம்


காரணம் புரிவதில்லை


உருண்டோடிப் போகும் காலப் பந்து


புரியாத புதிராக எட்டி


உதைக்கப் படுகிறது





கவிதை : இரண்டு



ஹஸ்தினாபுரத்தின் கிளை அலுவலகத்தில்


காலை வைத்ததும் ஒரே இருட்டு


ஜெனரேட்டர் இன்னும் பிக்அப் பண்ணவில்லை


பல்லைக் கடித்தபடி சீட்டில் அமர்ந்திருந்தேன்


கணினியில் எண்களைத் தடவி தடவி தட்டினேன்


விழுந்தனதப்புத் தப்பாய் எண்கள்


வாடிக்கையாளர் முன்னாள்


தலையில் அடித்துக்கொண்டேன்
வாசலில் போய்தனியாக வெயிலின்


புழுக்கத்தைப் போக்கிக்கொள்ள நின்று கொண்டிருந்தேன்


புழுக்கமில்லாத வெளி இதமாய் இருந்தது


இப்போதெல்லாம்


ஏனோ எனக்கு சிரிப்பே வருவதில்லை




கவிதை : மூன்று



கூட்டங்களில் நான்


தூங்குவது வழக்கம்


இலக்கியக் கூட்டங்களில்


நன்றாய் தூக்கம் வருகிறது


வகுப்புகளில் மாட்டிக்கொண்டால்


தூக்கம் தவிர்க்க


வகுப்பு வாசலில் நிற்பேன்


அலுவலகத்தில் நடக்கும்


கூட்டத்தில்தூங்கும்போது


யார் பேசுகிறார்கள்


என்பதை கவனமாய் கவனிப்பேன்


தூக்கத்தில் தலை ஆடுகிறதா என்றும்


ஆடும் தலையை யாராவது கவனிக்கிறார்களா என்றும்


பார்ப்பேன்


அப்படியும்


சற்று தூக்கம் என்னைக் கவர்ந்துவிடும்


தூக்கம் வரும்போது


பேசுபவர்கள் என்னை அத்திரத்தோடு
முறைத்துப் பார்ப்பதாக தோன்றுகிறது


முஷ்டியை மடக்கிக்கொண்டு முகத்தில்


ஓங்கி குத்த வேண்டுமென்று


பேசுபவருக்குத் தோன்றுகிறதோ...
ஆனால்


இரவில் குறைவாக தூங்குவது


என் வழக்கமாயிற்று






Comments