Skip to main content

எதையாவது சொல்லட்டுமா....12






20 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன் நம் தமிழ் பத்திரிகைகளைப் படித்தவர்கள் புரிந்துகொண்ட விஷயம். தொடர்கதைகள், கதைகள் எல்லாம். ஆனந்தவிகடன் என்ற பத்திரிகை முத்திரைக் கதைகளை எல்லாம் பிரசுரம் செய்திருக்கிறது. இன்று ஜெயகாந்தன் என்ற எழுத்தாளரை அறிவதற்கு ஆனந்தவிகடன் ஒரு காரணம். குமுதம் பத்திரிகை சாண்டில்யன் போன்ற படைப்பாளியெல்லாம் அறிமுகம் செய்திருக்கிறது.

பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேந்திர குமார், ராஜேஸ்குமார் , புஷ்பாதங்கத்துரை போன்ற பிரபல எழுத்தாளர்களையும் இந்த லட்சக்கணக்கான பிரதிகள் விற்கும் பத்திரிகைகளில் வலம் வந்தவர்கள்.இன்றைக்குப் பிரபலமாக அறியப்படும் சுஜாதா என்ற எழுத்தாளர் குமுதம் பத்திரிகையில் முதன் முதலாக தொடர்கதை மூலம் அறியப்பட்டவர்தாம். என் நண்பர் ஸ்டெல்லா புரூஸ் ஆரம்பத்தில் காளி-தாஸ் என்ற பெயரில் கவிதைகள் எழுதியவர். பின்னர் ஸ்டெல்லா புரூஸ் என்ற பெயரில் தொடர்கதைகளை ஆனந்தவிகடனில் எழுத ஆரம்பித்த பிறகு பிரபலமானார்.

இப்படி பிரபல பத்திரிகைகளில் எழுதுபவர்களுக்கு ஏகப்பட்ட வாசகர்கள் வாசகிகள் கிடைப்பார்கள். அண்ணாசாலையில் உள்ள பொது நூலகத்தில் நடந்த ஒரு வாசகர் சந்திப்பில் சுஜாதாவை நான் சந்தித்திருக்கிறேன். அதில் பாலகுமாரன் ஆரம்ப எழுத்தாளர். சுஜாதா தடுமாறி தடுமாறிப் பேசியதாக ஞாபகம். ஏன் இதெல்லாம் இப்போது சொல்கிறேன் என்றால், மேலே குறிப்பிட்ட பத்திரிகைகள் இப்போதெல்லாம் தொடர் கதைகள், சிறுகதைகளைப் பிரசுரம் செய்வதில்லை. இன்று இது பெரிய ஆபத்து என்று தோன்றுகிறது. வெறும் செய்திகளை மட்டும் தீனியாக இப் பத்திரிகைகள் வெளிப்படுத்துகின்றன.

ஏன் அப்படி சொல்கிறேன் என்றால் பிரபல பத்திரிகைகள் மூலம்தான் தீவிர இலக்கியப் பத்திரிகைகளைப் படிக்க வாசகர்கள் தயாராவார்கள். தமிழில் படிப்பது என்பதை முதலில் இப் பத்திரிகைகள் மூலம்தான் உருவாக்க முடியும். அதனால் அன்றைய வாசகர்களுக்கு கதைகள், தொடர்கதைகள் போன்றவற்றில் அறிமுகம் கிட்டின. ஆனால் இன்றைய வாசகர்கள் இப்பத்திரிகைகளில் வெளிவரும் மேம்போக்கான செய்திகளை மட்டும் அறிகின்றனர். இது பெரிய ஆபத்தை உருவாக்கி விடும். கதை என்றால் என்ன என்று வகுப்பு எடுக்கும் நிலைக்குத் தள்ளிவிடும். பத்திரிகை மூலம் படிப்பது வேறு, நேரிடையாக ஒரு நாவலைப் படிப்பது என்பது வேறு. இந்தப் பெரிய பத்திரிகைகள் தப்பான அறிமுகமாக ஒரு பக்கக் கதைகளை அறிமுகப்படுத்துகின்றன. அக் கதைகள் போன்ற அபத்தம் வேறு எதுவுமில்லை.

மேலும் இப் பத்திரிகைகள் செய்திகளை, குறிப்பாக சினிமா செய்திகளை வாரி வழங்குகின்றன. நடிகர் நடிகைகள் பற்றிய கிசுகிசுப்புகள் அதிகம். அரசியல் எல்லாம்.

தினசரிகளான தினமணி, தினமலர் எல்லாம் செய்திகளை வாரிவழங்குகின்றன. இச் செய்திகள் மூலம் பலவற்றை அறிந்துகொள்ள முடிகிறது. அறிவுபூர்வமாக தினமணி தலையங்கங்களை எழுதுகின்றன. உலகம் முழுவதும் நடக்கும் செய்திகளை எப்படி கிளுகிளுப்பாக மாற்றுவது என்ற கலையை தினமலர் செய்து காட்டுகிறது. இன்னும் பல செய்தித் தாள்கள் இப் பணியை செய்தவண்ணம் உள்ளன. ஆனால் கதைகளேளா, கவிதைகளோ, தொடர் கதைகளோ நடைபெறவில்லை. வாசகர்கள் இச் செய்திகளைப் படித்தாலே போதும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவார்களோ என்ற அச்சம் நிலவுகிறது. கதை எழுதுபவர்கள் செய்தி மூலம் பலவற்றைத் தெரிந்துகொள்வது அவசியம் என்றாலும், கதை என்பது வேறு, செய்தி என்பது வேறு. செய்தி நம்மைச் சுற்றிலும் நடக்கும் விஷயங்களை மட்டும்தான் கொடுக்கும். ஆனால் கதைகள் வாழ்க்கையின் கூறுகளை யதார்த்தங்களை மனதை உலுக்கும்படி வெளிப்படுத்தும்.

செய்திகள் ஒரு கட்டத்தில் நின்று விடும். ஒரு அதிர்ச்சியான செய்தியைச் சொல்லி விட்டு அடுத்த அதிர்ச்சியான செய்திக்குத் தாவிவிடும். கதையோ அப்படி அல்ல. எழுதப்பட்டவுடன் பலமுறை படிக்க படிக்க வாழ்க்கையை வேறுவிதமாகப் புரிய உதவி செய்யும்.

இப்பத்திரிகைகள் செய்திகளை கதைமாதிரி சுவாரசியமாக எழுதினால், கதையில் நிற்கக் கூடிய உணர்வை, புத்திக்கூர்மையை அவை வெளிப்படுத்த முடியாது. செய்தி அப்படியே நின்று விடும். கதை நகர்ந்துகொண்டே இருக்கும். அந்தக் கதைத் தன்மையே முழுவதும் அழிந்துவிடும் நிலையில் செய்திகள் மட்டும் வந்தவண்ணம் உள்ளன. வாசகர்களும் செய்திகளுடன் நின்று விடுகின்றனர்.

இன்று சிறுபத்திரிகைகள் மட்டும் கதைகளை வெளியிட்ட வண்ணம் உள்ளன. ஆனால் அதிகம் வாசகர் இல்லாத சிறுபத்திரிகைகள் இருந்துகொண்டே இருக்கின்றன.

Comments

na.jothi said…
இந்த சீரியல் கலாச்சாரம் வளர்ந்தது கூட
இதுமாதிரியான தொடர்கதைகள் குறைந்ததால் இருக்கும் என தோன்றுகிறது