Skip to main content

வண்ணத்துப்பூச்சிகளைச் சூடிக்கொண்டவள்




அவன் தன்

வேட்டைப்பற்களை மறைக்க

தேவதூதனையொத்தவொரு

அழகிய முகமூடியைத் தன்

அரக்க முகத்தில் மாட்டிக்கொண்ட

பின்னரான பொழுதொன்றில்தான்

அவள் அவனைப் பார்த்தாளெனினும்

ஒரு செங்கழுகின் சூட்சுமத்தோடலையும்

அவனது விஷப்பார்வையை அறிந்திட்டாளில்லை

அக்கழுகு

அழகிய பெண்களின் மாமிசப்பட்சி

அவர்தம் வாழ்வினைக் கொழுவி

உயிர் எஞ்சத் துண்டுகளாய்

வெட்டியெடுத்துச் சப்பிச் சிரிக்கும்

கோரங்களைக் கொண்டவை அதனது நாட்கள்

அவள்

செந்தாமரை மலரொத்தவொரு

தேவதைக்குப் பிறந்தவள்

ஏழ்மையெனும் சேற்றுக்குள்

வனப்பு நிறைக்க மலர்ந்தவள்

அன்பைத்தவிர்த்து ஏதொன்றும் அறியா

அப்பாவிப்பெண்ணக் கழுகின்

கூர்விழிகளுக்குள் விழுந்தவள்

சுவனக் கன்னியையொத்த

தூய்மையைக் கொண்டவளின்

கவனம் பிசகிய கணமொன்றிலவன்

கவரும் இரையுடனெறிந்த காதல் தூண்டிலின் முள்

மென்தொண்டையில் இலகுவாக இறங்கிற்று

என்றுமே உணர்ந்திராதவொரு

விபரீதக் குருதிச்சுவையை நா உணர்ந்திற்று

நேசத்தினைச் சொல்லிச் சொல்லி

அவளது சதைகளை அவ்விஷப்பட்சி

தின்றரித்து முடிந்தவேளையில்

வாழ்வில் காணாவொரு துயரத்தை

அவள் கண்கள் விடாதுசொரிந்திட

எந்நாள்பொழுதும் தீராப்பசியோடவன்

வேறொரு அழகியை ஈர்க்கச் சென்றான்

இயல்பை மறந்த நாட்கள் தொடர்ந்து வர

அவளது தேவதைப்பாடல்கள் சோரலாயின

ஆழி நடுவிலொரு ஒற்றைப்படகிலமர்ந்து

சூழ்ந்த தனிமைக்கும் துயருக்கும்

மீளப்பெறமுடியா இழப்புக்குமாக

வசந்தகாலத்து வனங்களின்

வண்ணத்துப்பூச்சிகளைத் தன்

அரணாக அவள் சூடிக் கொண்டாள்

இன்று

மீட்டமுடியாக் காலத்தின் வினைகளைத்

தம் இச்சையால் உணர்ந்த பல திமிங்கிலங்கள்

இடையறாது படகை

வட்டமிட்டுக் கொண்டேயிருக்கின்றன


Comments