Skip to main content

Posts

Showing posts from November, 2010

அவர்கள்..

* அதன் பிறகு அவர்கள் வரவேயில்லை ஒரு மௌனத்தை உடைத்து நிழலை வெயிலில் ஊற்றிய பிறகு ஒரு கோரிக்கையை கிழித்துக் குப்பையில் எறிந்தபிறகு ஒரு புன்னகையின் அகால மரணத்துக்குரிய ஈமக் காரியங்களுக்கு பிறகு கனவின் கூச்சல்களை மொழிப்பெயர்த்து வாசித்துக் காட்டிய மனப் பிறழ்வுக்கு பிறகு ஒவ்வொன்றின் உதிர்விலும் தடயமற்று போவதிலும் இருந்த அவர்கள் அதன் பிறகு வரவேயில்லை..

சாட்சிகளேதுமற்ற மழை

கதவு யன்னல்களிலிருந்து வழிகின்றன முகங்கள் கொட்டப்படும் நீர்த்தாரைகளைப் போல கைகளில் கட்டப்பட்டிருக்கும் நுண்ணிய கயிறுகளை அவிழ்த்துக் கொண்டு பார்த்திருக்கும் அவற்றின் விழிகளில் நிழலாக அசைகின்றன பாதையோர மரங்களும் ஈரப் பறவைகளும் மழையும் ஒரு தெருச் சண்டையும் புன்னகையும் சிரிப்பும் எள்ளலும் சுழிப்பும் முணுமுணுப்பும் அருவருப்பும் கலந்த உணர்ச்சிகள் மழைச்சாரலிடையில் அங்கிங்கு தாவும் தவளைகளைப் போல அவதானித்திருக்கும் முகங்களில் மாறிட பேய்களின் வாய்களுக்கெனவே பிறப்பெடுத்தவை போல வெளியெங்கும் வீச்சமேற்றுகின்றன பிணங்களின் வாடையுடனான அழுக்கு மொழிகள் இடி வீழ்ந்து இலைகள் கிளைகள் எரிய மொட்டையாகிப்போன மரமொன்றென நடுத்தெருவில் நின்று ஓலமிட்டழுதாள் மேலாடையுரிக்கப்பட்ட குடிகாரனின் மனைவி புதைக்கப்பட்ட விரல்களில் புழுக்களூர்வதைப் போல நேச உணர்வேதுமற்றவன் தன் தாக்குதலைத் தொடர்ந்தான் நத்தைகள் ஆமைகளைப் போல தங்களை உள்ளிழுத்து கதவுகளைப் பூட்டிக்கொண்டன தெருவில் நிகழ்ந்த கொலையைக் கண்டமுகங்கள் எதையும் காணவில்லையென்ற பொய்யை அணியக்கூடும் இனி அவர்தம் நாவுகள்

பூனைகள்.....பூனைகள்.......பூனைகள்.....பூனைகள்...30

சாபம் வைதீஸ்வரன் என் காலடியில் ஒரு பூனை கடவுளை வேண்டித் தவம் இருக்கிறது என் கை தவறி விழும் இட்டிலிக்காக. அதன் தவத்தை உண்மை யாக்க நான் குட்டிக் கடவுளாகி இட்டிலியைத் தவற விடுவேன். பல தடவை நான் கோணங்கிக் கடவுளாகி இட்டிலியை கைவிடாமல் கட்டை விரல் காட்டுவேன் பொறுமை வறண்ட பூனையின் அரை வெள்ளைக் கண்களில் ஒரு நரகம் தெரியும் விரல் முனையால் சிறிது பல் முளைக்கும். நள்ளிரவில் இருள் அறுக்கும் ஓலம் பூனைக் குரவளைக்குள் ஓரெலியின் இரத்தம் பீச்சி யடிக்கும். கனவுக்குள் நான் எலியாகி இறந்த பின்பும், விழித்துப் பதறிக் கொண்டிருப்பேன். ஏனென்று தெரியாமல்

லதாமகன் கவிதை

அந்த நிலத்தில் ஒரு பொம்மை இருந்தது. பிறகு ஒரு குடில் இருந்தது பிறகு ஒரு இடிபாடு இருந்தது பிறகு சில பிணங்கள் இருந்தது பிறகு ஒரு பங்கீடு இருந்தது பிறகு நிறைய சமாதி இருந்தது பிறகு ஒரு பிரளயத்தில் எல்லாம் அழிந்தது பிறகு அங்கு கடவுள் வந்தார்.

நான், பிரமிள், விசிறி சாமியார்....16

பிரமிள் அடிக்கடி என்னை சந்திக்காமலே பல மாதங்கள் இருப்பார். சில சமயம் அடிக்கடி சந்தித்துக் கொண்டும் இருப்பார். பக்கத்தில் சந்திக்கும் தூரத்தில் இருந்தாலும் கடிதங்கள் எழுதிக் கொண்டிருப்பார். ஒரு சமயம் சந்திக்காத சமயத்தில் நான், குவளைக்கண்ணன், யுவன், தண்டபாணி நால்வரும் டிரைவ் இன்னில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தோம். தூரத்தில் பிரமிள் வேறு சில நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். நான் அவரை கவனிக்கவில்லை. அப்போதுதான் பிரமிள் என்னைப் பார்க்க விரும்புவதாக அவருடன் இருந்த ஒரு நண்பர் மூலம் சொல்லி அனுப்பினார். நான் அவர் வந்திருப்பதை அப்போதுதான் கவனித்தேன். என் நண்பர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு பிரமிள் இருக்குமிடத்திற்கு வந்தேன். அவரைத் திரும்பவும் பார்க்கும்போது, என்னை அறியாமலேயே ஒருவித பரிதாப உணர்வு எனக்கு ஏற்பட்டது. இதுமாதிரி அனுபவம் எனக்கு ஆத்மாநாமை ஒரு முறை ஞாநி இருக்குமிடத்தில் ஒரு கூட்டத்தில் சந்திக்கும்போது ஏற்பட்டது. அதேபோல் கோபிகிருஷ்ணனைப் பார்க்கும்போது ஏற்படும். காரணம் புரியாது. பிரமிள் அப்போது தேவதேவன் உடல்நிலை பாதிப்பு அடைந்ததைப் பற்றி சொன்னார். கேட்கும்போது வருத்தமாக இர

அது என்ற ஒன்று..

ஒவ்வொரு துரிதக் கணத்திலும் நீங்கள் ஒன்றைத் தவறவிடுவீர்கள் அது உங்களின் ஒரு பகுதி என்பதை நம்ப மறுப்பீர்கள் அதை ஏற்றுக் கொள்வதில் இருக்கும் அசௌகரியத்தை வாதிட்டு வென்று விடுவீர்கள் பாதுகாப்பைக் கோரும் ஒரு அபலையின் நடுங்கும் விரல்களைப் போல் அது உங்கள் அறைக்குள் ஓர் இடம் தேடி அலைவதை கவனிக்க மறந்து விடுவீர்கள் உங்கள் துயரத்தின் பாடலை அது ரகசியமாய் சேமித்து வைத்திருக்கும் உங்கள் தோல்வியின் குறிப்புகளை அது உங்கள் முதுகுக்குப் பின்புறமிருந்து எழுதிக் கொண்டிருக்கும் உங்கள் மௌனங்களுக்குள் நீங்கள் கேட்டிராத முனகல்களை இழைப் பிரித்துக் கோர்த்து வைத்திருக்கும் அது ஒரு சரியான சந்தர்ப்பத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கும் உங்களை நோக்கி ஒரு பிரகடனத்துக்காக உங்கள் மீதான ஒரு புகாருக்காக நீங்கள் தான் உங்களின் அவமானம் என்பதை உரைப்பதற்காக அது காத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு துரிதக் கணத்திலும் நீங்கள் தவற விடும் அந்த ஒன்று உங்களின் ஒரு பகுதி என்பதை இப்போதும் நம்ப மறுப்பீர்கள்..!

வீடு

மூதாதையர்கள் வாழ்ந்த இடம் நாங்களனைவரும் வளர்ந்த இடம் ஓடிவிளையாட நிறைய மறைவிடங்கள் இருந்த இடம் எப்பொழுதும் சந்தன வாசம் கமழும் இடம் சமையலறையில் விறகு அடுப்பு அணைக்கப்படாமல் சதா எரிந்து கொண்டேயிருந்த இடம் தாத்தா, பாட்டி புழங்கிய பொருட்களால் அவர்களது ஞாபகங்களை மீட்டெடுக்கும் பணிகளைச் செய்த இடம் வீசிய புயலுக்கு தாங்காமல் ஆங்காங்கே விரிசல் கண்டது சுவர்கள் இதோ பொக்லைன் இயந்திரம் தரைமட்டமாக்கிக் கொண்டுள்ளது எங்கள் பொக்கிஷத்தை இனி எங்கள் ஞாபகங்களில் தான் வாழும் இந்த வீடு.

எதையாவது சொல்லட்டுமா - 31

இங்கு இதுதான் எழுத வேண்டுமென்பதில்லை. மனதில் படும் எதையாவது எழுதுவதுதான் இந்தப் பகுதி. அதை எல்லோரும் படிக்கும்படியாக எழுத வேண்டும். இதுதான் என் நோக்கம். உண்மையில் தினமும் எதையாவது எழுதலாமா என்று யோசிப்பதுண்டு. ஆனால் முடிவதில்லை. சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சில நிகழ்ச்சிகளைப் பற்றி எழுதலாம் என்று நினைக்கிறேன். சி சு செல்லப்பா சென்னை திருவல்லிக்கேணியில் தனியாக வீடு வாடகை எடுத்துக்கொண்டு அவருடைய மனைவியுடன் வந்துவிட்டார். இருவரும் வயதானவர்கள். முடியாதவர்கள். சி சு செல்லப்பாவின் புதல்வர் பங்களூரில் தன் குடும்பத்துடன் வசித்து வந்து கொண்டிருந்தார். சி சு செவால் புதல்வருடன் இருக்க முடியவில்லை. துணிச்சலாக வந்து விட்டார். கூட அவருடைய உறவினர் சங்கரசுப்பிரமணியன் வசித்து வந்தார். சங்கரசுப்பிரமணியனின் தாயார் சி சு செல்லப்பாவின் மனைவியின் மூத்த சகோதரி. அவர் சென்னையில் இருந்த இந்தத் தருணத்தில்தான் நான் அவரைச் சந்தித்தேன். சி சு செல்லப்பாவை முதன் முதலாக க.நா.சுவின் இரங்கல் கூட்டம் போது சந்தித்தேன். அப்போது அவர் அழுக்கு வேஷ்டியும், சட்டையும் அணிந்திருந்தார். எளிமையான மனிதர். அந்தக் கூட்டத

எதையாவது சொல்லட்டுமா / 30

தீபாவளிக்கு அடுத்தநாள் என் இடது கண்ணைப் பார்க்க சகிக்கவில்லை. கண் வீங்கியிருந்தது. கண்ணில் வலியும் இருந்தது. எனக்கு பயம் வந்துவிட்டது. அன்று என் அம்மாவின் திதி. நானும் சகோதரனும் சேர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அம்மாவின் திதியை நடத்துவோம். என்னைப் பார்த்தவுடன் என் சகோதரன். ''என்ன மெட்ராஸ் ஐ யா?'' என்றான். பின் ''கிட்ட வராதே...எல்லாருக்கும் பரவிவிடும்'' என்று கூப்பாடு போட்டான். எனக்கு எப்படி இந்த நோய் வந்தது என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன். புரியவில்லை. அன்று திதி முடிந்து அவன் வீட்டிற்கு என் சகோதரன் போனபோது அவனுக்கும் மெட்ராஸ் ஐ வந்துவிட்டது. இந்த மெட்ராஸ் ஐ எப்படிப் பொறுத்துக் கொள்வது என்பது தெரியவில்லை. நான் பெரும்பாலும் வசிக்கும் சீர்காழி வங்கிக் கிளையில் யாரோ ஒரு வாடிக்கையாளர் கருப்பு நிற கண்ணாடி அணிந்து வந்திருந்தான். அவன் மூலம் எனக்குப் பரவியிருக்க வாய்ப்புண்டா என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. கண்ணில் அழுக்குகள் சேர்ந்தால் அது மெட்ராஸ் ஐ ஆக மாறிவிடுமோ என்று தோன்றியது. என் கண் எப்போதும் சிவப்பாக இருக்காது. கண் சிவப்பாக மாறினால் அதற்குப

எதையாவது சொல்லட்டுமா / 29

தீபாவளிக்கு அடுத்தநாள் என் இடது கண்ணைப் பார்க்க சகிக்கவில்லை. கண் வீங்கியிருந்தது. கண்ணில் வலியும் இருந்தது. எனக்கு பயம் வந்துவிட்டது. அன்று என் அம்மாவின் திதி. நானும் சகோதரனும் சேர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அம்மாவின் திதியை நடத்துவோம். என்னைப் பார்த்தவுடன் என் சகோதரன். ''என்ன மெட்ராஸ் ஐ யா?'' என்றான். பின் ''கிட்ட வராதே...எல்லாருக்கும் பரவிவிடும்'' என்று கூப்பாடு போட்டான். எனக்கு எப்படி இந்த நோய் வந்தது என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன். புரியவில்லை. அன்று திதி முடிந்து அவன் வீட்டிற்கு என் சகோதரன் போனபோது அவனுக்கும் மெட்ராஸ் ஐ வந்துவிட்டது. இந்த மெட்ராஸ் ஐ எப்படிப் பொறுத்துக் கொள்வது என்பது தெரியவில்லை. நான் பெரும்பாலும் வசிக்கும் சீர்காழி வங்கிக் கிளையில் யாரோ ஒரு வாடிக்கையாளர் கருப்பு நிற கண்ணாடி அணிந்து வந்திருந்தான். அவன் மூலம் எனக்குப் பரவியிருக்க வாய்ப்புண்டா என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. கண்ணில் அழுக்குகள் சேர்ந்தால் அது மெட்ராஸ் ஐ ஆக மாறிவிடுமோ என்று தோன்றியது. என் கண் எப்போதும் சிவப்பாக இருக்காது. கண் சிவப்பாக மாறினால் அதற்குப

மேன்மக்கள்

எல்லோரும் உடம்பின் வியர்வை ஊற்றுக் கண்களிலெல்லாம் வாசனைத் திரவமூற்றி காற்றில் போதையேற்றி சற்றே முகமெங்கும் வெள்ளை அடித்து வீதிக்கு வருகிறார்கள். அவர்களின் ஒரு கையில் பெரிய பூதக் கண்ணாடியும் இன்னொரு கையில் தார் சட்டியும். பூதக்கண்ணாடியால் ஒவ்வொருவரையும் கூர்ந்து பார்த்துவிட்டு அவர்கள் முகத்தில் சிறிது கரும்புள்ளி தென்பட்டால் கூட உடனடியாக அவருடைய உருவம் வரைந்து அதில் தார் பூசி எல்லோருக்கும் காட்டி இளித்து இன்பமடையும் மக்கள்.

இரண்டு கவிதைகள்

கொல்லும் முகம் சுழலும் விழிகளில் நீ஡ ஏனோ? கழநிகளில் பாய்ந்ததுதான் போதாதோ! மறையும் மாலையில் ஒளிர்ந்திடும் - உன்முகம்தான் என் வாழ்வின் விதிப்பயனோ? தெரிந்ததில்லை பயணம் தொடர்ந்தக்கால்! தெரிந்ததில்லை - பருவமதில் - மாற்றத்தில் - தெரிந்ததுதான் யாருக்கு எப்போது? இயம்புமோ உன்முகம்தான் அதைப்பற்றி? என் உறக்க, விழிப்பில், ஊர்ந்தவளே! என் சிந்தையில் படர்ந்த கோடிப் பூவே என் மூளையில் பூத்த வெண்மலரே! உன் முகம்தான் என்னைக் கொன்றதடி. இன்னொரு கவிதை அழிவுப் பாதையில் பயணம் - இல்லாத கேள்விகளை எல்லாம் கேட்டு - தொடுவானம் கண்டது! ஆக்கப் பாதையில் பயணம் - செளகரியங்களின் நிரந்தரத்திறகான - கதறலோடு பட்டமெனப் பறக்கவும் - ஆதூரம் கொண்டது ரொம்ப நாட்கள் கழித்து- ஒரு மரத்தடியில் உட்கார்ந்தேன் - அழிவுப் பாதையும் - ஆக்கப் பாதையும் - தெரியாத இடத்தில் - களைத்து!

யாராக இருக்கிறாள்?

குளிரும் கம்பிகளில் முகம் வைத்தபடி சிறுமி ஒருத்தி கடும் மழையில் தனித்து நிற்கிறாள். மழை ஆயிரம் குமிழ்களாய் பூத்து மறைவதை உற்று நோக்கி தன்னை மறக்கிறாள். பின்மாலை நேர மழை வண்ணக் குடைகளாய் ததும்பிச் செல்ல பரவசம் இலைச் சொட்டாய் அவள் இதயமெங்கும். வீட்டின் உள்ளே திரும்பிப் பார்த்துவிட்டு தவிர்க்கவியலா உந்தலோடு உள்ளும் புறமும் நனைய கம்பிகளூடே கை நீட்டுகிறாள். மழை - சிதறல்களாய் உள்ளங்கைகளில் பட்டுத் தெறிக்கும் அந்த இடி, மின்னல் கணத்தில் அவள் யாராக இருக்கிறாள்?

நான், பிரமிள், விசிறி சாமியார்....15

நான் இந்தத் தொடரை ஆரம்பித்து பல மாதங்கள் ஓடிவிட்டன. ஆனால் தொடர்ந்து இதை எழுதி முடிக்க முடியவில்லை. பிரமிள் பற்றி பல விஷயங்கள் யோசித்து யோசித்து எழுத வேண்டி உள்ளது. எதுவும் ஒரு ஒழுங்கில்லாமல் இந்தத் தொடர் போய்க் கொண்டிருக்கிறது. எழுத்தாளர் பலருக்கு பிரமிளைப் பிடிக்கவில்லை. அது ஏன் என்று நான் ஆராய்ந்து பார்ப்பேன். பல மூத்த எழுத்தாளர்கள் அவருடன் ஒரு காலத்தில் நெருங்கி பழகியிருக்கிறார்கள். பின் அவரை விட்டு விலகி ஓடியும் இருக்கிறார்கள். அப்போதெல்லாம் பிரமிள் பற்றி அவர்கள் மூலமாகவும், அவர்களைப் பற்றி பிரமிள் மூலமாகவும் கேட்டுக் கொண்டிருப்பேன். அவர்கள் பிரமிள் பற்றி பேசும்போதே கசப்புணர்வுடன் பேசுவார்கள். பிரமிள் இலங்கைக்காரரா தமிழ்நாட்டைச் சார்ந்தவரா? இந்தக் குழப்பமும் எல்லோருடனும் இருக்கும். ஆனால் இலங்கையில் தன் குடும்பத்தை விட்டு வந்தவர். பின் அங்கு செல்லவே இல்லை. தனி மனிதனாகவே தமிழ் நாட்டில் தங்கி விட்டார். கடைசிவரையில் அவர் தனிமனிதர். முரண்பாடு மிக்க மனிதர். எனக்கு அவர் வாழ்வதை நினைத்து ஆச்சரியமாக இருக்கும். அவர் யாரிடமும் அடிமையாய் போய் பணம் சம்பாதிக்கவே இல்லை. கொஞ்சம் இணங்கினால் போதும்,

அப்பாவின் குடை

மூட்டெலும்புகள் உடைந்து மடங்காமல் முடங்கியது அப்பாவின் குடை. சிகிச்சைக்கு வழக்கமான இடத்திற்கேச் சென்றேன். அப்படியே இருந்தான் அப்பாவின் குடைக்காரன் அதே இளமையுடன் அதே இடத்தில். சரி செய்ய முடியுமா என்று குடைக்காரனிடம் கேட்டேன். சரி செய்து விடலாம் என்றவன் சரி செய்து கொண்டே அப்பா எப்படி இருக்கிறார் என்றான். அப்பாவைக் காப்பாற்ற முடியவில்லை என்றேன் வருத்தத்துடன். அப்படியா....அதான் அப்பாவைக் காணவில்லை... என்றவன் சரி செய்த குடையை விரித்தான். விரித்த கருங்குடைக்குள் அப்பாவிற்கே உரிய சிரிப்பு மழை இடி முழக்கமாய்.....

க நா சுவைப் பற்றிய மதிப்பீடுகள்.......1

(பட்டியல்கள் தொடர்ச்சி......) க.நா.சுவின் விமர்சனப் பார்வையில் ஒரு படைப்பின் தனித்தனி அம்சங்கள் போதிய கவனம் தரப்படாமல் போவதில்லை. ஆனால் அவருடைய இறுதிக் கணிப்பில் அப்படைப்பு அதன் முழுமையில் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதற்கு முதலிடம் கொடுக்கப்படுகிறது. இதைக் கூட ஒரு லெளகீக சாமர்த்தியத்துடன் செய்து நல்ல பெயர் வாங்கிக்கொண்டு போய் விடலாம் குறைந்த பட்சம், பொல்லாப்பு பெற்றுக்கொள்ளாமல் சமாளித்துவிடலாம். ஆனால் க.நா.சு அவருடைய வாதங்கள், கணிப்புகளைக் கூறிவிட்டு அவைகளை விளக்கக் குறிப்பிட்ட படைப்புகள், படைப்பாளிகள் பெயர்களையும் எடுத்துக் கூறியிருக்கிறார். இன்னும் ஒரு படி மேலே போய் அவர்களை ரகவாரியாகப் பிரித்துப் பட்டியல்கள் போட்டிருக்கிறார். பட்டியல்கள் - இதை வைத்ததுத்தான் க.நா.சு எவரிடமும் முதல் வசவை வாங்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய சக விமரிசகர்கள், எழுத்தாளர்களிலிருந்து தொடங்கி, ஒரு பத்திரிகை இதழ் வெளிவந்தால் அதன் அட்டவணையிலிருந்து கடைசிப் பக்கம்வரை உள்ளதை ஒவ்வொரு வரியில் வியந்து - பாராட்டி, திட்டி எழுதும் ஆர்வ வாசகன் வரை க.நா.சுவின் பட்டியல்கள் உபாதைப்படுத்தியிருக்கின்றன. க.நா.சு இப்போது

க நா சுவைப் பற்றிய மதிப்பீடுகள்.....1

பட்டியல்கள் இந்த ஆண்டு (1972) குடியரசு தினத்தன்று சென்னையில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. 'கைராலி ஸ்டடி சர்க்கிள்' என்னும் குழு, நான்கு தென்னிந்திய மொழிகளின் தற்கால இலக்கியம் பற்றிக் கட்டுரைகள் படிக்க ஏற்பாடு செய்திருந்தது. கட்டுரையாசிரியர்கள் நான்கு பேருமே சிறிது கடுமையான விவாதத்திற்கு உட்பட வேண்டியிருந்தது. தெலுங்கு மொழிக் கட்டுரையை ஒரு அன்பர் வெகுவாகக் குறை கண்டார். தெலுங்கு மொழி புரட்சிகர எழுத்தாளர்களின் படைப்புகளுக்குப் போதிய கவனமும் முக்கியத்துவமும் தராதது குறித்துக் கண்டனம் தெரிவித்து, புரட்சிகர எழுத்தாளர்களின் நோக்கங்களைக் கட்டுரையாசிரியர் பூரணமாகப் புரிந்துகொள்ள புரட்சிகர எழுத்தாளர்க சங்கத்தின் பிரகடனத்தின் சில பகுதிகளை உன்னிப்பாகப் படிக்குமாறு வற்புறுத்தினார். கட்டுரையாசிரியர் கண்டனங்களுக்குப் பதில் அளித்தார். திருப்திகரமாகப் பதில் கூறினாரா என்று கூற முடியாது. ஆனால் அவர் கூறிய பதில் ஒன்று சிந்தனைக்குரியது ''எந்தப் பிரகடனம்தான் மிக உன்னத நோக்கங்களை எடுத்துக் கூறாமல் இருக்கிறது? இலக்கிய சங்கம், மக்கள் எழுத்தாளர் சங்கம், படைப்பாளிகள் குழாம், இலக்கிய வாசகர் வட்டத்

தாய்மை

தாய்மை அருள்ஜோதி தனது வலக்கை விரல்நுனிகளைக் கன்னத்தில் வைத்து அழுத்திக் கொண்டாள். அந்தக் கன்னம் வீங்கிப் போயுமிருந்தது. பல் வலி மூன்று நாட்களாகத் தாங்கமுடியவில்லை. முன்பைப் போல ஏதாவது வருத்தமென்றால் விழுந்து படுத்துக் கிடக்கவாவது முடிகிறதா என்ன? விடிகாலையில்தான் எத்தனை வேலைகள். கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வரவேண்டும். வீட்டை, முற்றத்தைக் கூட்டித் துப்புரவாக வைத்துக் கொள்ளவேண்டும். மூத்தவளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பத் தயார் செய்யவேண்டும். அதிலும் அந்தப் பிள்ளை சோம்பேறிப் பிள்ளை. மெதுவாக எழுப்பி எழுப்பிப் பார்த்தும் எழும்பாவிட்டால் கொஞ்சம் சத்தம் போட்டுத்தான் எழுப்பவேண்டியிருக்கும். விடுமுறை நாளென்றால் ஜோதி அவளைக் கொஞ்சம் அவள் பாட்டிலே தூங்கவிடுவாள். அவள் எழும்பித்தான் என்ன செய்ய? வளர்ந்த பிறகு இப்படித் தூங்கமுடியுமா? அதற்கு இளையவள்.. ஜோதி எழும்பும்போதே எழும்பிவிடுவாள். இப்பொழுதுதான் நடக்கத் தொடங்கியிருக்கும் வயது. அவளை இடுப்பில் வைத்துக் கொண்டு வீட்டு வேலைகளைச் செய்யமுடியுமா? பாலைக் கொடுத்து, கொஞ்சம் இறக்கிவிட்டால் அது ஓடிப் போய் எதையாவது இழுக்கத் தொடங்கும். ஒரு முறை இப்படித்தான

பூனைகள்.......பூனைகள்.........பூனைகள்......29

தந்தைமை என் வீட்டு மாடிப்படி யோரம் தினம் தினம் அலைந்துக் கொண்டிருந்த வெள்ளைநிற வயிறு பெருத்த பூனை நான்கு குட்டிகளை ஈன்றிருந்தது நேற்று குட்டிப்போட்ட பூனை சும்மா இருக்குமா? நொடிக்கொரு முறை மாடி யேறியது சமையல்கட்டுக்குள் பதுங்க இடம் தேடியது மாடிப்படிகளில் கக்கி வைத்தது கண்டதையும் இரவுகளில் அழுதது உயிர் கரைய தொந்தரவு மிகுந்த முன்னிர வொன்றில் இரை தேடிச் சென்றவளை ஏமாற்றி பலவந்தமாய் பிடுங்கிய குட்டிகளை பக்கத்துத் தெரு குப்பைத்தொட்டி யோரம் விட்டு திரும்பிய மறு கணம் பிரசவத்துக்கு அம்மா வீடு சென்றிருந்த மனைவியிடமிருந்து அலைபேசி தகவல் வந்தது தாயும் சேயும் நலமென்று ஆறுதலாய் -என்.விநாயக முருகன்

குடை

மழைக்காலங்களில் மனிதர்களுக்கு முளைக்கும் மூன்றாம் கை மேகக் கருமை வந்து ஒட்டிக் கொண்டது கைகளில் தவழும் குடைகளில் தூறல்களில் நனைந்தே வீடு சேரும் நேரங்களில் பைகளில் தூங்கும் புதிதாய் வாங்கிய குடைகள் கணினி யுகமானாலும் குடைகளின் வடிவம் மட்டும் மாறுவதே இல்லை குடை மீது விழும் மழைத்துளிகள் வருத்தப்பட்டன நனைதலின் சுகம் மனிதர்களுக்கு தெரிவதில்லையென

யானை

கானின் அடர்பச்சை இருளோடு அறையுள் பிரமாண்டத்தை கொண்டு வந்திருந்தது யானை. யாருமற்ற ஒரு நாளில் யானையும் மெல்ல அசைந்தது. கால்களை உதறிவிட்டு உடலை சிலிர்த்தபடி உயிர்ப்பின் சந்தோஷ கணங்களை அடிக்குரலோங்கிப் பிளிறிவிட்டு சின்னக் கண்களால் அறையை அளந்தது. ஒரடி எடுத்தாலும் அறையை விட்டு வெளியேறும் நிலை அறிந்த யானைக்கு இப்போது இரு முடிவுகள். எந்த முடிவு என்பதோ முடிவுகள் என்னென்ன என்பதோ நீங்கள் அறியாததில்லை வாழ்வின் வாதை தெரியாததுமில்லை. -

அனுவாகம்

ஒரு நிமிடம் தான் திரும்பி ஒரே ஒரு பார்வை தான் குசுகுசுக்கள் எல்லாம் அடங்கின இங்கே பார்வைகள் மட்டுமே காக்காய்கள் போல இப்படியும் அப்படியும் ஆட்டம் கண்டன- மௌன சொற்கள் இல்லை மௌனத்தில் சொற்கள் பதுங்கிச் செல்லும் படுத்துப் பதுங்கிச் செல்லும் ஜீவன்கள் போலே- ஏதோ இரண்டு வெவ்வேறு கபடி ஆட்டக் கட்சிகள் போல- சிந்சியரிட்டி இல்லையென்றால் ஏன் இங்கு? என்னுடைய செல் போன் கூவியது- இல்லை நடுங்கியது.. அணைத்து வைக்க முடியவில்லை பாஸ் அழைத்தால்? எடுத்துப் பார்த்து பின்னரே கவனித்தேன் அடுத்த அனுவாகத்துக்கு எல்லோரும் சென்றிருந்தனர் குகுசுத்தவர்களும் கூடவே