Skip to main content

க நா சுவைப் பற்றிய மதிப்பீடுகள்.....1





பட்டியல்கள்



இந்த ஆண்டு (1972) குடியரசு தினத்தன்று சென்னையில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. 'கைராலி ஸ்டடி சர்க்கிள்' என்னும் குழு, நான்கு தென்னிந்திய மொழிகளின் தற்கால இலக்கியம் பற்றிக் கட்டுரைகள் படிக்க ஏற்பாடு செய்திருந்தது. கட்டுரையாசிரியர்கள் நான்கு பேருமே சிறிது கடுமையான விவாதத்திற்கு உட்பட வேண்டியிருந்தது. தெலுங்கு மொழிக் கட்டுரையை ஒரு அன்பர் வெகுவாகக் குறை கண்டார். தெலுங்கு மொழி புரட்சிகர எழுத்தாளர்களின் படைப்புகளுக்குப் போதிய கவனமும் முக்கியத்துவமும் தராதது குறித்துக் கண்டனம் தெரிவித்து, புரட்சிகர எழுத்தாளர்களின் நோக்கங்களைக் கட்டுரையாசிரியர் பூரணமாகப் புரிந்துகொள்ள புரட்சிகர எழுத்தாளர்க சங்கத்தின் பிரகடனத்தின் சில பகுதிகளை உன்னிப்பாகப் படிக்குமாறு வற்புறுத்தினார். கட்டுரையாசிரியர் கண்டனங்களுக்குப் பதில் அளித்தார். திருப்திகரமாகப் பதில் கூறினாரா என்று கூற முடியாது. ஆனால் அவர் கூறிய பதில் ஒன்று சிந்தனைக்குரியது ''எந்தப் பிரகடனம்தான் மிக உன்னத நோக்கங்களை எடுத்துக் கூறாமல் இருக்கிறது?



இலக்கிய சங்கம், மக்கள் எழுத்தாளர் சங்கம், படைப்பாளிகள் குழாம், இலக்கிய வாசகர் வட்டத்திலிருந்து திறனாய்வு மன்றம், தமிழ் எழுத்தாளர் சங்கம், சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கம், சாகித்திய அகாடமி, தமிழ் வளர்ச்சிக் வரலாற்றுக் கழகம், இலக்கியச் சிந்தனை வநடி இவ்வமைப்புகளின் இலக்கியக் கோட்பாடுகள் மிகவும் உன்னதமானவையே. அதேபோல் விமரிசர்கள் ரகுநாதன், சி சு செல்லப்பா, எழில் முதல்வன்,. வெ.சாமிநாதன், டாக்டர் ந. சஞ்சீவி, தி.க.சி, டாக்டர் கைலாசபதி இவர்களின் அடிப்படை இலக்கியக் கொள்கைகளும் உன்னதமானவையே, எழுத்து கலையாக உருக்கொள்ள வேண்டும். அது மனிதாபிமானத்தில் எழுந்ததாக இருக்க வேண்டும். மன விரிவை உண்டு பண்ணுவதாக இருக்க வேண்டும், கற்பனை மயக்கங்களைத் தவிர்ப்பதாக இருக்க வேண்டும், மனித ஆன்மிக எழுச்சிக்கு வழி கோலுவதாக இருக்க வேண்டும். சமூகப் பரிணாமத்திற்கு வலுவூட்டுவதாக இருக்க வேண்டும் - இதிலெல்லாம் ஒரு குறையும் காண முடியாது.



அநேகமாக எல்லாருமே இந்த அடிப்படைக் கொள்கைகளைத்தான் அளவுகோலாகக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள். இதன்படிப் பார்த்தால் இவர்கள் அனைவரும் ஏகோபித்ததாகத்தான் ஒரு குறிப்பிட்ட படைப்பைச் சிறந்ததென்றும் இன்னொன்றைச் சிறந்தது அல்ல என்றும் கூற வேண்டும்.



ஆனால் நடைமுறை அவ்வாறில்லை. ஒருவர் நல்ல படைப்பு என்று கூறியது மற்றொருவரால் மிகவும் இழிவானது என்று தள்ளிவிடப் படுகிறது. ஒருவர் ஒரு எழுத்தாளரைச் சிறந்த எழுத்தாளர் என்று தேர்ந்தெடுத்தால் அது .இன்னொருவருடைய தேர்வுக்கு முற்றிலும் முரண்பட்டதாக இருக்கிறது. ஆதலால் அரசியல் அல்லது சமூக அமைப்புகளின் பிரகடனங்கள் போல இலக்கிய விமரிகர்களின் அடிப்படைக் கொள்கைகளும், அளவுகோல்களும் உன்னதமாக இருந்தபோதிலும் அவை செயல்படுத்தப்படும் முறையில் அந்த அமைப்பு அல்லது அந்த விமரிகரின் தன்மை வெளிப்பட்டுவிடுகிறது.



இன்னும் பொதுப்படையான இலக்கிய நோக்குகளை, வெவ்வேறு காலங்களில் அறிஞர்கள் கூறிவிட்டுப்போன இலக்கணங்களை மட்டும் எடுத்துச் சொல்லி சர்ச்சை - கண்டனங்களுக்கு உட்படாமல் நல்ல பெயர் வாங்கிப் போகும் கட்டுரைகளையும், கூட்டங்களிலும் எதிர்காண முடிகிறது. ஆனால் இன்றைய வாழ்க்கையில் இந்த நோக்கங்கள், கொள்கைகளின் பொருத்தம், குறிப்பிட்ட படைப்புகள் - படைப்பாளிகளைப் பொறுக்கி எடுத்துக் கூறுவதில் இருக்கிறது. இனங் கண்டு, தரம் பிரித்துக் கூறுவதில் இருக்கிறது. இனங் கண்டு, தரம் பிரித்துக் கூறுவதில் இருக்கிறது. இத் திசையில், தமிழ் இலக்கியத் துறையில், சுமார் முப்பதாண்டு காலமாக ஒருவர் பெயர் தனித்து நிற்கிறது. அது க.நா.சு.
தமிழிலக்கியம் நசித்துக் கொண்டிருக்கிறது,


சிறுகதை இலக்கியம் தேங்கிவிட்டது என்று பல பெரியோர்கள் அடித்துக் கூறும் இந்த ஆண்டிலும் பெயர் சொல்லிக் குறிப்பிடக்கூடிய முப்பது நாற்பது எழுத்தாளர்கள் போல, க நா சுவும் சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன்னர், அவர் தமிழில் எழுத முன் வந்தபோது தன் வரையில் சுய விமரிசனம் செய்து கொண்டு, தன் படைப்பு நன்றாக அமைய வேண்டும் என்ற ஒற்றைத் தட நோக்கத்துடன் தான் ஆரம்பித்திருக்க வேண்டும்.



க.நா.சு நன்றாகவே எழுதினார். அன்றிலிருந்து இன்றுவரை அவருடைய படைப்பிலக்கிய எழுத்து ஒரு சீரான தகுதி படைத்ததாகவே இருந்து வந்திருக்கிறது. அவர் தனக்குக் குறைந்தபட்சத் தகுதியாக வைத்து வருவது மிக உயர்ந்த இலக்கியமாகவே இருந்து வருகிறது. அவர் பல மொழி பெரய்ப்புகளும் செய்திருக்கிறார். அவர் மொழிப்பெயர்ப்புக்காகத் தேர்ந்தெடுத்த படைப்புகளும் அவருடைய ஆராய்ந்துணரும் ஆற்றலுக்குச் சான்றாக இருக்கின்றன.



அவர் படைப்பிலக்கியம் படைப்பதில் மட்டும் அன்றிலிருந்து இன்றுவரை கவனம் செலுத்தியிருந்தால் பொது ஜனப் பார்வையில் அவருடைய உருவம் இன்றுள்ளது போலப் பலவிதப் பிரதிவாத கோப, தாப, விரோத உணர்ச்சிகளைத் தோற்றுவிப்பதாக இருந்திருக்காது. வாதப் பிரதிவாத சர்ச்சைகளில் உட்படுத்தப்படாமல் இருப்பதில் நன்மை உண்டா இல்லையோ, செளகரியங்கள் பல உண்டு. ஆனால் க.நா.சு செளகரியங்களை நாடிச் சென்றதாகத் தெரியவில்லை. சர்ச்சைகளை, சர்ச்சைகள் மூலமாகப் பலரின் ஆழ்ந்த விருப்பு வெறுப்புகளைத்தான் நாடிச் சென்றிருக்கிறார். நாடிச் சென்றிருக்கிறார் என்று கூறுவதுகூடத் தவறாக இருக்கலாம். அவருடைய இயல்பு, அவருடைய இலக்கிய உணர்வு, அவருடைய விமரிசனங்கள் காரணமாக அவரைச் சர்ச்சைகளிடத்தில்தான் அழைத்துச் சென்றது.



க.நா.சு தன் தேர்வுகளுக்கு, அவர் பொறுக்கி எடுத்த படைப்புகளுக்கு, அவை சிறந்தது, சிறந்ததல்ல என்று தான் நிர்ணயித்ததற்குக் காரணம் கூறாமல் இருந்ததில்லை. காரணங்கள் கூறுவதைப் பல வகைகளில் செய்யலாம். வெகு எளிதாக, படிப்போரும் உணராவண்ணம் அவர்களுடைய உணர்ச்சிகளை லேசாகத் தூண்டித் தான் கூறுவதே சரி என்று ஒப்புக்கொள்ள வைக்கும் விதத்தில் செய்யலாம். இது பிரசாரகர்களின் வழி. ஆனால் க.நா.சு விஞ்ஞான விளக்கங்களுக்குரிய மொழியில்தான் அவருடைய விமர்சனங்களைச் செய்திருக்கிறார்.



ஓரிலக்கியப் படைப்பு பல அம்சங்கள் கொண்டதாயிருப்பினும் அது வெற்றிகரமானதாக, அதை முழுமையாகப் பார்க்கும்போது அந்த உணர்வைத் தர வேண்டும். ஒரு கைகலப்பில் வெற்றி அடைந்து விட்டு, யுத்தத்தில் தோற்றுப் போவதற்குச் சமமாகும் ஒரு படைப்பு அதன் முழுமையில் வெற்றிகரமாக அமையாதது.
(இன்னும் வரும்)
-அசோகமித்திரன்

Comments