Skip to main content

எதையாவது சொல்லட்டுமா - 31

இங்கு இதுதான் எழுத வேண்டுமென்பதில்லை. மனதில் படும் எதையாவது எழுதுவதுதான் இந்தப் பகுதி. அதை எல்லோரும் படிக்கும்படியாக எழுத வேண்டும். இதுதான் என் நோக்கம். உண்மையில் தினமும் எதையாவது எழுதலாமா என்று யோசிப்பதுண்டு. ஆனால் முடிவதில்லை.

சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சில நிகழ்ச்சிகளைப் பற்றி எழுதலாம் என்று நினைக்கிறேன். சி சு செல்லப்பா சென்னை திருவல்லிக்கேணியில் தனியாக வீடு வாடகை எடுத்துக்கொண்டு அவருடைய மனைவியுடன் வந்துவிட்டார். இருவரும் வயதானவர்கள். முடியாதவர்கள். சி சு செல்லப்பாவின் புதல்வர் பங்களூரில் தன் குடும்பத்துடன் வசித்து வந்து கொண்டிருந்தார். சி சு செவால் புதல்வருடன் இருக்க முடியவில்லை. துணிச்சலாக வந்து விட்டார். கூட அவருடைய உறவினர் சங்கரசுப்பிரமணியன் வசித்து வந்தார். சங்கரசுப்பிரமணியனின் தாயார் சி சு செல்லப்பாவின் மனைவியின் மூத்த சகோதரி. அவர் சென்னையில் இருந்த இந்தத் தருணத்தில்தான் நான் அவரைச் சந்தித்தேன்.

சி சு செல்லப்பாவை முதன் முதலாக க.நா.சுவின் இரங்கல் கூட்டம் போது சந்தித்தேன். அப்போது அவர் அழுக்கு வேஷ்டியும், சட்டையும் அணிந்திருந்தார். எளிமையான மனிதர். அந்தக் கூட்டத்தில் என்ன பேசினார் என்பது ஞாபகத்தில் இல்லை. ஆனால் படபடவென்று பேசிக் கொண்டிருந்ததாக தோன்றியது. சி சு செல்லப்பாவிற்கு க.நா.சுவை உண்மையாகப் பிடிக்காது. சி சு செ ஒருசிலரைப் பற்றியே அதாவது மணிக்கொடி எழுத்தாளர்களைப் பற்றியே சொல்லிக் கொண்டிருப்பார். மணிக்கொடி எழுத்தாளர்களைத் தவிர வேறு யாரும் எழுத்தாளர்கள் இல்லை என்று கூட சொல்வார். ஆனால் க.நா.சு அப்படி அல்ல. அவர் இப்போது எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களைப் பற்றியும் படித்துவிட்டு அபிப்பிராயம் சொல்வார். சி சு செ கொஞ்சம் பிடிவாதக்காரர். அவருக்கு இலக்கு பரிசு கிடைத்தபோது அதை அவர் வாங்கிக் கொள்ளவில்லை. ஆனால் அந்தப் பரிசுத் தொகையில் புத்தகம் கொண்டுவர வேண்டுமென்று விரும்பினார்.
அதுதான் சி சு செல்லப்பாவின் 'என் சிறுகதைப் பாணி' என்ற புத்தகம். அந்தப் பரிசு வழங்கும் தினத்தில் சிறப்பாகவே கூட்டம் நடந்தது. சிறுபத்திரிகையில் எழுதும் எழுத்தாளர்களைக் கூப்பிட்டு கெளரவம் செய்தார்கள். சி சு செல்லப்பா உற்சாகமாகப் பேசினார். ஆனால் சி சு செல்லப்பா அப்போது வந்து கொண்டிருந்த பத்திரிகைகளைப் படிப்பாரா என்பது சந்தேகம்.

ஒரு இலக்கியச் சிந்தனை நிகழ்ச்சியின்போது, சி சு செல்லப்பா அங்கு கூடியிருந்த பதிப்பாளர்களைச் சந்தித்து தன்னுடைய சுதந்திர தாகம் என்ற மெகா நாவலை பிரசுரம் செய்ய முடியுமா என்று கேட்டுக் கொண்டிருந்தார். யாரும் அந்தப் புத்தகத்தைப் போட தயாராய் இல்லை. அந்தத் தருணத்தில்தான் எனக்கு சி சு செல்லப்பா மீது இரக்க உணர்ச்சியே ஏற்பட்டது.

அவர் 80 வயதிற்குமேல் அந்தப் புத்தகத்தை தானாகவே வெளியிடும்படி நேர்ந்தது. அந்தப் புத்தகம் கொண்டுவர, மணி ஆப்செட்டை அவருக்கு அறிமுகம் செய்தேன். அவர்கள் புத்தகம் சிறப்பாக வர எல்லா உதவியையும் செய்தார்கள். சி சு செல்லப்பா அந்த வயதில் துணிச்சலாக அவர் புத்தகத்தை வெளியிட்டார். அவர் ஒரு சாதனை வீரர். அப்புத்தகம் பற்றி விமர்சனம் எல்லாப் பத்திரிகைகளிலும் வெளிவந்து அவருக்கு பெயரை ஏற்படுத்திக் கொடுத்தது.

இந்தத் தருணத்தில்தான் நான் அடிக்கடி சி சு செல்லப்பாவை அவர் வீட்டில் சந்திப்பேன். வீட்டிற்கு வந்தவுடன் சாப்பிட எதாவது கொடுப்பார். சி சு செல்லப்பா அந்தக் காலத்தில் உள்ள நண்பர்களைப் பற்றி பேசுவார். பி எஸ் ராமையா மீது அளவு கடந்த அன்பு அதிகம். க.நா.சு, மெளனி பற்றி சிலாகித்துச் சொல்ல மாட்டார். க.நா.சு பற்றி அவர் சொன்ன ஒரு விஷயம் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. க.நா.சுவை சென்னையில் ஒரு இடத்தில் குடி வைக்க சி சு செல்லப்பா ஏற்பாடு செய்திருக்கிறார். க.நா.சுவால் வாடகைக் கொடுக்க முடியவில்லை. ஒரு சமயம் வீட்டுக்காரர் அவர் தங்கியிருக்கும் இடத்தைப் பார்க்க வந்தபோது அதிர்ச்சியாகி விட்டது அவருக்கு. க.நா.சு குடியிருந்த வீடு காலியாக இருந்ததோடு அல்லாமல், நாலைந்து மாத வாடகை வேறு தரவில்லையாம். வீட்டுக்காரர் சி சு செல்லப்பாவைப் பிடித்துக் கொண்டு விட்டார். சி சு செல்லப்பாவிற்கு க.நா.சுமீது கோபமான கோபம்.

இந்தச் சம்பவத்தை சி.சு செல்லப்பா என்னிடம் சொன்னபோது எனக்கு க.நா.சு மீதுதான் வருத்தம் ஏற்பட்டது. எந்த ஒரு நிலையில் அவர் வீட்டை காலி செய்திருக்க வேண்டும்?

Comments

முடிந்த அளவு இந்த தொடரை தினமும் எழுத முயலுங்கள்.இலக்கிய உலகம் இன்னும் பழைய ஆராதனைக்குரிய படைப்பாளிகளுடன் பரிணமிக்கும். இதைத் தொடர்ந்து உங்களின் அடுத்த இடுகையாய் மதியழகனின் வீடு கவிதை. ஒரு இலக்கியவாதிக்கு இல்லாத வீடும் இலக்கியமாய் நினைவுகளைத் தந்து விட்டு இடிபடுகிற வீடென வீடு எப்படி எல்லாம் குடி கொள்கிறது மனதில்.
குமரி எஸ். நீலகண்டன்