Skip to main content

இரண்டு கவிதைகள்

தாகத்தோடு நிற்கும் காகம்


தண்ணீர் முழுவதையும் குடித்துவிடவேண்டும்
தாகம் என்பது ஒரு புறமிருக்க
தண்ணீர் முழுவதையும் நானே குடித்துவிடவேண்டும்


தாகமெடுக்கவேண்டுமே
இதயமும் இருட்டிக்கொண்டுவரவேண்டும்


குடம் குடமாக கொண்டுவந்து கொடுக்கிறது காகம்


மேகத்தின் வயிற்றுக்குள் கடல், நீர்த்தேக்கங்கள்
எல்லாம் கறுத்து இரத்தம் கட்டினாற்போல்
நிறத்தில் காகத்தை ஒத்தது
எவ்வளவு பெரிய காகம்


பெரிய காகம் கரையும்
சிறிய காகம் நனையும்
தென்னை மரங்களில், மா மரங்களில் பறந்துபோய் தங்கி தலை உணத்தும்


கோதுமை மாவு ரொட்டி சுடுகிற மணம் வருது
கிடுகு கூரை கொதிச்சு ஆவிபோகுது


02 முட்டையிடும் நாய்கள்


மூன்று பன்றிகளுக்கு நடுவில் ஒரு நாய்.
பன்றிகள் இறைச்சியை சாப்பிடுகின்றன
நாயும் இறைச்சி சாப்பிடும்தானே.
ஏன் அது பன்றிக்கு தெரியவில்லை
தெரிந்தும் பங்கு கொடுக்காமல் தான் மட்டும் சாப்பிடுகின்றன.
அப்படித்தான்.


நாய்கள் பசியில் தன் நிழலை சாப்பிடுகின்றன.


வாய்க்குள்ளிருக்கும் இறைச்சியை உண்பதா
நாய் சாப்பிடுகின்றதுபோல் நிழலைச் சாப்பிடுவதா?



சில நேரம் நிழல் மிக சுவையாகயிருக்கும் என எண்ணின


சாவின் அறிகுறி தெரியுமா?

அதன் இசை காதுகளுக்குள் இறங்குமா?

இது பற்றி நாயிடமும், பன்றிகளிடமும் கேட்போம்


கடைசியாக என் கண்களால் ஒரு காட்சி கண்டேன்
நாய்கள் முட்டையிடுகின்றன
நாய்கள் முட்டையிடுகின்றன

Comments