Skip to main content

ஒளிவட்டம்

மழை வலுத்தது
உனது குடைக்குள்
என்னை அழைத்தாய்
ஏனோ அன்று
குடைக்குள் இருந்தும்
நனைந்து போனேன்
நாய்களுக்குப் பயந்து
என்னை துணைக்கழைத்தாய்
என்னைக் கண்டதும்
நாய்கள் வாலாட்டியதைக்
கண்டு
மெலிதாக இதழ் விரித்துச்
சிரித்தாய் நீ
நூறு ரூபாய் கொடுத்து
சில்லறை கேட்டாய்
கொடுத்தேன்
நன்றி என்றாய்
அன்று முதல்
உண்டியலில் போட்டு வைத்த
சில்லறைகளை உடைத்தள்ளி
வருகிறேன்
இருசக்கர வாகனம்
ஸ்டார்ட் ஆக மறுக்கிறது
என்றாய்
பழுது நீக்கிக் கொடுத்தேன்
வண்டியில் அமர்ந்து
விடைபெற்றாய்
நான் ஆயில் கறை படிந்த
கைகளையே வெகுநேரம்
பார்த்துக் கொண்டிருந்தேன்
அன்றைய
பத்திரிகை செய்தியைப் பற்றி
அலுவலகத்தில் பரபரப்பாக
பேசிக் கொண்டார்கள்
உன்னையும் பரபரப்பு
தொற்றிக் கொள்ள
என்ன செய்வதென்று
தெரியாமல்
நீ என்னை பெயர் சொல்லி
அழைத்தாய்
உனது சிரசை சுற்றி
ஒளிவட்டம் தோன்றலாம்
நீ எனக்கு ஞானமளித்ததால்.

Comments