Skip to main content

அரங்கு நிறையாக் காட்சிகள்

நண்டுகளோடு ஓடிப்பிடித்து
விளையாடிக் கொண்டிருந்தன
வெள்ளலைகள்


ஆளுயர அலைகளுக்கு அகப்படாமல்
பறந்தெழும்பித் தணிந்தமர்ந்தன
மீண்டும் மீண்டும் சாமர்த்தியமாய்..
நண்டைப் பிடிக்கவோ நீர் பருகவோ
குழுமியிருந்த கடற்பறவைகள்


எண்பதெழுபது கிலோ
எடை மனிதர்களை
அநாயசமாய் இழுத்தோடி
உற்சாகமாய் வலம் வந்தன
உடற்பயிற்சி ஆசான்களாகி..
அழகான நாய்க்குட்டிகள்


கடலுக்குள் இறங்கும்
சூரியனின் கதிர்வீச்சில்
நிஜத்தை விட பன்மடங்கு
நீண்டு விழுந்து
பிரமிப்பைத் தந்தன
கரையோர நிழல்கள்


இணக்கமாய் கோர்த்துக் கொண்ட
இரு கரங்களிலிருந்து விடுப்பட்டு
உப்புக் காற்றோடு கரைந்தன
சில பிணக்கங்கள்

அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன
எவ்விடத்திலும் ஏதேனும்
அற்புதக் காட்சிகள்


அவசரகதியில் சுழலும் பூமியரங்கில்
அமர்வாரின்றிக் காத்தேக் கிடக்கின்றன
அநேக நாற்காலிகள்.
*** ***

Comments

மனம் நிறைந்த காட்சிகள்...
மிக்க நன்றி நீலகண்டன்.
goma said…
உப்புக் காற்றோடு கரைந்தன
சில பிணக்கங்கள்

அருமை