Skip to main content

சீனத்தில் அரக்குக் கலை

                                                                                                                           


அரக்கு என்பது மரத்திலிருந்து கிடைக்கும் இயற்கையான பொருள் என்பதைப் பெரும்பாலோர் அறிந்திருப்பர். ஆனால், சீனத்தில் அதற்கிருக்கும் நெடிய வரலாறை அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஷான்ஸி, ஹூபேய், ஸிச்சுவான், குய்ஜோவ், யுன்னான் போன்ற 23 மாகணங்களின் 550 மாவட்டங்களிலிருந்து பெருமளவில் அரக்கு உற்பத்திக்கான கச்சாப் பெருளைப் பெறும் சீனா உலகிலேயே அரக்கு உற்பத்தியில் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. அந்நாட்டின் பெரும்பாலான பகுதிகள் அரக்கு பிசினைக் கொடுக்கும் மரங்களை வளர்க்கக்கூடிய சீதோஷண நிலையைக் கொண்டிருக்கின்றன. நட்டதிலிருந்து 3-5 வருடத்தில் பலன் தரும் இம்மரத்திலிருந்து பெறப்படும் பிசினானது காற்று பட்டதும் இறுகித் திடமாகிறது. ஜூன் ஜூலை மாதங்களில் தான் சூரிய ஒளி காற்றின் ஈரப்பததைக் குறைத்து விடுமென்பதால், விடிவதற்கு முன்பாகவே ரப்பர் பால் எடுப்பதைப் போல அரக்குப் பால் எடுப்பார்கள். உலர்காற்று பட்டு இறுக்கம் கொண்டால், அரக்குப் பிசின் மரத்திலிருந்து ஒழுகுவதும் நின்று போகும். அரக்குக்கு ஈரம், வெப்பம், அமிலம், காரம் போன்ற எதாலும் பாதிக்கப்படாத அரிய தன்மையுண்டு. ஆகவே, அரக்கினால் செய்யப்படும் பொருட்கள் அழகாக இருப்பதுடன் மிக நீண்ட நாள் உழைக்கக் கூடிய உறுதி மிக்கவையாகவும் உள்ளன. அரக்கு மிதமாகப் பயன்படுத்தும் போது சிவப்பாகவும் கூடுதலாக உபயோகிக்கும் போது கருப்பு நிறமும் கொள்ளும். ஆகவே தான், அரக்கினால் செய்யப்படும் பொருட்கள் பெரும்பாலும் கருப்பு அல்லது சிவப்பு நிறத்திலேயே இருக்கின்றன.

வரலாற்றுப் பதிவுகளின் படி கிமு 770 முதலே அரக்கு மரங்கள் நடப்பட்டு வருகின்றன. தாவோ மதத்தை நிறுவிய ஜுவாங் ஜி இவ்வகை மரங்கள் நடப்பட்ட தோப்புகளைக் கண்காணித்த அதிகாரியாக இருந்திருக்கிறார். அக்காலத்தில் மீன், மல்பர்ரி, உப்பு போன்ற பொருட்களுக்கு நிகரான முக்கியத்துவத்தைக் கொண்டிருந்திருக்கிறது அரக்கு. அதுமட்டுமில்லாமல், அரக்கு சாதனத் தயாரிப்பும் அதன் மீது செய்யப்பட்ட கலையும் தொடர்ந்து வளர்த்தெடுக்கப் பட்டிருக்கின்றன. செயற்கை இழையாலான துணியைக் கொண்டு அடிப்படை உருவம் வடிக்கப்பட்டு, அரக்கு பூசப்பட்டு இறுகியதும் செதுக்கி அலங்கரிக்கப்படும். இப்பாத்திரங்களுக்கு எந்த மாதிரியான உருவமும் கொடுக்க முடிந்தது.

இன்னொரு பிரபல தத்துவஞானி ஹான் கபெய்ஜி. கி.மு 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவரது பதிவின் படி சீனாவின் 4000 வருடப் பழமை மிக்க மிக முக்கிய உயர்குடியைச் சேர்ந்த ஷுன் என்பவர் தான் முதன்முதலில் அரக்கைப் பயன்படுத்தியவர். இருப்பினும், 1970களில் கண்டெடுக்கப்பட்ட புதைபொருட்கள் அக்கூற்று தவறென்று நிரூபித்துவிட்டது. ஜேஜியாங் மாகாணத்தின் யுயாவ் நகரின் ஹெமுடு புதைபொருள் தலத்தில் கண்டுக்கப்பட்ட வெளிச்சத்தில் மின்னிய அன்றாடம் பயன்படும் பாத்திரங்கள், மரக்கிண்ணம் ஆகியவை அரக்கினால் செய்யப்பட்டிருந்தன. அகழ்வாய்வாளர்களை மிகவும் அதிசயிக்க வைத்தன.  6000 வருடங்கள் பழமை கொண்ட இந்தக் கிண்ணங்கள் தான் ஆகப் பழைய அரக்கு சாதனங்கள் என்று சோதித்தறிந்துள்ளனர்.

மரத்துடன் அரக்கைச் சேர்த்து செய்யும் சீனத்து பழுக்காக் கிண்ணங்களும் சொப்புகளும் அதே போன்ற நெடிய வரலாற்றைக் கொண்டிருக்கின்றன. சிவப்பும் கருப்பும் மட்டும் கொண்ட அவை எளிமையாக இருந்தன. எழுதப் பயன்படும் சீன மை கண்டுபிடிக்கும் முன்னரே அரக்கைக் கொண்டு எழுதியிருக்கிறார்கள் என்பதையும் அகழ்வாராய்ச்சியினர் கண்டு பிடித்துள்ளனர். கி.மு 475-221 காலத்தைச் சேர்ந்த இருபத்தெட்டு மூங்கில் விளாறுகள் ஹென்னன் மாகாணத்தின் ஸின்யாங்கிற்கு அருகில் ச்சாங்தாயுவான் என்ற இடத்தில் கண்டெடுக்கப் பட்டுள்ளன. அவற்றில் விலங்குகள், மேகங்கள் போன்ற மிகத் தேர்ந்த கலைநுட்பத்துடனான சித்தரிப்புகளை அரக்கினால் உருவாக்கியிருந்தார்கள். அதேபோல, 2000 ஆண்டு பழமை வாய்ந்த மாயங்டுய் ஹான் கல்லறையில் அரக்கினால் செய்யப்பட்ட பண்டபாத்திரங்களை அகழ்ந்தெடுத்திருந்தனர். இப்பாண்டங்களின் நல்முத்தைப் போன்ற பளபளப்பும் மினுமினுப்பும் காண்பவரை மிக ஆச்சரியப்பட வைக்கும். ச்சின் (கி.மு 221-206) முடியாட்சியைச் சேர்ந்த மீன்வுரு வண்ணமாகத் தீட்டப்பட்ட அரக்குப் பாத்திரம் மிக முக்கிய அரிய கண்டுபிடிப்பு.  யுவான், மிங், ச்சிங் முடியாட்சி காலங்களில் 400 அரக்குவகைகள் ஆபரணங்கள் மற்றும் பண்டபாத்திரங்களில் பயன்படுத்தியுள்ள அன்றைய சீனம் கலாசார வளர்ச்சியிலும் செல்வத்திலும் மிகச் செழுமையுடனிருந்திருக்கிறது.

இன்றைய தேதியில் பேய்ஜிங், கபூச்சோவ், யாங்ஜோவ் ஆகிய மூன்று நகரங்கள் தான் அன்றாடம் புழங்கும் பொருட்கள் தொடங்கி அலங்காரத்துக்கென்றே செய்யப்படும் விலையுயர்ந்த கைவினைப்பொருட்கள் வரை ஏராளமான சீன அரக்குச் சாமான்களை உற்பத்தி செய்கின்றன.  யாங்ஜோவ் பொருட்கள் செதுக்குப்பாணியில் மட்டுமின்றி பதிக்கப்படும் கற்கள், மணிகளாலும் வேறுபடுகின்றன. அரிய கற்கள், தங்கம், தந்தம், முத்து என்று பலவும் பதிக்கப்பட்ட அலங்காரப் பொருட்கள் மிக விலை உயர்ந்தவையும் கூட. பெருஞ்செல்வந்தர்கள் பயன்படுத்தும் அறைத் தடுப்புகள், பேழைகள், அலமாரிகள், நகைப்பெட்டிகள், இருக்கைகள், நாற்காலிகள், மேசைகள், சுருட்டு சாம்பல் தட்டுகள் என்று பல அறைகலன்கள் (furniture)  உருவாக்குகிறார்கள்.

பாரம்பரிய பேய்ஜிங் அரக்கு சாதனங்களில் நாற்காலிகள், இருக்கைகள், அறைத் தடுப்புகள், தேநீர் மேசைகள், ஜாடிகள் ஆகிய அறைகலன்கள் (furniture) முக்கியமானவை.  பேய்ஜிங் பாணியில் அடிப்படையாக வெண்கல அல்லது மரம் உபயோகிக்கப்பட்டு உருவான பொருள் மீது பல முறை அரக்கு பூசப்படுகிறது. சில சமயம் நூறு முறை கூடப் பூசுவார்கள். பாண்டங்கள் இயற்கையாக தானே நன்றாகக் காயும் வரை கலைஞர்கள் காத்திருப்பர். அப்போது தான் எதிர்காலத்தில் சிறு விரிசல் விழாமல் அப்படியே இருக்கும். 5-18 மில்லிமீட்டர் தடிமனுக்கு உலர்ந்து இறுகிய பூச்சின் மீது செதுக்கு கலைஞர்கள் இயற்கைக் காட்சிகள், பூக்கள், பறவைகள், புராண பாத்திரங்கள், மனித உருவங்கள் என்று பலவற்றைப் பொருத்தமாக வசீகரிக்கும் நுட்பத்துடன் செதுக்குகிறார்கள். ஒரு கலயத்தை இவ்வாறு உருவாக்க 6-8 மாதங்கள் வரைகூட எடுக்கும். இவற்றை உருவாக்குவதில் அதிக செலவும் உழைப்பு தேவை இருப்பதால் இவற்றின் விலைகள் மிக அதிகம். விலை கூடி வந்ததில் இவற்றுக்குச் சந்தையில் நிலவிய தேவை மிகவும் குறைந்து படிப்படியாக மிகத் தேய்ந்தும் போனது. 1980கள் முதல் பேய்ஜிங் அரக்கு சாதனங்களின் உற்பத்தித் துறை சரிய ஆரம்பித்தது என்றே சொல்ல வேண்டும். இளையோரில் இக்கலையைக் கற்க ஆர்வம் காட்டுவோரும் அதிகமில்லை. கலையை அறிந்த முதியோர் எண்ணிக்கை குறைந்து இந்தப் பொருட்களின் கலை மற்றும் வணிகம் மிகவும் பாதிக்கப் பட்டு வருகிறது. இன்றைய தேதியில் சுமார் 20 தேர்ந்த கலைஞர்களே மீதமிருக்கிறார்கள் என்பது மிகவும் வருத்தமளிக்கக் கூடிய விஷயம்.

கலைநயத்துடன் செதுக்கப்பட்ட அரக்குப் பொருட்கள் உருவாக்கும் ஜி கூ ஜாய்ஒ என்ற பயிற்சி நிலையம் 1904லில் ஸியாவ் லேன் மற்றும் லி மாவ்லோங் ஆகியோரால் நிறுவப்பட்டது. அதனாலேயே, இவ்விருவரும் இக்கலையை அழியாமல் காப்பாற்றியவர்களாக அறியப்பெறுபவர்கள். சீனக் குடியரசு உருவான காலட்டத்திற்குப் பிறகு அரசாங்கமே பேய்ஜிங்கில் ஜி கூ ஜாய் வழித் தோன்றல்களைக் கொண்டு ஒரு தொழிற்சாலையை நிறுவியது.  அது தான் இன்றைய ஒரே தொழிற்சாலை. இந்தப் பழமை வாய்ந்த கலை அழிவின் விளிம்பில் இருக்கிறது.

சீனமெங்குமிருந்து சேகரிக்கப்பட்ட பல அரிய ஓவியங்களையெல்லாம் திரட்டி 19 ஏப்ரல் 2008ல் ஜியாங்ஸு மாகாணத்தின் யாங்ஜோவ்வில் அரக்கு ஓவியக் கண்காட்சி நடை பெற்றது. கலாரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக இருந்தது இந்தக் கண்காட்சியில் ஓவியங்கள் மட்டுமின்றி பல்லாயிரமாண்டுகள் பழமை வாய்ந்த அரக்கிலான பண்டபாத்திரங்களும் மற்ற வெண்கல பீங்கான் பாத்திரங்களுடன் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. கிண்ணங்கள், பானைகள், பெட்டிகள் போன்ற அன்றாடம் பயன்படும் பொருட்களைச் செய்ய மட்டுமின்றி அழகிய வண்ணங்களும் நிகரற்ற மிக நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கலாரசனையுடனான அலங்காரப்பொருட்களையும் அரக்கைக் கொண்டு செய்திருக்கிறார்கள். 

கபூச்சோவ் தான் அரக்குப் பொருட்களில் பெரும் புரட்சியையே ஏற்படுத்தியுள்ள பாணி. இந்தப் பாணியில் செய்யும் போது மரமோ வெண்கலமோ அடிப்படை உருவமாக அமைந்து எடையைக் கூட்டுவதில்லை. சீனாவின் மூன்று கைவினைப் பொக்கிஷங்களுள் ஒன்றான (மற்ற இரண்டும் ஜிங்தேஜென் பீங்கான் மற்றும் பேய்ஜிங்கின் நுண்ணிய எனாமல் செய்யப்படும் உலோகக் கைவினை) இந்தப் பாணியில் முதலில் மரமோ உலோகமோ எடுத்துக் கொண்டு வேண்டிய உருவாத்தைச் செய்து கொள்கிறார்கள். அதன் மேலே மெல்லிய பட்டுத் துணியால் இறுக்கி சீராகப் படியும்படி ஒட்டி வைத்துக் கொள்கிறார்கள். அதன் மீது அரக்கைப் பூசுகிறார்கள். இறுக இறுக மீண்டும் மீண்டும் எண்ணற்ற முறை அரக்கு பூசுகிறார்கள்.  பூசப்படும் அரக்கு இறுகியதும், செதுக்கு அலங்காரங்கள் செய்வார்கள். பிறகு, உள்ளிருக்கும் மர அல்லது உலோகத்தை அகற்றி விடுகிறார்கள். மிக மெல்லிய எடை கொண்ட இது தான் மிக உறுதியுடன் மிகக் குறைந்த எடையுடன் அன்றாடம் புழங்கப்படும் பழுக்காப் பொருள். ஷான்ஸி மாகாணத்தின் பிங்யாவ் என்ற பழம்பெருமை வாய்ந்த ஊரில் இந்தப் பொருட்களின் வரலாற்று வேர் இருக்கிறது. மிகத் தேர்ந்த கலை நுட்பத்துடன் மிளிரும் அந்தப் பொருட்கள் கலைஞர்களையே விழிவிரித்து வியக்க வைக்கின்றன.

ஷான்ஸி மாகாணத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்ட முக்கியமான மரத் தடுப்பு அரக்கினால் செய்யப்பட்டது. ஹான் முடியாட்சியைச் சேர்ந்த இதில் தீட்டப்பட்டிருந்த ஓவியம் அக்காலத்து சேர்ந்த தீரப்பெண்களின் குறிப்புகளின் அடிப்படையின் அமைந்துள்ளது. ஹுன்னான் மாகாணத்தின் ச்சாங்ஷா என்ற ஊரில் மாவங்தியூ ஹான் கல்லறையிலும் அரக்கு பாண்டங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இத்தலம் இரட்டை மலைகளைக் கொண்டிருக்கின்றது. அங்கே ஹான் (கி.மு 206 - கி.பி 24) முடியாட்சியைச் சேர்ந்த மூவரது கல்லறைகள் உள்ளன. கி.மு 189ல்  இறந்த  ஑தாய்ஒ என்றறியப்பெற்ற ஊரைச் சேர்ந்த மார்க்விஸ், கி.மு 165ல் இறந்த அவரது மனைவி ஸின்ஜூயி, கி.மு 168ல் இறந்த அவர்களுடைய மகன் ஆகியோரது கல்லறைகள் 1972 முதல் 1974 வரையிலான காலகட்டத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்டன. 

ஸின்ஜூயியின் கல்லறைக்கு மாவங்தியூ கல்லறை எண்.1 என்று பெயரிடப்பட்டது. அவரது உடல் பதப்படுத்திய மம்மியாக இருக்கக் கண்டனர். சிறப்பாகப் பதப்படுத்தப்பட்டிருந்ததால் உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ள முடிந்தது. அதன் மூலம் அவர் மாரடைப்பினால் இறந்து போயிருக்கலாம் என்று கண்டறியப்பட்டது.

கல்லறைக்குள் கிடைத்த அவரது சவப்பெட்டியின் அரக்குச் சித்திரம் தான் காணக்காண கருத்தைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. ஒன்றுக்குள் ஒன்றாக நான்கு அலங்காரப்பெட்டிக்குள் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. முதல் பெட்டி எந்த அலங்காரமுமில்லாமல் வெறுமே அரக்கினால் பூசப்பட்டிருந்தது. அடுத்தது, சிவப்பு அரக்கு பூசப்பட்டு தங்க நிற மேகச் சித்திர வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது.  மேகங்களுக்கிடையில் 111 வகையான பூதகணங்களும் தெய்வங்களும் தீட்டப்பட்டிருந்தன. இவற்றைப் பார்க்கும் சீனர்களுக்கே ஆச்சரியம் மிகும். மூன்றாவது பெட்டி தான் ஆக அதிக அழகிய வேலைப்பாடுகளுடன் சிவப்பு அரக்கு பூசப்பட்டு சுப்ச்சகுனமாகக் கருதப்படும் யாளி, புலி, மூன்று மான்கள், அக்னிப் பறவை மற்றும் ஒரு தெய்வம் ஆகியவை தீட்டப்பட்டிருந்தது. ஆகக் கடைசி பெட்டி வெறுமன கருப்பு அரக்கினால் பூசப்பட்டு சரிகை வேலைப்பாடு செய்யப்பட்ட பட்டுத் துணியால் போர்த்தப்பட்டிருந்தது. 

இது தவிர ஆயிரக்கணக்கான ஏடுகளும் அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்தன. 700 வெவ்வேறு விதமான அரக்கு பாண்டங்கள் கிடைத்துள்ளன. மிகச் சீரிய முறையில் பாதுகாப்பாக இருந்தவற்றில் பெரும்பாலானவை பண்டபாத்திரங்கள், நாற்காலிகள் போன்ற அன்றாடம் புழங்கும் அறைகலன்கள் (furniture). ஒருசேரக் கிடைத்த சின்னஞ்சிறிய மேசையும் அதன் மேல் அலங்காரமாக வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களும் குறிப்பிடக்கூடியவை. அதுதவிர, ஐந்து தாம்பாளங்களில் மிக அழகிய கருமை மற்றும் சிவப்பு அரக்கால் சித்திரங்கள் தீட்டப்பட்டிருந்தன.  அரக்கினால் அலங்காரம் செய்யப்பட்ட தட்டுகளுக்குள்ளே 'அன்புகூர்ந்து உணவருந்துங்கள்' என்ற பொருளிலும் இரண்டு மதுக் கிண்ணங்களில் 'அன்புகூர்ந்து மதுவருந்துங்கள்' என்ற பொருளிலும் சீனச்சித்திர எழுத்துக்களில் 'ஜுன் ஸின் ஷி' என்றெழுதப்பட்டிருந்தன.

'ஹான்' முடியாட்சிக்குப் பிறகு பீங்கான் பாண்டங்கள் அதிகமாகப் புழங்கப்படவே அரக்கு வெறும் ஓவிய மற்றும் கலைச் சாதனமானது. அப்போதெல்லாம் அரசவை மற்றும் மேட்டுக்குடியினர்களிடம் அரக்குப் பொருட்கள் அந்தஸ்து மற்றும் செல்வத்தின் சின்னமாகக் கருதப் பட்டன.  தன் விருப்பத்தையும் கலைதாகத்தையும் தீர்த்துக் கொள்ள எக்கச்சக்கமான உழைப்பும் பொருளும் அரக்குக் கலையில் செலவிடப்பட்டன. தங்கத்திலும் வெள்ளியிலும் ஏற்பட்ட நுட்பமும் ஆழமும் கொண்ட அலங்கார உத்திகளிலும் வளர்ச்சி அதிகரித்தது. 

'ஜின்' காலத்திலும் (கிபி 265-420) வடக்கு-தெற்கு முடியாட்சிகளிலும் (கிபி 420-589) சீனாவில் அறிமுகமாகி மளமளவென்று விரிந்து பரவிய பௌத்தம் அரக்குக் கலைக்கு உதவியது. முக்கியமாக, பௌத்த சூத்திரங்களைப் பொறிப்பதற்கு அரக்கு பயன்பட்டிருக்கிறது.

'ஹூபேய்' மாகாணத்தின் 'ஸ்யூஜோவ்' நகரில் 1978ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட அரிய கண்டுபிடிப்பு பல அரிய அரக்கு சாமான்களை வெளியுலகத்திற்குக் காட்டியது. கி.மு 475-221 காலத்தைச் சேர்ந்த அவரது கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட உயரிய கலை நுட்பத்துடன் அமைந்த பொருட்களில் அரக்கின் தரத்தையும் நிறத்தையும் அலங்கார உத்திகளையும் பாண்டங்களின் உருவத்தையும் ஆராய்ந்தனர். அன்றைய ஜெங் நாட்டின் அரசர் பெயர் ஜென்கௌயீ. அகழ்வின் போது முதலில் அகப்பட்டது மாண்டரின் வாத்து உருவில் ஓர் அலங்கார அரக்குப் பெட்டி. 16.5 செமீ உயரம் கொண்டிருந்த இந்தப் பெட்டி முழுக்க கருப்பு அரக்கினால் பூசப்பட்டு அதன் மீது மிக லேசாக மஞ்சள் சித்திரங்கள் தீட்டப் பட்டிருந்தது. வாத்தின் வயிற்றுப் பகுதியில் பறவை முகங்கொண்ட ஓர் இசைஞர் சிறுமணிகளை இசைப்பதைப் போலவும் மத்தளம் கொட்டியவாறே இரு பூதங்கள் நர்த்தமாடுவதும் சித்தரித்திருந்தது. அன்றாடப் பயன்பாட்டுப்பொருட்களும் அலங்காரப் பொருட்களும் சேர்த்து கண்டெடுக்கப்பட்டவை மொத்தம் 220 அரக்கு சாமான்கள். அத்தனையும் அன்றைய மேட்டுகுடியினரின் வாழ்க்கைத் தரத்தைப் பிரதிபலிப்பவை.

அரசன் 'ஜென்கௌயீயின்' கல்லறையில் கண்ணையும் கருத்தையும் கவரும் முக்கியமான விஷயம் சடங்குகள் செய்யும் பீடம். ஷாங் முடியாட்சியின் (கி.மு 1600-1000) போதும் ஜோவ் முடியாட்சியின் (கி.மு 1000-256) போதும் வெண்கலத்தில் அமைந்திருந்த இந்தப் பெட்டிகள் இக்காலகட்டத்தில் மரத்தால் செய்யப்பட்டு அலங்காரங்களும் பூச்சும் முழுக்க அரக்கினால் செய்யப்பட்டிருந்தன என்று கண்டறிந்துள்ளனர். பல்வேறு மாதிரியான யாளிகள் பீடப்பெட்டியின் கைபிடியிலும் காதுகளிலும் செதுக்கப் பட்டிருந்தன. அரசகுடும்பத்தினரின் உயர் வாழ்க்கைத் தரத்திற்கும் தகுதிக்கும் ஏற்றாற்போல அமைந்து நுட்ப வேலைப்பாடுகள் மிகவும் வசீகரிப்ப்பவை.

'ஜூ ரன் (கிபி 182-248)' என்பவர் வூ நாட்டின் (கிபி 222-280) ஓர் இராணுவத்தளபதி. இராணுவத்தில் பல போர்த் தொடுப்புக்களின் போது அவர் ஆற்றிய பணிக்காக மிகவும் பாராட்டப் பெற்றவர். 140 புதைபொருட்கள் இவரது கல்லறையினின்று அகழ்ந்தெடுத்திருக்கிறார்கள். அவற்றில் 80 பொருட்கள் அரக்கில் செய்யப்பட்டவை. சில தட்டுகளில் அவருக்கு முந்தைய காலம் வரையில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்கள் அரக்கினால் ஓவியமாகத் தீட்டப்படிருந்தன.  வேறு சில தட்டுகள் அவருக்கு முன்பிருந்த வீரர்களையும் தீரர்களையும் கொண்டாடும் வகையிலான ஓவியங்களைக் கொண்டிருந்தன. அதில் ஓர் ஓவியம் பாய்லிஸி என்பவரையும் அவரது துணைவியாரையும் பற்றியது. இவர் ச்சின் முடியாட்சியின் கொண்டாடப் பெற்ற அமைச்சர். கணவனும் மனைவியும் இளவயதிலேயே பிரிந்தவர்கள்.  இருப்பினும், முதுமையில் ஒன்று சேர்ந்தவர்கள். அரக்கினால் தீட்டப்பட்ட இவ்வோவியத்தில் பாய்லிஸி மிகுந்த ஆனந்தத்தில் தன் கையை மார்பின் மீது வைத்திருக்க, அருகில் இருக்கும் மனைவி உருகிக் கண்ணீர் வடிக்கிறார்.

டாங் முடியாட்சிகாலத்தில் (கிபி 618-907) தான் ஸிச்சுவான் மற்றும் யுன்னன் மாகாணங்களில் இந்தக் கலை மறுபிறப்பெடுத்திருக்கிறது. மிக நேர்த்தியான கலை நுட்பங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டு பிரபலப்படுத்தப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் தங்கம் வெள்ளித் துண்டுகள் பல்வேறு அழகிய வடிவங்களில் வெட்டப்பட்டு அரக்குப் பூச்சின் மீது பதிக்கப்பட்டு பாலிஷ் செய்யப்பட்டது.

அதன்பிறகு ஸோங் காலங்களில் (960-1279) வேக வளர்ச்சியடைந்து யுவான் காலத்தில் (1271-1368) தான் பேய்ஜிங்கையே அடைந்திருக்கிறது. அப்போது தான் பேய்ஜிங் நாட்டில் தலைநகராகியிருந்த சமயம். உடனே, ஏராளாமான அரக்குக் கலைஞர்கள் பேய்ஜிங் நோக்கிப் படையெடுத்தனர். செழித்து உயர்ந்த பொருளாதார வளர்ச்சியும் உறுதியான நிலைத்தன்மையும் சமூகத்தில் எல்லா விஷயங்களையும் மேம்படுத்தியதைப் போல அரக்குக் கலையையும் முன்னெடுத்தது. ஏராளமாக உருவான ஒற்றை நிறக் கலைப்படைப்புகள் மிக நுண்ணிய கலை வெளிப்பாடுகளுடனிருந்தன.

அரண்மனை வளாகத்திலும் குடிமக்களிடையேயும் அரக்கு பொருட்களின் தேவை கூடிய மிங் காலத்தின் (1368-1644) தொடக்கத்தில் அரசரே ஓர் அரக்கு தொழிற்காலையை நிறுவினார்.  திறனாளர்கள் நாடெங்கிலுமிருந்து வரவழைக்கப்பட்டனர். வந்தவர்கள் கைத் திறனில் போட்டா போட்டிகளை வெளிப்படுத்தினர். இயல்பாகவே, கலை வளர்ந்து செழித்தது. மிகப் பிரபலமான கலைஞர் ஹுவாங் ச்செங் தனது மற்றும் தனது முன்னோடிகளின் அனுபவங்களைச் சேகரித்துத் தொகுத்து அரக்குக் கலையைப் பற்றிய முதல் நூலை எழுதினார். இந்நூல் பின் வந்த பல கலைஞர்களின் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டாங் மற்றும் ஸோங் முடியாட்சி காலங்களில் அரக்கின் பயன்பாடும் தொழில் நுட்பமும் மிகவும் முன்னேறிவிட்டிருந்தன. கருப்பு அல்லது சிவப்பு நிறப் பின்னணியில் பயன்படுத்தப்படும் கண்ணைப்பறிக்கும் பளீர் வண்ணங்கள் அதிகரித்தன. ஷான்ஸி மாகாணத்தின் கபூகபெங் வட்டாரத்தின் கபாமென் என்ற ஊருக்கு அருகில் இருக்கும் பௌத்த ஆலயத்தில் எடுக்கப்பட்ட டாங் காலப் புதை பொருட்கள் மிக நுணுக்கமான கலையழகுடன் இருந்தன. ஸோங் முடியாட்சி (கிபி 960-1279) காலத்திலோ அரக்கு சாதனங்களில் கருப்பு நிறமே ஆதிக்கம் செலுத்தியது. அதன் பின்னர், யுவான் முடியாட்சி காலத்தில் (கிபி 1271-1368) தான் மீண்டும் சிவப்பு நிறத்தின் பயன்பாடு அதிகமானது.

முன்பெப்போதும் விட அதிகமாக அரக்கைப் பயன்படுத்திய மிங் மற்றும் ச்சிங் அரக்கு பாண்டங்களில் அரச முத்திரைகள் பொறிக்கப்பட்டிருந்தன. இந்த இரு ஆட்சிகாலங்களில் அரக்கு பொருட்களின் தொழில் நுட்பம் வளர்ந்து அதற்கான துறையே உருவாகி முன்னெடுக்கப்பட்டது. அரக்கு சாதனங்கள் உருவாக்குவதில் நுண்ணிய கலைவேலைப்பாடும் மிகப் பரவலாக வளர்ந்தது. ச்சிங் காலத்திலும் அரசகுலத் தொழிற்சாலை இருந்திருக்கிறது. அரசவையிலும் அரக்குக் கலை ஆச்சரியத்தக்க அழுத்தமான அங்கீகாரத்தைப் பெற்றது. ச்சிங் முடியாட்சியின் அரசர் ச்சியாங்லோங் அரக்கு பொருட்களின் காதலர். அரசரே ஒரு கலைஞர் என்றதால் அவரது ஆட்சியில் தான் இக்கலை உச்சத்தை எட்டியிருக்கிறது. அவர் தனது சவப்பெட்டியைத் தானே வடிவமைத்து அரக்கு பூசச் செய்து மிக அழகாகச் செதுக்கித் தானே அலங்கரித்தார். ச்சிங் முடியாட்சி காலம் முடியும் போது இக்கலை சரியத் தொடங்கியது. டோ வாஜெர் அரசி சிஸியின் 60வது பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கே கூட தலைநகரில் போதிய கலைஞர்கள் இருக்கவில்லை. மீண்டும் 1970களிலிருந்து தான் பரந்து புறப்பட்ட சீனாவுக்கு வந்த வெளிநாட்டினரின் ஆழ்ந்த ஈடுபாட்டினாலும் விருப்பத்தினாலும், பாரம்பரிய அரக்குக் கலயங்கள் மறுபடியும் உருவாக்கப்பட்டன.

கலாசாரப்புரட்சியின் போது மௌ சோ துங்கின் ஆணைப் படி ஏராளமான அரக்கினாலான செதுக்கு கலைப்பொருட்கள் நவீன சிந்தனைகள் என்ற பெயரில் கட்சியின் கோட்பாடுகளைச் சொல்லும் விதத்தில் வடிவமைப்பட்டன.  மௌ சோ துங்கின் மனைவி, தான் இறக்கும் முன்னரே ஒரு ரயில்வே அதிகாரியையும் அவரது மகளையும் பற்றிய கதையைச் சொல்லும் 'சிவப்பு லாந்தர்' என்றறியப்படும் அரக்கு வேலைப்பாடுடனான 15 கல்வெட்டுகள் உருவாக்கும் பணியைத் துவங்கி வைத்தார். இருப்பினும், அதே மனைவி மௌ சோதுங் இறந்ததும் அவரது கொலைக் குற்றத்துக்காகக் கூண்டிலும் ஏற்றப்பட்டார்.  கலாசாரப் புரட்சிக்குப் பிறகு பாரம்பரியத்துடன் புரட்சியை இணைப்பதாகப் பிராசாரம் செய்யப்பட்ட இவை கிடங்கில் கடாசப் பட்டன. இன்றைய காலகட்டத்தில் தான் புதுப்பிக்கப் பட்டன. அந்த அரக்கு செதுக்கோவியத்தில் இருந்த மௌ சோதுங்கின் முகம் சுரண்டி அகற்றப்பட்டது. அதை உருவாக்கிய கலைஞரிடம் மீண்டும் அவரது முகத்தைச் செதுக்கியுருவாக்க வேண்டிய போது மறுத்து விட்டார்.

பின்னர், அந்தப் பொருட்கள் அனைத்தும் பாதுகாப்படாமலே இருந்தன. சமீபத்தில் தான் மீட்கப்பட்டு லண்டனில் அருங்காட்சியகத்தில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. ஒரு கலைப்பாண்டம் 200 அரக்குப் பூச்சுகளையும் பச்சைப்பவளம் மற்றும் அரிய மணிகள் கொண்டு அலங்கரிக்கப் பட்டுள்ளது. சீன அரும்பொருட்கள் சேகரித்துப் பாதுகாக்கும் பீட்டர் வெயின் என்பவர், ஓஇதை உருவாக்க இயற்கையாகக் கிடைக்கக் கூடிய அனைத்து பொருட்களையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். பூச்சுக்கு மேல் பூச்சாக இருந்தாலும் செதுக்கு வேலைகளும் அழகுறப் பதித்திருக்கும் நவமணிகளும் தான் வசீகரம் அதிகம் சேர்க்கின்றன. தொழில்நுட்பமாகவே இருப்பினும், இது கலைநயம் மிகக் கொண்டிருக்கிறது. அது மட்டுமில்லாமல், 2000 வருட சீனக் கலையின் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கின்றதுஔ, என்கிறார். 

ஏராளமான செதுக்கோவியக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. ஒரு கல்வெட்டில் கொரியப் போரின் போது மலைகளேறிச் சென்று ஆயுதங்களைக் கொடுத்த பெண்கள் சித்தரிக்கப் பட்டுள்ளனர்.  ஓராயிரம் கிலோமீட்டர் தூர ரயில் தண்டவாளத்தைக் கட்டும் பணியில் 10,000 தொழிலாளிகள் உயிரிழந்தனர். அவர்களின் உழைப்பும் திறனும் பற்றி ஒரு கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இவர்கள் எல்லோருமே 60களிலும் 70களிலும் கிராமப்புறங்களுக்கு வலுக்கட்டாயமாகத் துரத்தப்பட்டவர்களில் அடங்குவர். இன்றைக்கும் சில கலைப்பொருட்கள் சீனர்களால் அபசகுனமாகக் கருதப்படுகின்றன. ஒபாலம்ஒ செதுக்கப்பட்ட கல் பாளம் அவ்வகையைச் சேர்ந்தது. இதை உருவாக்கி தயாராகக் கொண்டு வருவதற்கு முன்தினம் மௌ சோதுங்கின் இராணுவ அமைச்சர் லின் பியாவ் விமான விபத்தில் இறந்து போனார். சீனர்களில் பெரும்பகுதியினருக்கு கலாசாரப் புரட்சி நாட்டைப் பல பத்தாண்டுகளுக்குப் பின்தங்க வைத்து விட்டது என்ற ஆற்றாமை. இந்த அரக்கு செதுக்கோவியங்கள் மிகவும் அரிய அழகுடன் விளங்குவது உண்மை என்றபோதிலும் சீனர்கள் முற்றிலும் மறக்க விழையும் வரலாறைக் குறிப்பதால், வீரதீரச் செயல்களாகவும் தியாகங்களாகவும் சித்தரிக்கப்பட்ட போதிலும் கூட அவர்கள் அவற்றை ஏற்க விரும்புவதில்லை.  

Comments