Skip to main content

தொடரும் பயணம்


 

ஒரு தேவதையைப் போலதான் 
வாழ்ந்திருந்தாள்.
கிரீடத்தில் நட்சத்திரங்களாக 
ஒளிர்ந்த வைரங்களுடன்
கூந்தலின் நிறம் போட்டி போடவும்
பறத்தலில் வேகம் குறைந்தது.
உதிரும் சிறகுகளால்
வீடெங்கும் குப்பையாவதாக
இறக்கைகள் 
வலுக்கட்டாயமாகப் பிடுங்கப்பட்டன.
ஆயினும் கூட்டிலே ஓய்வெடுக்க
அனுமதியில்லை.
நடந்தேனும் ஊர்ந்தேனும் 
தனக்கான தானியத்தை
ஈட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயம்.

பாய்ந்து வந்த
வார்த்தை அம்புகளைத் தடுக்க
எட்டுகிற தொலைவில் கிடந்தும்
கேடயத்தை எடுக்கின்ற தெம்பில்லை.
சுழற்றி வீச வாளொன்று 
சுவரிலே தொங்கியும்
நிமிர்த்திப் பிடிக்க 
விரல்களில் வலுவில்லை.
இவள் தொட்டு ஆசிர்வதித்த
செங்கற்களைக் கொண்டு 
எழுந்த மனையென்பது
எவர் நினைவிலும் இல்லை.

மேகங்களுக்குள் புகுந்து
வெளிவந்த காலத்தில் 
அதன் வெண்மையை வாங்கி 
மிளிர்ந்த உடை
பழுப்பாகிப் போய்ப் பாதந்தடுக்க
இரை தேடக் கிளம்புகிறாள்.
வழக்கமாகச் செல்லும் பேருந்தைத்
தவற விட்டதாக எண்ணி
நடக்கத் தொடங்குகிறாள்.
ஓரிரு மணித்துளிகளில்
ஒட்டி வந்து நின்றது
அன்றைக்குத் தாமதமாகப் 
புறப்பட்டிருந்த பேருந்து.
சாலைவிதிகளை மீறி
நிறுத்தக் கூடாத இடத்தில் நிறுத்தி
ஏறிக் கொள்ளுமாறு அழைத்த 
ஓட்டுநரின் அன்பும் கனிவும்..

மயிற்பீலியின் நீவலென
ஆற்றுகிறது மனதின் காயங்களை.

கால் துவளும் வேளையில்
ஏதேனும் ஒரு பல்லக்கு
எங்கிருந்தோ வந்தடைகிறது
பயணத்தைத் தொடர.
***

-

Comments

ஷைலஜா said…
//கால் துவளும் வேளையில்ஏதேனும் ஒரு பல்லக்குஎங்கிருந்தோ வந்தடைகிறதுபயணத்தைத் தொடர.***
/////


அழகிய வரிகள்!

வாழ்த்துகள் ராமலஷ்மி.
முள்ளும் இருக்கிறது... மூலிகையும் இருக்கிறது பயணத்தின் பாதையில்...
மதி said…
ஒரு விரக்தியின் வேளையில் தெம்பேற்றும் ஒரு சின்ன நிகழ்வையும் அதற்கு முன்னான விரக்தியையும் நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள். கவிதையின் முடிவை மிகவும் ரசித்தேன்
மிக்க நன்றி ஷைலஜா, நீலகண்டன், மதி.