Skip to main content

Posts

Showing posts from September, 2011

ழ கவிதைகள்

ழ 5வது இதழ் டிசம்பர் 1978 ஜனவரி 1979 மூன்று கவிதைகள் வி பார்த்தசாரதி 1. திரும்புகிறார்கள் மழைத்துளிக்குப் பயந்து பலர் கடற்கரையில் 2. நேற்று என்னால் காற்றைப் பார்க்க முடிந்தது இன்று நீ இதை 'செடி' என்று சொன்னாலும் சரி 'சிறு மரம்' என்று சொன்னாலும் சரியே 3. நீ போய்க் கொண்டிருக்கிறாய் நான் வந்து கொண்டிருக்கிறேன் அல்லது நீ வந்து கொண்டிருக்கிறாய் நான் போய்க் கொண்டிருக்கிறேன் அதனால்தான் நாம் சந்திக்க முடிகிறது வெளியில் இப்படி.

எட்டாவது நிறம்

*  ஏழு வர்ணப் பென்சில் கொண்டு வரைந்து காட்டிய வானவில்லோடு எட்டாவது நிறமாக ஒட்டிக் கொள்கிறது பாப்பாவின் வளைந்த குட்டிப் புன்னகையொன்று ******

காலம்

ழ 5வது இதழ் டிசம்பர் 1978 ஜனவரி 1979 யாரோ காலமானார் என்ற செய்தி என் எதிரில் நட்சத்திரமாகத் தொங்குகிறது காலமென முதலில் உணர்ந்தவன் கபாலச் சூடு பொரியும் ஆன்மை நிறைந்தவனாக இருந்திருப்பான் சில சமயத்தில் தோன்றுகிறது காலம் நிர்ணயிக்கப் பட்டிருப்பது போல ஆனால் பற்ற முடியாமல் நழுவிப் போகிறது. எங்கேயோ காத்திருக்கிறது? காதலுடன் மெளனம் சாதிக்கிறது காலம் காலமாகக் கடல் ஒலிக்கிறது வெற்று வெளியில் மேகம் சஞ்சரிக்கிறது கனத்த காலப் பிரக்ஞையை எனக்குள் விதைத்து விட்டார்கள்.  எவ்வளவோ காலம் கடந்தும் அறிந்து கொள்ள என்னவென்று அது-முளைக்கவே இல்லை.  ஆனால் விலகாத கிரஹணமாக என் எதிரில் தொங்கிக் கொண்டேதானிருக்கிறது யாரோ காலமான செய்தி. நானும் ஒரு காலத்தில் காலமாகி விடுவேனோ என்பதில் மட்டும் முளைத்து விடுகிற பயம் சொட்டுச் சொட்டாய் உதிரக் காத்திருக்கிறது - காலம் வராமல்.......

மழை துரத்திய இரவில்

வானத்தில் வந்த பூகம்பம் போல் திடீரென இடி முழக்கம் . விண்மீன்களையெல்லாம் சுனாமி அடித்துச் சென்றது போல் வெறுமையாய் கருவானம் . இடை இடையே வானத்தைக் கீறித் தெறித்த ரத்தமற்ற நரம்புகளாய் மின்னல் . எங்கோப் புறப்படுகிற மழை என்னை இங்கேத் துரத்தியது . தூங்குவதற்கு முன் சன்னல்களையெல்லாம் அடைத்து விட்டேன் . இடிக்கு அஞ்சி கேபிள் இணைப்புகளையெல்லாம் திறந்து விட்டேன் . மொட்டை மாடியில் தொங்கிய   துணிகளையெல்லாம் தூங்கும் அறைக்குள் தூங்க விட்டேன் . நானும் தூங்கிப் போனேன் வருகிற மழையும் வந்ததாய் .. இடையில் கொசுக்கள் வந்து கடித்து எழுப்ப தொப்பையாய் நனைந்திருந்தேன் வியர்வையில் . நீச்சல் தெரியாத இன்னொரு கொசு வியர்வை மழையில் நனைந்து முங்கிச் செத்தது. சன்னலைத் திறந்தேன் . வழக்கம் போல் வெறும் வானம் விண்மீன்களுடன் ஒரு விளையாட்டுப் புன்னகையுடன் ... கொசுக்கள் குதூகலத்துடன் கைதட்டிப் பறந்தன. அன்றைய இடியின் முடிவு இப்படியொரு கவிதையாய் .  

வெயில் மங்கும் எழுத்துக்கள்..

* கண் மூடித் திறந்த ஒரு நொடியில் இருள் வந்துவிட்டது அடுத்த நொடியில் மீண்டது பகலின் நிழலென பரவும் இரவின் நிழலென பரவும் பகல் வாசிக்க முடியாமல் மங்கும் எழுத்துக்கள் மொத்தமும் புத்தகத்திலிருந்து கொட்டுகிறது நிழலை இரவை இழுத்துக் கொண்டு பால்கனியில் வெயில் பட வைத்திருக்கும் தொட்டியில் ஊற்றி வைத்திருக்கிறேன் இரவை செடியின் காம்பில் ஊர்கிறது எழுத்துக்களை சுமந்தபடி எறும்புகள் வெயில் பட்டுப் பட்டு ஒரு வசந்தத்தில் பூக்கத் தொடங்குகிறது ஒவ்வொரு எழுத்தாய் எல்லா பகலும் வாசிக்கத் தோதாய் எல்லா இரவும்

முதல் நிலவு

சூரியக்குடும்பத்தில் ஒரு கோளுக்கு இருபத்தேழு நிலவுகள் இருப்பதாக ஆய்வுகளின் முடிகள் தெரிவிக்கின்றன. பகலென்ன இரவென்ன ? எப்போதும் நிலவுகளின் ஒளியில் எனை நனைத்துக்கொண்டேயிருப்பேன் ஆதலால் நான் என்னை அங்கே செலுத்திக்கொள்ளலாம் என்றிருக்கிறேன் இப்படிச்சொன்னதிலிருந்து ஒரு நிலவு என்னுடன் பேச மறுத்துவிட்டது. -

குழப்பம்

    0 எட்டாம் வகுப்பு கணக்கு வாத்தியார் மோசஸ்சார் பற்றி கொஞ்சம் பேசலாம் கருத்த உருவம் தொடர்பற்ற பேச்சு கன்னாபின்னா கோளத்துக்குள் கன்னாபின்னாவென வேலை செய்யும் மூளை வகுப்பறையில் தூங்கும் சோம்பேறி சுவரசியமாக எதுவுமில்லையா? முப்பதாவது வயதில் லாரி ஏறி மூளை வெளித்தள்ளி இறந்து போனார் அவரை நீங்கள்தான் இந்தக் கவிதையைப் பயன்படுத்தி கொன்றுவிட்டீர்கள் என்றால் நம்புவீர்களா?

சற்று முன்..

*  உரையாடல் முடிந்தது நீ சென்ற பிறகும் சொட்டிக் கொண்டிருக்கிறோம் நானும் சற்று முன் ஓய்ந்த மழையின் துளியும் *****

ஒரு மழை நாள்

கார்மேக ஊர்வலத்தைக் கண்டு மயில் தோகை விரிக்கும் பூமியை குளிரச் செய்ய வானம் கருணை கொள்ளும் மரங்கள் தான் செய்த தவங்கள் வீண்போகவில்லையென மெய்சிலிர்க்கும் குடை மனிதர்களுக்கு மூன்றாவது கையாகும் காகிதக் கப்பல்கள் கணித சமன்பாடுகளைச் சுமந்து செல்லும் கொடியில் காயும் துணிகளெல்லாம் எஜமானியம்மாவை கூவி அழைக்கும் ஆடுகள் மே என்று கத்தியபடி கொட்டிலுக்கு ஓட்டமெடுக்கும் தேகம் நனையச் செல்லும் தேவதையை கண்கள் வெறித்துப் பார்க்கும்.

பிளாஸ்டிக் நதி

*  எந்தவொரு நதியின் மீதும் புகார் சொல்வது முடியாது என்றபடி அதன் கழுத்தைத் திருகுகிறேன் பிளாஸ்டிக் பாட்டிலில் தளும்புகிறது என் தாகம் *****     --

நனைந்த சிறகுகள்

மழைக்குருவியின் கிறீச்சல்கள் கொடியில் காய்ந்து கொண்டிருந்த துணிமணிகளை கொஞ்சம் கொஞ்சமாக நனைத்து விட்டிருந்தது. பின்னர் வந்த மழைக்கு நனைக்க ஏதுமின்றி. ஏமாற்றத்துடன் திரும்ப விரும்பாத மழை குருவியின் சிறகுகளை நனைத்துச்சென்றது

துண்டு நிழல்

* ஜன்னல் வழிக் காற்றில் சுழலும் மின் விசிறியின் நிழல் துண்டு துண்டாய் அறுத்துக் கொண்டிருக்கிறது இந்த அறையை என் தனிமையை ****   

சிறகைக் கோதும் சாம்பல் நிற மாலை..

*  மழையைக் கொண்டு வந்து சேர்கிறது உன் சொற்கள் அதன் ஈரத் திவலைகள் சிதறி முளைக்கிறது என் மௌனம் காரைப் பெயர்ந்த நம் சுவரின் சுண்ணாம்புச் செதிலில் விரல் வரைந்த கோடுகளாகி பாசிப் படர்கிறது கரும் பச்சை நிறமாகும் பெயர்கள் விட்டுக் கொடுத்தல்களோடு முடிந்து போகும் உரையாடல்களை காலக் காகிதத்தின் கசங்கியப் பக்கங்களில் சேமித்து வைத்திருக்கிறேன் அதிலிருந்து புறப்படும் இசைக் குறிப்புகள் ஜன்னல் கடந்து விரையும் காற்றோடு போய் சேர்கிறது கிளையிலமர்ந்திருக்கும் பறவையிடம் சிறகைக் கோதும் சாம்பல் நிற மாலையில் குறுஞ் செய்தியொன்றை தாவிப் பிடிக்கிறது கண்கள் மழையைக் கொண்டு வந்து சேர்பிக்கிறது உன் சொற்கள்.. ******     

உயிரோசை

உண்மையை உண்மையென்று உணர்த்த இத்தனை விவரங்களை ஈமெயிலில் நீ அனுப்பித் தந்த போதும் தொலைபேசியில் தெரிவித்த உன் குரல்வழி விளக்கமே போதுமானது எனக்கு. ஏனெனில் தொலைபேசியில் ஒலித்தது உன் உதடுகளின் ஓசையா? ஒரு உயிரின் ஓசை அல்லவா?

குழந்தையின் நிலாப் பயணம்

பிறையின் வளைவினில் வசதியாய் ஒரு குழந்தை உட்கார்ந்து கொண்டது. நிலாவும் குதூகலமாய் குழந்தையை உலகம் முழுவதும் சுற்றிக் காட்டிக் கொண்டிருந்தது . அதற்குள் அம்மா பள்ளிக்கு நேரமாகிறதென குழந்தையை அடித்து எழுப்பி பலவந்தமாய் இழுத்துப் போனாள்.  

உண்மை

        உண்மைகள் என்றால்  அவனுக்குக் கொள்ளைப் பிரியம் தனக்குத் தெரியாத உண்மைகளே  இருக்கக் கூடாதென்பதில் தணியாத மோகம் அரைகுறை உண்மைகளை அறவே வெறுத்தான் முழு உண்மைகளை என்ன விலை கொடுத்தேனும் வாங்கத் தயாராக இருந்தான் அவனது பாதுகாப்பே விலையென்றாலும்  பயப்பட மாட்டான் எந்தக் கடையில் எந்த உண்மை விலைக்கு வந்தாலும் முதலில் அவனுக்கே  சொல்லி அனுப்பினார்கள் சந்தைக்கு வராத உண்மைகளைச் சந்திப்பவரிடமெல்லாம் தேடினான் சத்தியத்தை மீறியேனும் அவை தன் சட்டைப்பைக்குள் வர சகல உத்திகளையும் கையாண்டான் சேகரித்த உண்மைகள் இரும்பாய்க் கனத்து இழுத்தாலும் காட்டிக் கொள்ளாமல் நிமிர்ந்தே நடந்தான் அறியாதவற்றால் ஏற்படும் ஆச்சரியங்களாலும் தெரிய வராதவற்றால் தொடரும்  சுவாரஸ்யங்களாலும் உயிர்த்திருக்கும் வாழ்வில் மறுக்கப்படும்  உண்மைகளால் மட்டுமே பிழைத்துக் கிடைக்கும் நாளையைப் பற்றியதான நம்பிக்கை  என்கிற உண்மை மட்டும் பார்வைக்குச் சிக்காமல்  அவனது நடுமுதுகில் அமர்ந்து  கண்சிமிட்டிச் சிரித்தபடி  சவாரி செய்து கொண்டிருந்தது தன்னை விலை பேசவே முடியாதென்று.

பார்வைகள்

          டெட்ராய்ட் நகரத்தின் ஒரு டிசம்பர்மாதக்  காலைப்பொழுது.   வழக்கம் போல ஜாக்கிங்கிற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் என்னைப் பற்றி சிறு அறிமுகம்.   பெயர் அரவிந்தன்.வயது இருபத்தி எட்டு,இந்தியாவிலிருந்து அலுவலக வேலையாய் அமெரிக்கா வந்திருக்கிறேன்.கார் நகரத்துக்காரிகைகளை ரசித்தபடியே ஆறுமாதங்களைக்கழித்துவிட்டேன்.. ஆயிற்று அடுத்தவாரம் தாய்மண்ணே வணக்கம் என்று கூவிக்கொண்டுசிங்காரச்சென்னைக் குப்போய்விடுவேன்.   தினமும் ஜாக்கிங் செய்யும் பாதையில்  என் கால்கள் செல்கின்றன. எங்கும் மூடுபனியின் ஆக்கிரமிப்பு.   மிச்சிகன் மாகாணத்தின் பிரசித்தி பெற்ற குளிருக்குப் பாதுகாப்பாய்த் தான் புறப்பட்டு வந்திருக்கிறேன்.   எல்லாவற்றிலும் எனக்கு முன்எச்சரிக்கை உணர்வு அதிகம். என் பார்வை கூர்மையானது. பள்ளி நாட்களிலிருந்தே கண்பார்த்ததை மனசு உள் வாங்கிக் கொள்ளும். எனது இந்தத் திறமைதான் என்னை இந்த உயர்நிலைக்கு வரவழைத்திருக்கிறது என்பதில் பெருமை எனக்கு!   எதேதோ நினனத்தபடி ஜாக்க்கிங் முடித்து என் அபார்ட்மெண்ட்டிற்குத் திரும்ப நடக்கிறேன்.   அப்போதுதான் உணர்கிறேன் பாதை தெரியாத  அளவுக்கு பனிப்படலம் புகையாய் சூழ்ந்துவிட்டி

ழ கவிதைகள்

ழ என்ற சிற்றேடு ஆத்மாநாம் மூலம் 1978 ஆம் ஆண்டு உருவானது.  அவருக்கு பக்கபலமாக ஞானக்கூத்தன், ஆர்.ராஜகோபாலன், ஆனந்த், காளி-தாஸ் போன்ற பல நண்பர்கள் செயல்பட்டார்கள். ழ ஒரு சிற்றேடு.  மிகக் குறைவான பேர்களே வாசித்திருப்பார்கள்.  1978 லிருந்து 10 ஆண்டுகள் செயல்பட்ட ழ பத்திரிகை, ஆத்மாநாமின் தற்கொலையால் கிட்டத்தட்ட நின்றுவிட்டது. தமிழ் கவிதைக்கு ஒரு மாற்றத்தை எளிய வழியில் ஏற்படுத்திக் கொடுத்தது. இக் கவிதைகளைப் படிக்கும்போது கவிதை எழுதுவதற்கான ஒருவித ஒழுக்கத்தை பலரும் கற்றுக்கொள்ள முடியும். அப் பத்திரிகையில் வெளிவந்த கவிதைகள் முக்கிமானவை.  கவிதை எழுத வேண்டுமென்கிற எண்ணம் உடையவர்கள், ழ வில் வெளிவந்த கவிதைகளை பயிற்சிக்காக எடுத்துக்கொள்ள வேண்டும்.  நவீன விருட்சம் பத்திரிகைக்குக் கூட ழ ஒரு முன்னுதாரணம். ழ வில் வெளிவந்த கவிதைகளை கொஞ்சம் கொஞ்சமாக உங்களுக்கு அறிமுகப் படுத்த நினைக்கிறேன்.  ழ 5வது இதழ் டிசம்பர் 1978 ஜனவரி 1979 இந்த நிழல் பசுவய்யா எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்? பாதத்தின் விளிம்பிலிருந்துதானா? அல்லது அதன் அடியிலிருந்தா? பூமியில் காலூன்றி நிற்கும் போது நிழல்மேல்தான்

எதையாவது சொல்லட்டுமா..........57

ஒவ்வொரு முறையும் அந்தக் கோயிலைத் தாண்டித்தான் வண்டி போகும்.  இதோ நான் இங்கு வந்து 2 ஆண்டுகள் ஆகப் போகிறது.  ஒவ்வொரு முறையும் நான் பஸ்ஸைவிட்டு இறங்கி வைதீஸ்வரன் கோயிலுக்குச் செல்ல வேண்டுமென்று நினைப்பதுண்டு.  ஆனால் முடிவதில்லை.  எங்கள் குடும்ப குலதெய்வம் அந்தக் கோயில்.  செப்டம்பர் 3 ஆம்தேதி சனிக்கிழமை இறங்கி அந்தக் கோயில்போய் சாமி தரிசிக்க வேண்டுமென்று நினைத்தேன்.  எதிர்பாராதவிதமாய் சங்கரைப் பார்த்தேன்.  அந்தக் கோயிலில் அவன் குடும்பமே பணிபுரிகிறது.  புதிதாக திறந்த ஒரு ஓட்டலுக்கு என்னை அழைத்துப் போனான்.  பின் அந்தக் கோயிலைப் பற்றி சொன்னான்.  மொத்தம் 300 பேர்கள் பணிபுரிவதாக சொன்னான்.  கூட்டம் தாங்க முடியாது.  திருப்பதிக்குப் பிறகு இதுதான் என்றான்.  உண்மைதான் கூட்டம் தினமும் மொய்த்துக் கொண்டுதான் இருக்கும்.''என் சகோதரர்கள் இருப்பார்கள்.  நீங்கள் போய் சாமி தரிசனம் பண்ணி அர்ச்சனை பண்ணுங்கள்,''என்றான்.  அர்ச்சனை டிக்கட்டுக்களையும், அர்ச்சனைப் பொருள்களையும் வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்தேன்.  பழையபடி அழுக்காகவே அந்தக் கோயில் காட்சி அளித்தது.  தினமும் ஆயிரக்கணக்கானவர் வருகின்

ப்ளோரிடா

ப்ளோரிடா என்ற இந்த ஊர் எனக்குப் பிடித்திருக்கிறது வீதியெல்லாம் நீரால் துடைத்தது மாதிரி சுத்தமாய் இருந்தது அங்கங்கே ஓங்கி உயர்ந்த மரங்கள் வரிசையாய் வீற்றிருந்தன இங்கேதான் என்னைக் கவர்ந்த எழுத்தாளர் ஐ.பி.சிங்கர் வாழ்ந்தாராம்.. மியாமி கடற்கரையில் ஓங்கி உயர்ந்த கட்டிடங்களைக் கடந்தவண்ணம் காரில் பறந்தவண்ணம் இருந்தோம் ஐ.பி சிங்கர் பெயரில் ஒரு தெருவைக் கடந்து  சென்றதாக புதல்வன் சொன்னான் என் மனதுக்குகந்த எழுத்தாளர் ஏதோ ஒரு வீட்டில் வாழந்திருப்பார் இங்கிருக்கும்போது அவர் ஞாபகமும் அவர் எழுத்தின் மணமும் சுற்றி சுற்றி வந்தன.. ஏன்..............?

ஒரு மாதமாய்.......

கடந்த ஒரு மாதமாய் நாங்கள் மூவரும் இந்த வீட்டில் இருந்தோம் பல ஆண்டுகளாய் அப்படி இல்லை புதல்வன் தூர தேசத்தில் இருந்தான் நானோ இன்னொரு கோடியில் இருந்தேன் வீட்டில் அடைப்பட்டிருந்தாள் மனைவி இங்கே - மூவரும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கூடியிருந்தோம் உண்டு உறங்கினோம் வெளியே கிளம்பி ஊர்ச் சுற்றத் தொடங்கினோம் வாழ்க்கையில் இந்தத் தருணம் கிடைத்தது குறித்து மகிழ்ந்தோம் எங்களின் வார்த்தைகளின் பரிமாற்றம் சில நொடிகளே.... இதோ ஒவ்வொருவாய் ஒவ்வொரு திசைக்குப் பயணமாகிறோம்.... (12.08.2011 / Florida 1.20 pm)

நியுயார்க்

நான் தெருவில் காலடி எடுத்து வைத்தபோது உயரமான அந்தக் கட்டிடங்கள் என்னை வியக்க வைத்தன ஒன்றொடு ஒன்று ஒட்டி உறவாடிக் கொண்டிருப்பதுபோல் கட்டிடங்கள் ஒவ்வொன்றையும் அண்ணாந்து பார்க்க பார்க்க தட்டாமாலை சுற்றுவதுபோலிருந்தது. தெருவெல்லாம் கூட்டம் கூட்டமாய் ஆண்களும் பெண்களும் நடந்தவண்ணம் சென்று கொண்டிருந்தார்கள் மாலை வேளையில் டைம் ஸ்கெயர் என்ற இடத்தில் கூட்டமாய் கூடியிருந்தார்கள். ஒருவர் சத்தமாய் கிதாரை வைத்துக்கொண்டு பாட்டு பாடிக் கொண்டிருந்தார் பலர் கூட்டமாய் கூடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் ஓவியர்கள் சுற்றி இருந்தவர்களை உட்காரவைத்து ஓவியம் வரைந்து கொண்டிருந்தார்கள் வயதானவர்கள் நடக்கமுடியாமல் அங்கிருந்த நாற்காலிகளில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள் கட்டிடங்கள் மேல் வண்ணமயமான விளக்குகளின் வெளிச்சத்தில் விளம்பரங்கள் ஓடிக் கொண்டிருந்தன. எங்கும் ஹோ ஹோ என்ற சத்தம் கேட்டுக்கொண்டிருந்தன. பெண்கள் அரைகுறை உடைகளுடன் மிதந்த வண்ணம் இருந்தார்கள். திசை தெரியாத திசைக்கு நாங்களும் சுழன்று கொண்டிருந்தோம்.

பதினேழாம் வயது

எனது ஐ.க்யூ'வை கணக்கிலெடுத்து, என்னுயரத்திற்கு சரியானவன் எனக்கணித்து , என் வாழ்நாள் முழுதும் துணையாக உடன் வரத்தக்க பொருத்தமான ஒருவனை தேர்ந்தெடுத்தால், அவன் ஏற்கனவே பல சலிப்பூட்டும் இளம்பெண்களின் காதலனாகவே இருந்திருக்கிறான் அவன் தனது நீண்ட காலக்கனவை என்னுட்ன் விவாதிக்கிறான் இவனும் மற்ற இளைஞர்கள் போலவே நிகழ்காலத்தில் வாழ மறுக்கின்றவனாகவே இருக்கிறான். சலித்துத்தான் போகிறது எனக்கும்.

எதையாவது சொல்லட்டுமா - 56

  ஒரு சம்பவம் நடந்தது.  அதாவது 28ஆம் தேதி ஜூலை மாதம். ஞாயிற்றுக்கிழமை.  வழக்கம்போல் சென்னையிலிருந்து மாயூரம் கிளம்ப வழக்கம் போல் இரவு 8 மணிக்குமேல் e-ticket ஐ பிரிண்ட் எடுத்தேன். எனக்கு டிக்கட் எப்போதும் என் உறவினர் ஒருவரால் புக் செய்யப்படும்.  அவரும் என்னைப்போல் ஞாயிறு இரவு கிளம்பி திங்கள் மாயூரம் வந்து பின் திருக்கடையூர் பயணம் செய்வார்.  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமையிலும் அவருக்கும் எனக்கும் டிக்கட் எடுப்பார். எப்போதும் நாகூர் விரைவு வண்டியில்தான் நாங்கள் செல்வோம்.  அது காலையில் மாயூரம் 4.50 மணிக்குச் செல்லும்.  நாங்கள் இருவரும் கொஞ்ச தூரம் நடந்து ஒரு டீக் கடையில் காப்பி குடிப்போம். பின் நடந்து சென்று ஒரு பஸ்பிடித்து நான் என் இடத்திற்கும், அவர் திருக்கடையூரிலுள்ள அவர் இடத்திற்கும் செல்வார். 28ஆம் தேதி அவர் என் கூட வரவில்லை.  எனக்கு மட்டும் டிக்கட் அவர் பதிவு செய்திருந்தார்.  நான் வழக்கம்போல இரவு 9.45க்குக் கிளம்பி மாம்பலம் ரயில்வே நிலையம் சென்று எக்மோர் டிக்கட் வாங்கி மெதுவாக வந்து சேரும் மின்சார வண்டியில் தொற்றிக்கொண்டு எக்மோர் சென்றேன்.  நாகூர் வண்டியைத் தவிர எல்லா வண்டிகளு

வானத்தில் இரண்டு நிலாக்கள்

கணினித் திரையில் அடோப் ஃபோட்டோ ஷாப்பில் ஒரு அழகான நிலாவை வரைந்தேன் . வானத்து நிலா எனக்கு மாடலாக இருக்க இன்னும் வண்ணமயமாக்கினேன் கணினித் திரையில் .. அந்த லேயரை நகலெடுத்து இன்னொரு நிலாவாக ஒட்டினேன் . அந்த நிலாவில் மௌஸை வைத்து தேர்வு செய்து அதனை அப்படியே டிராக் அன்ட் டிராப்பில் இழுத்து வானத் திரையில் விட்டேன் . பூமியில் நன்றாய் தெரிய தேவைக்கேற்ப என்லார்ஜ் செய்தேன் . அடுத்த நாள் எல்லா செய்தித் தாள்களிலும் வானத்தில் இரண்டு நிலாக்களென்பதே தலைப்பு செய்தியாக இருந்தது . தேநீர் கடைகளில் தேநீரை விட சூடாக இருந்தன நிலாச் செய்தி . பரபரப்பான ஊழல் விசாரணைகளும் பாராளுமன்ற சலசலப்புகளும் மக்களுக்கு மறந்தே போயிற்று. அலுவலகங்களில் அன்றாட அலுவல்களை நிலா கிரகணமாய மறைத்தது . நாசா விஞ்ஞானிகளும் இந்திய விஞ்ஞானிகளும் விதவிதமாய் விளக்கம் தெரிவித்தார்கள் . நான் வரைந்து வானத்தில் ஒட்டியதை யார்தான் நம்பப் போகிறார்கள் .  

தரிசனம்

பரிச்சயமற்ற நகரின் பிரதான பெண்தெய்வத்தின்  தரிசனம் வேண்டுமென்றாள் வயோதிகத்தால் நிதானமானவள்  என் கைப்பிடித்து நடந்தாள் ஒரு முக்கிய நாற்சந்தியின் ஏதோ ஒரு திருப்பத்தில் திரண்டிருந்த மக்களுடன் கடவுளை நெருங்குகையில்  வழி மாறியதை உணர்ந்து கொண்டாள் வேற்று மார்க்கத்தின் பிரத்தியேக இறைவனை குளிரூட்டும் பசுமையை வேறு மனிதர்களை சிறுமியின் ஆர்வத்துடன் பார்த்தாள். தவறுக்கு வருந்தி அவள் தெய்வத்திடம் கூட்டிச் செல்ல விழைந்தேன் பணிவாக மறுதலித்த அவள் கண்களில் மதங்களுக்கு முந்தைய கடவுளுக்கு முன் பிறந்த ஆதி மனுஷியின் ஆனந்தமும் அமைதியும் கண்டேன் பேருந்தில் திரும்புகையில் கடவுளர்கள் சிறைப்பட்டிருந்த கட்டிடங்களின் உச்சி விளக்குகள் அணைந்து எரிந்து அளவளாவுவது புரியத் தொடங்கியது அன்றுதான்