Skip to main content

Posts

Showing posts from November, 2011

அறையிருட்டு

எஞ்சியிருந்த மெழுகுவர்த்தி சுடரை காற்றின் உதவியுடன் புகையாக்கி ஒளியை விழுங்கியது அறையிருட்டு. மனிதவிழிகள் கூட தனது ஓட்டைகளை பார்க்க முடியாதென கர்வம் கொண்டது. தனது சுயசொரூபத்தை முழுக்க உணரும் வேட்கையில் சன்னலுக்கு வெளியே படர்ந்திருந்த பேரிருட்டின் அங்கமானது. பேரிருட்டு விரியும் திசைக்கு மாற்றுதிசையில் பேரிருட்டுப்பாதையினூடே விரைந்து பறந்தது. +++++ சில ஆயிரம் மைல்கள் தூரத்தில் பேரிருட்டின் எல்லை முடிந்தது. எலலையற்ற தன்மையை அனுபவமாய் உணரும் பேரார்வத்தில் சூரியவொளி ஆக்கிரமித்திருந்த நிலப்பரப்பில் நுழைந்தவுடன் அறையிருட்டின் ஒருபகுதி பஸ்மமானது. வந்த வழி உடன் திரும்பி பேரிருட்டின் பாதையூடெ அறைக்கு மீண்டு வர எத்தனிக்கையில், சூரியவொளியின் நீளும் கரங்களில் சிக்கி பேரிருட்டுடன் சேர்ந்து அறையிருட்டு கரைந்துபோனது. +++++ பேரிருட்டின் ஆவியுடல் சரண் புகுந்த ஏதொவோர் இடத்தினிலேயே அறையிருட்டின் ஆவியுடலும் அகதியானது. பேரொளியின் ஆட்சி ஒய்ந்தபின் மீண்டும் உயிர்க்கும் போது அறையிருட்டையும் உயிர்ப்பித்து அதன் அறையில் சேர்த்துவிடுவதாக பேரிருட்டு வாக்களித்தது.

எதையாவது சொல்லட்டுமா.........62

சமீபத்தில் நான் ஒரு நண்பருக்கு போன் செய்தேன்.  அவர் பெயர் ரவி.  என் சிறிய நோட் புத்தகத்தில் ரவி என்று பெயரிட்டு எழுதியிருந்த தொலைபேசி எண்ணைத் தேர்ந்தெடுத்து போன் செய்தேன்.  ரவிதான் எடுத்தார்.  ஆனால் நான் எதிர்பார்த்த ரவி அல்ல அவர்.  உண்மையில் நான் பேசவே நினைக்காத ரவிதான் அவர்.  ''நான் ரவி பேசுகிறேன்,'' என்றவுடன்.  ஐய்யயோ தவறு செய்துவிட்டோ மே என்று தோன்றியது.  பின் சமாளித்தேன்.  ''எப்படிம்மா இருக்கே?'' என்றேன்.  ''நல்லாயிருக்கேன்..'' ''பெண்ணெல்லாம் செளக்கியமா?'' ''ம்..ம்--'' ''பூனா போவதுண்டா?'' ''ம்...ம்.. சரி, நான் அப்புறம் பேசறேன்...'' என்று கூறி போனை துண்டித்துவிட்டார். எனக்கு ஏமாற்றமாக இருந்தது.  உண்மையிலேயே நான் பேச விரும்பாத ரவிதான் அவர்.  தெரியாமல் பேச்சைத் துவங்கினாலும், பின் ஏன் அவர் துண்டித்துவிட்டார்.  அவருக்கும் என்னுடன் பேசுவதில் ஒருவித சலிப்பு உண்டாயிருக்கும்.  வேடிக்கை என்னவென்றால் ஒருகாலத்தில் நானும் அவரும் நெருங்கிய நண்பர்கள்.  ஒரே வங்கியில் இருவரும

பட்டியல்

பாதையில் கிடந்த கருவேல முள்ளை ஓரத்தில் எடுத்துப் போடுகிறேன் புட்டத்தை வாலால் மறைத்தபடி ஒரு நாய் என்னைக் கடந்து செல்கிறது மாங்கிளைகளை வெட்டியாகிவிட்டது இனி எந்த மரக்கிளையில் கிளிகள் வந்தமரும் மேகங்கள் எங்கே சென்றன நடவு செய்பவர்களை வெயிலில் காயவிட்டு மாடுகள் தின்பதற்காகவாவது உதவட்டும் இந்த சுவரொட்டிகள் அக்கரைக்கு நீந்திச் செல்ல நீச்சல் மட்டும் தெரிந்திருந்தால் போதாது எப்போதாவது செல்லும் விமானத்தை வேடிக்கைப் பார்க்க சொல்லியாத் தரவேண்டும் காலம் முடிந்து குருக்கள் கிளம்பிவிட்டார் சாமி எங்கே போகும்.

பயம்

திருவிழா விடுமுறையின் கடைசி நாள் இரவில் வரும் அடுத்த நாள் பள்ளிக்கூடப்பயமும், ஞாயிறு இரவு சினிமாவின்போது வரும் அடுத்த நாள் அலுவல் பயமும் ஒன்றாகத்தான் தோணுகிறது.

மௌனங்களை இழைப் பிரித்துத் தொங்கும் நிறம்..

மிகச் சிறிய துரோகத்திலும் கூட அந்த நேர்த்தியை நுட்பமாய் செய்து பழகினான் மௌனங்களை இழை இழையாய்ப் பிரித்து அறையெங்கும் தொங்க விட்டிருந்தான் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறம் அதன் நிறங்களின் நிழல் சுவர்களில் எப்போதும் வழிந்துக்கொண்டேயிருக்கும் அதன் நீள அகலங்கள் கணக்கிடப்பட்டிருந்தன அவனுடைய தனிமையை எப்போதும் பகிர்ந்து கொண்ட மின்விசிறியில் முந்தின இரவு குளிருக்கென பயன்பட்ட போர்வையை முடிச்சிட்டுத் தூக்கில் தொங்கிய அவனது உடலுக்கும் தரைக்குமான இடைவெளியை கச்சிதமாக முடிவு செய்திருந்தான் காவல்துறை எழுதிய மரணக் குறிப்பில் அது பதிவாகவில்லை துப்புத் துலக்கித் தேடப்பட்ட ஏதோ ஒன்று அத்தனை ஒழுங்குகளையும் கலைத்துவிடும் காரணத்தையும் அவன் விட்டுச் சென்றிருந்தான் ******  

கவிதை

அடித்து, திருத்தி காதுகளைத்திருகி கொம்புகளை முறுக்கி, மடக்கி, நீட்டி, வைத்து, எடுத்து சரி செய்து கொண்டேயிருக்கிறேன். மடியிலிருக்கும் அடங்காத சிறுகுழந்தையைப் போல எப்போதும் என் கவிதைகளை

குழந்தையை விட்டு அகலாத பொம்மைகள்

பாப்புக்குட்டி -  சிரிக்குது அழுகுது கை கால்களை ஆட்டுது குப்புற விழுது சலவாய் ஒழுக்குது ங்கா ங்கூ ஆ பேசுது விரல் சப்புது வெறிக்க வெறிக்கப் பாக்குது தூங்குது சுற்றிக் கிடக்கும் பொம்மைகள் குழந்தையை விட்டு எங்கும் போவதில்லை

கனவென்று தெரிந்திருந்தால்

கிணற்று நீரில் நிலா பார்ப்போம் தண்ணீர் உனைப் பருகி தாகம் தீர்க்கும் குழலோசை செவியினில் இனிக்கும் கண்களுக்கு நீ எதிரில் வருவது மிகவும் பிடிக்கும் மரத்திலிருந்து விழுந்த பழுத்த இலையொன்று உன் மீது உரசியதால் தீப்பற்றி எரியும் வீதியில் நீ நடந்து வந்தால் வெண்மேகம் குடைபிடிக்கும் வரம் கொடுக்கிறேன் என்று கடவுள் நேற்று உன் வீட்டுக்கு வந்திருந்தாராமே கல்லூரியில் நீ வரலாறு படித்தாய் தெருவெல்லாம் நானல்லவா மரம் நட வேண்டியிருக்கிறது.

பூனைகள்.....பூனைகள்.......பூனைகள்.....பூனைகள்...31

கணேஷ் பூனைகள் ஜாக்கிரதை அடுப்பில்  பால்  கொதிக்கிறது. அது கொதிக்கும் சத்தம் கேட்காமல் தொலைக்காட்சிக்குள் என்னை அமிழ்த்திக்கொண்டிருக்கிறேன். பொங்கி அத்தனை பாலும் வழிந்துவிட்டது.  சமையலறையில் பாலாறு. தொலைக்காட்சியின் கைதியாய் தொடர்ந்து இருந்தேன். வீடு திரும்பிய மனைவி  சமையலறை பார்த்தவுடன் ஆனந்த கூக்குரலிட்டாள். துடைத்து விட்டார் போல சமையலறை. பூனையொன்று  பாலாற்றை குடித்து தரையை சுத்தம் செய்துவிட்டது. சன்னலில் மியாவ் சத்தம் கேட்ட மனைவி  பூனையின் பார்வையில் மயங்கி காதல்வயமானாள். என் திருமணத்தை காப்பாற்ற வேண்டும்.      என்னை விட்டுவிடும்படி   தொலைக்காட்சி யை  கேட்டேன் பதில் கிடைக்கவில்லை. மின்சார வெட்டு ! பூனைகள்  என் வாழ்வை சூறையாடுவதை  எங்ஙனம் தடுப்பது? மின்சார வாரியத்துக்கு    யாராவது தொலைபேசியில் அழைத்துக்கேளுங்கள் ! ஆறரை மணி செய்திகள்  முடிந்தால்தான் தொலைக்காட்சி சிறையிலிருந்து நான் விடுபடமுடியும்.

காதல் திசை

வலமிருந்து இடம் தான் தமிழும் இன்னபிற மொழிகளும் எழுத வேண்டும், செ ங் கு த் தா க த் தா ன் சைனீஸ் எழுத வேண்டும், ன்தாம்லவ துந்ருமிடஇ   அராபிக் எழுத வேண்டும் உனக்கு என் காதலைப்புரியவைக்க நான் எந்தத்திசையில் எழுத வேண்டும் ?! -

முகம்

ஊரின் முகத்தை தீர்மானிக்க அலையத் துவங்கினேன் மேற்கிலிருந்து பார்க்க கிழக்கும் கிழக்கிலிருந்து திரும்ப மேற்கும் வடக்கிருந்து வர தெற்கும் தெற்கிருந்து இறங்க வடக்குமென எதிரெதிர் துருவங்கள் முகப்பாய் மாற்றம்கொள்ள தோல்வி பனிபோர்த்த வீடடைந்தேன் நிலைக்கண்ணாடி ஒற்றைத் தன்மையோடு தொங்கவிட்டது முகத்தை...

எதிர் விளையாட்டு

இடைவேளை நேரங்களில் பள்ளியில் விளையாடும் ஒரு விளையாட்டின் பெயர் ‘ எதிர் விளையாட்டு ’ என்றான் மகன். ‘ சிரி என்றால் அழ வேண்டும் அழு   என்றால் சிரிக்க வேண்டும் உட்கார்   என்றால் எழ வேண்டும் எழுந்திரு என்றால் உட்கார வேண்டும். ’ அனேகமாய் எல்லா நேரங்களிலும் அவனே ஜெயிப்பதாய் அடிக்குறிப்பு வேறு. அட்டகாசம் என்று தட்டிக் கொடுத்தவன் அடியோடு அதை மறந்தே போனேன். அடுத்த நாள் வந்த ஸ்கூல் டைரியில் எழுதப்பட்டிருந்தது. ' பேசாதே என்றால் வகுப்பில் பேசிக் கொண்டே இருக்கிறான் ’ என்று.

பொம்மையோடு முணுமுணுக்கும் ரகசியங்கள்..

* பாப்பாவுக்கு நிலவைத் தொட்டு ஊட்டும் சோற்றில் விக்கல் உடைந்து தெறிக்கிறது நட்சத்திரங்கள் விரியும் முன் அவள் பறிக்கும் மொட்டு கைக் கூப்பி மணக்கிறது குட்டி விரல் பிரித்து நிறம் நுகரும் ஈரத்தில்  தரையில் படரும் வெயிலை நகம் சுரண்டிப் பிரிக்கிறாள் நீளும் நிழல் துரத்தி ஓடுகிறாள் தன்  பொம்மையோடு மட்டும் ரகசியங்களை முணுமுணுத்து அதன் காதுகளைத் திருகி தலைக் குனிந்து உச்சரிக்கிறாள் ******

சாலை விதி

ஏழு வயதுக் குழந்தை ஸ்கூட்டர் ஓட்டும் பாவனையில் பிர்பிர் என்று ஒலி எழுப்பிக் கொண்டே ஓடிக் கொண்டிருந்தது. வலது கையைச் சுழற்றிச் சுழற்றி வாகனத்தின் வேகத்தை வாயால் கூட்டிற்று குழந்தை. இடது கை மட்டும் காதினில் குவிந்திருக்க சாலையில் வாகனச்சப்தம் காதை அடைக்கிறதா என்றேன். உடனே குழந்தை தொல்லைக் கொடுக்காதே நான் செல்ஃபோனில் பேசிக் கொண்டேச் செல்கிறேன் என்றது.

ழ 5வது இதழ்

இப்பொழுது கற்சிலையின் பாரம் உருகிக் கரைந்ததில் புதியதொரு ஜனனம் காற்றைப்போல் மென்மை அச்சிசுவின் காலெட்டில். நேற்று விழுந்த சருகுகள் நீருக்கு நிறம் தரும். சுவை மாற அலைகளும் உறங்காது உடனே புதிய ஊற்றுக்களின் கதவைத் தட்டு. சற்றுமுன் சிறுவிரல்களில் தந்த மலர் இப்பொழுது வாடும் மாற்று புதியதொன்றை மணத்துடன் நாளைக்கென்று நீளாத தெருக்களில் நடக்கவிடு பார்வை விரிய பாதை வளரட்டும் முன்பே ஒன்றிருந்தால் - உடைத்த கைகள், உளி, கல்துகள், கண்ணீர், இடது முலையில் இதழ்கள் சக்கரம், நெரிசல், மரங்கள், கார்கள், கார்பன் மோனாக்சைட், விடியலில் பறவைகளின் குரல், எல்லாமே பளிச்சென்று ஜ்வலிக்க கண்முன் எப்பொழுதும் தா. (டிசம்பர் 1978 ஜனவரி 1979)  

நிலைப்பாடு

ழ 5வது இதழ் டிசம்பர் 1978 ஜனவரி 1979 பசிக்கொண்டு நிதம் செல்லும் பாதங்கள் தொலைவற்ற தூரம் கேட்கும் சாலை மரங்கள் சற்றே உறங்கிப் போவென்று சொல்லும் தாம் தந்த நிழலுக்காய். கால்களில் தீப்பொறி குதிரைகளின் கனைப்பு நினைவுக்குள் புகை மூட்டும் நிழல் தின்று ஆறாது பசியெனினும் ஒரு கிளைபிடித்து குடையெனப் பாவனை செய்ய தொடரும் பயணம். நினைவுக்கென வெட்டிக்கொடுத்து பின் காயங்களில் சாசுவதம் கண்டு வரும் நாட்கள் கழியும் வேர்கொள்ளாக் கால்கள்              பகற்கானலில் சாம்பலாகும்              கட்டிடங்களுக்கப்பால் நீலத்தொடுவானம் தேடிச்செல்ல              வழிமரங்கள் தாம்பெற்ற ராகங்களின் நிரந்தரமறியாது              உடல் சிலிர்த்துப் பாதையை              நிறைக்கும்              கந்தல் நிழல் கண்டு

பல்லி

பாத்ரூமில் ஒரு பல்லி எதிர்ப்பட்டது குட்டிப் பல்லி துண்டை எடுத்துக்கொண்டு போன எனக்கு அதன்மீது அருவெறுப்பு நான் அதையே பார்த்துக்கொண்டிருக்க அது இங்கும் அங்கும் தலைதெறிக்க ஓடியது வேடிக்கை என்னவென்றால் அது என்மீது விழுந்துவிடப் போகிறதென்று நடுங்கிக் கொண்டிருந்தேன் என் பயத்தின் எதிரொலியாய் அது ஓடி ஓடிப் போனது குட்டி பாத்ரூமில் அதன் எல்லை பரந்து விரிந்திருக்கிறது என் எல்லை குறுகலாகத் தெரிகிறது

உன்மத்தம்

கதவைத் திறந்தேன் முன்பனி முகத்தில் அறைந்தது உறக்கம் தழுவும் தருணம் யாருக்கு இங்கே தெரியும் கதவைத் திறந்தே வைத்திருங்கள் எந்த உருவத்திலும் இறைவன் வரலாம் சில சமயம் பார்க்க நேர்ந்துவிடுகிறது அம்மாவின் முகத்தை பொட்டில்லாமல் இன்று ஒரே நிறத்தில் உடையணிந்து வந்திருக்கிறோம் எதேச்சையாக நேர்வது தான் என்றாலும் மனதில் வண்ணத்துப்பூச்சி சிறகடிக்கிறது விழுந்த மரத்தில் இருந்தது வெறுமையான குருவிக் கூடு வழிதவறிய யானைக் கூட்டம் வாழைத் தோட்டத்தை துவம்சம் செய்தது கார்காலத்தில் மனதில் ஏனோ ஈரப்பதம் வாழ்க்கைக் குறிப்பேட்டில் உங்களுடைய வாசகத்தை நீங்கள் தான் எழுத வேண்டும்.

அழகன்

அந்தக் கனவில் அவன் அழகாகத் தெரிந்தான் கழுத்து நிறையப் பதக்கங்களுடன் வெற்றிகளைக் குவித்திருந்தான் ஒரு கனவில் அவனை இந்திரன் சந்திரன் என்றனர் மெத்தப் படித்த மேதாவி என்றனர் அவன் முகத்தின் பொலிவு கண்டு அவன் கண்களே கூசின தனி விமானத்தில் உலகம் சுற்றிய நீண்ட கனவொன்றில் அவன் கம்பீரம் கூடியிருந்தது தன் இருபத்தெட்டு மாடிவீட்டின் மேல்தளத்துத் தோட்டத்தில் காலைத் தேநீர் பருகிய கனவில் மேகங்கள் முற்றுகையிட்டுக் கொண்டாடின அவன் அந்தஸ்தை கனவுகள் தந்த சந்தோஷங்களுடனே புலர்ந்தன தினம் பொழுதுகள் இப்போதெல்லாம் அவற்றுக்காகவே சீக்கிரமாய் உறங்கச் செல்கிறான் நிஜம் தொடாத நிகழ்வுகள் ஓடிய திரை தந்தப் போதையில் பகல் கனவும் பழக்கமாயிற்று பலிக்குமெனச் சொல்லப்பட்ட பகல் கனவுகளில் மறந்தும் ஒருதுளி வியர்வை வெளியேறிடாமல் மேனி மினுமினுப்பைப் பாதுகாத்துக் கொண்டான் நிஜத்தை மட்டுமே பிரதிபலிக்கிற அறைநிலைக்கண்ணாடி தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள இயலா சகிப்புடன் காட்டிக் கொண்டிருந்தது விழிசெருக வாய் திறந்து கனவில் கிடந்தவனை அவலட்சணத்தின் மொத்த இலக்கணமாக.

எதையாவது சொல்லட்டுமா.........61

சமீபத்தில் நான் இரண்டு விழாக்களுக்குச் செல்லும்படி நேரிட்டது.  இரண்டுமே எனக்குத் தெரிந்து நெருங்கிய உறவினர் வீடுகளில் நடந்த விழா.  விழா என்பதை விட விருந்து என்று சொல்லலாமா என்பது எனக்குத் தெரியவில்லை.  இரண்டு குடும்பத்தினரும் பத்திரிகை அனுப்பி அழைத்திருந்தார்கள்.  முதல் அழைப்பு ஒரு கல்யாண அழைப்பிதழ்.  நங்கநல்லூரிலுள்ள ஒரு குளிரூட்டப்பட்ட பெரிய ஹாலில் நடைப்பெற்றது.  கல்யாண சத்திரம் அமர்களமாக இருந்தது.  நான் சீர்காழி ரிட்டர்ன் என்பதால், மாலை வேளையில் மட்டும் கலந்துகொண்டேன். அந்த இடமே அமர்களப்பட்டது.  பெண் வீட்டார் அதிகமாக செலவு செய்து ஏற்பாடு செய்திருந்தார்கள்.  லைட் மியூசிக் வேறு.  சத்தம் அலறியது.  விதவிதமா உணவு வகைகள் மாடியில் பரமாறிக்கொண்டிருந்தார்கள்.  நினைத்தபோது காப்பிகளும், குளீர் பானங்கள் வினியோகப்பட்டிருந்தன. கூட்டத்தில் யாரையும் யாரும் பார்க்கக்கூட முடியாது போலிருந்தது. அப்போதுதான் அந்த உறவினர் சில தினங்களுக்குமுன் எனக்கு போன் செய்தது ஞாபகத்திற்கு வந்தது. நான் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குமுன் என் பெண் திருமணத்தை நடத்தியிருந்தேன்.  அப்போது வந்திருந்த அதே சமையல்காரர்தான் உறவினர்

கவிதை

பெரியசாமி  இரு கோப்பைகளில் கடலை ஆற்றிக்கொண்டிருந்தவனிடம் வேறெங்கு வாழ்வதென போராடின மீன்கள் மனமுடைந்த முதலைகள் தற்கொலை பூண்டன போக்கிடமற்று அலைந்தன பிற ஜீவராசிகள் கூடை கூடையாய் எல்லோரும் புசிக்கத் துவங்கினர் மலிவு விலையில் மீன்களை

பொம்மலாட்டம்

ப.மதியழகன் சருகுகள் பாதையை மூடியிருந்தன பழுத்த இலைகள் தன்னை விடுவிக்கும் காற்றுக்காக காத்திருந்தன மொட்டைப் பனைமரத்தில் காகம் ஒன்று அமர்ந்திருந்தது வண்ணத்துப்பூச்சி வண்ணங்களை உதிர்த்துச் சென்றது வண்டுகளின வருகைக்காக பூக்கள் தவம்கிடந்தன திருட்டுக் கொடுக்க என்னிடம் காலணிகள் மட்டுமே இருந்தன அருவியில் குளிக்கிறார்கள் பணப் பித்து பிடித்தவர்கள் இல்லை என்பவர்கள் மீது ஒளிக்கிரணங்கள் படுவதில்லை உண்டு என்பவர்கள் வீட்டில் தீபங்கள் அணைவதில்லை பொம்மலாட்ட பொம்மைகள் எது செய்தாலும் தவறில்லை ஆட்டுவிப்பவன் கைகளுக்கு எது சரி எது தவறென்று தெரியவில்லை.

மகனின் தீபாவளி

    சோமா   பொட்டடுப்பில் வெந்நீர் வைத்து எழுப்பி விடும் அப்பத்தா உடல் முழுதும் எண்ணைய் தேய்க்கத் துரத்தி சோர்ந்து முதுகில் ரெண்டு வைக்கும் அம்மா இரவெல்லாம் கண்விழித்த‌ டெய்லரின் கருணையில் பட்டன் வைக்க மறந்து முதல்நாளிரவு வந்து சேரும் புதுச்சட்டை வாசம்-அதன் காலருக்கு சந்தனமிடும் அப்பா பேரம் பேசி வாங்கியிருந்த‌ நாடார்கடை பட்டாசை பிரித்துக் கொடுக்கும் பெரியப்பா அதிரசம் முறுக்குச் சுட்டு அடுக்கும் பெரியம்மா-சாமி கும்பிடும் முன்னரே இனிப்பு உப்புப் பார்க்க சாம்பிள் கொடுக்கும் சித்தி உடை மாற்றி விடும் சித்தப்பா வருடமொருமுறை வீடுவீடாய் மங்களம் கொட்டும் மேளக்காரன் புதுத்துணி கட்டிய ஜோரில் ஊரையே வளைய வரும் நண்பர் பட்டாளமென‌ ஞாபகம் விரித்தெழும் நேற்றைய என் தீபாவளி என் மகனுக்கானதில்லை. ஞாயிறுகளின் நீட்சியான தீபாவளி விடுமுறையில் அவனுக்கான பட்டாசு இன்னும் வாங்க‌ப்படவே இல்லை.

மெட்டமார்ஃபஸிஸ்

எனக்கே தெரியாமல் எனது அறைக்குள் ஒரு பச்சோந்தி நுழைந்து விட்டது, என்னிடம் அனுமதி கேட்கவுமில்லை அதை அது எதிர்பார்க்கவுமில்லை. அதை விரட்ட பெரும்பாடாயிற்று. சில நாட்கள் கழித்து பின்னர் அதைத்தொடர்ந்து ஒரு பாம்பும் நுழைந்து விட்டது, சரி பச்சோந்தியைப்பாம்பு தின்று விடும் என்று எனக்குள் மகிழ்ந்து கொண்டேன் சில நாட்களாக பச்சோந்தியைக்காணவில்லை பாம்பு மட்டும் உலாத்திக்கொண்டிருந்ததை என் கண்ணால் காண நேர்ந்தது. சரி உண்டு விட்டது என்று நினைத்து மகிழ்ந்த போது பாம்பின் நிறம் மாறிக்கொண்டே வந்து மீண்டும் பச்சோந்தியாகி விட்டது. இப்போது பச்சோந்தியிடம் பாம்பாக மாறும் வித்தையைப்பயின்று கொண்டிருக்கிறேன் என்னைத்தொந்தரவு செய்யாதீர்கள்.

அக்கறை/ரையை யாசிப்பவள்

அன்றைய வைகறையிலாவது ஏதாவதொரு அதிசயம் நிகழக்கூடுமென படிப்படியாயிறங்கி வருகிறாள் சர்வாதிகார நிலத்து ராசாவின் அப்பாவி இளவரசி அதே நிலா , அதே குளம், அதே அன்னம், அதே பூங்காவனம், அதே செயற்கை வசந்தம் அதுவாகவே அனைத்தும் எந்த வர்ணங்களும் அழகானதாயில்லை எந்த மெல்லிசையும் புதிதானதாயில்லை எந்த சுதந்திரமும் மகிழ்வூட்டக் கூடியதாயில்லை நெகிழ்ச்சி மிக்கதொரு நேசத் தீண்டலை அவள் எதிர்பார்த்திருந்தாள் அலையடிக்கும் சமுத்திரத்தில் பாதங்கள் நனைத்தபடி வழியும் இருளைக் காணும் விடுதலையை ஆவலுற்றிருந்தாள் காவல்வீரர்களின் பார்வைக்குப் புலப்படா மாய உடலையொன்றையும் வேண்டி நின்றாள் அவள் நிதமும் அப் புல்வெளியோடு வானுக்குச் சென்றிடும் மாய ஏணியொன்றும் அவளது கற்பனையிலிருந்தது இப் பொழுதுக்கு மீண்டும் இக்கரை தீண்டா ஒரு சிறு ஓடம் போதும் எல்லை கடந்துசென்று சுதந்திரமாய்ப் பறக்கும் பட்சிகள் பார்க்கவென அச் சமுத்திரத்தின் அக்கரையில் அவளுக்கொரு குடில் போதும்

பறவைகளின் திசை

அன்று அந்திக்கருக்கலில் கூட்டமாக வெண் பறவைகள் திரும்பத்திரும்ப முன்னும் பின்னுமாகப்பறந்து கொண்டிருந்தன அந்தக்காரிருளில் அவை திட்டுத்திட்டாக தெளிவாகத்தெரிந்தன நானும் பல தடவைகள் இருட்டிவிட்டால் அடுத்த தெருக்களில் சுற்றிக்கொண்டு எங்கள் வீட்டைத்தேடிக்கொண்டிருப்பேன் அதுபோலவே அவைகளும் தமது கூட்டின் திசையைத்தவறவிட்டதுபோல் எனக்குத்தோணியது எனக்கொன்றும் புரியவில்லை எப்போதும் அம்மா சொல்வாள் அவை என்றும் திசை அறியக்கூடியவை ஆதலால் ஒருபோதும் அவற்றின் திசை தப்புவதில்லை என்று மேலும் அவை நாடு கடந்தும் பறக்கக்கூடியவை என்றும் கடல் கடந்தும் பறக்கக்கூடியவை என்றும் அம்மா சொல்லக்கேட்டிருக்கிறேன் அன்று நள்ளிரவு கடந்தும் நானும் அம்மாவும் வீட்டு வாயிற்படியிலேயே அமர்ந்திருந்தோம் நான் கரு நிற வானத்தையும் அந்தப்பறவைகளையுமே பார்த்துக்கொண்டிருந்தேன் அம்மாவோ வைத்த கண்வாங்காமல் தெருக்கோடியையும் அதன் முனையையுமே பார்த்துக்கொண்டிருந்தாள். -

தருணம்

சில சம்பவங்கள் நாம் விரும்பியோ விரும்பாமலோ நடக்காமலில்லை யார் தீர்மானிக்கிறார்கள் என்பது ஏனோ தெரிவதில்லை அல்லது நாமே அந்தச் சூழ்ச்சியில் அறியாமல் மாட்டிக்கொண்டு விடுகிறோமா என்றெல்லாம் தெரிவதில்லை எல்லாம் நடப்பது நடக்கட்டுமென்றுதான் விடவேண்டியுள்ளது நமக்கு விருப்பமான பொருள் நம்மை அடைவதில்லை நாம் தேர்ந்தெடுக்கும் பொருள் நம் கைவசமாவதில்லை நம் காலத்தை நாம் திருப்தியுடன் கழிக்க வேண்டியதுதான். இதுதான் வாழ்க்கை என்று பெரிதாக யோசனை செய்யாமலிருக்க வேண்டியதுதான்.

வரையறை

மழை விடாமல் பெய்தது பகல் இருள் கவிந்திருந்தது அலுவலகத்திற்கு தாமதமாய் போனால் நந்தனைப் போல் வெளியே நிற்கவைத்து விடுவார்கள் சூரல் நாற்காலியில் அவர் அமர்ந்திருந்தார் நெல் மணிகளைக் கொறிக்கும் மைனாக்களைப் பார்த்தபடி புத்தி பேதலித்தவர்கள் எல்லாம் ஏன் ஒரே இடத்தை வெறித்துப் பார்க்கிறார்கள் மனிதர்களோடு அளவளாவ விரும்பாதவரைப் போல் முகத்தை வைத்துக் கொண்டிருந்தார் துஷ்டி கேட்க இப்போதெல்லாம் அவர் எவருடைய வீட்டிற்கும் செல்வதில்லை இப்போது எங்கோ கிளம்பிக் கொண்டிருக்கிறார் துக்கம் நிகழாத வீட்டிலிருந்து ஒரு பிடி மண்ணை அள்ளி வர கிளம்புகிறாரோ என்னவோ.

மரம் பெய்யும் மழை

மழை பெய்யத் தொடங்கியதும் மரம் பெய்யவில்லை மழையை ... மழை நின்று வெகு நேரமாகியும் மரம் பெய்து கொண்டே இருக்கிறது மழையை பெரிய பெரியத் துளிகளுடன் . பூப்பெய்த மரங்க ள் பூ பெய்கின்றன மழையோடு . பூப்பெய்தாத மரங்கள் இலைகளைப் போட்டு விளையாடுகின்றன போகும் நீரில்

*27 ம் 67 ம்

27  வயது இளைஞனும் 67  வயது முதியவரும் இணைந்து நடை பயிற்சி செய்கின்றனர் நடைவேகம் கூடக்கூட 27  க்கு மூச்சிறைக்கிறது 67  ன்வேகம், 27 -ஐவிடக் கூடுகிறது 27  , 67-ஐ விஞ்ச முயன்று தளர்கிறது 27  , 67- ஆகவும் 67  , 27- ஆகவும் வீடு திரும்புகிறது

முடிவற்று நீளும் பயணத்தின் வெற்றுக் கால்கள்

  அந்தத் தெரு வழியே நடக்கும் நிழல்களில் ஒன்று வயதானது மற்றொன்று இளவயது தொலைந்து போன தருணங்களின் ரகசியங்களை அளவில் அடங்காத மலர்தலை சொல்ல விரும்பும் தயக்கத்தை கதவடைத்துக் கொள்ளும் மௌனங்களை கருணையின் மீது பிரயோகிக்கப்படும் சாபங்களை யாவற்றையும் உருக்கி ஊற்றும் வெயில் பிளாட்பாரம் ஏறி நிதானிக்கும் வெற்றுக் கால்களை குறுகுறுக்கச் செய்து சூடேற்றுகிறது மேலும் நடக்கத் தூண்டி முடிவற்று நீளும் பயணத்தை நோக்கி எல்லாத் தெரு வழியேயும் நடக்க நேரும் நிழல்கள் இரண்டுக்கு மேற்பட்டவை ஆனால் ஒன்று வயதானது மற்றொன்று இளவயது ******