Skip to main content

கல்லும் கடவுளும்..



வித்யாசாகர்


மூடிய கண்களின் ஆழத்தில்
 பளிச்செனத் தெரிகிறதந்த
 வெளிச்சம்;
வெளிச்சத்தை
 உதறிப் போட்டு எழுந்தேன்
 கடவுள் கீழே கிடந்தார்!!
பாவம் கடவுளென தூக்க
 நினைத்தேன் -
 விழுந்தவர்கள் பலர் நினைவில் வர
 விழுந்துக் கிடவென்று விட்டுவிட்டேன்
உன் கோபம் நியாயம் தான்
 உன்னை இப்படி படைத்தது
 என் குற்றம் தானே என்றார் கடவுள்
உளறாதே நிறுத்து
 உன்னை
 இல்லையென்று எண்ணிதான் வணங்கினேன்
 இருக்கிறாய் என்று தெரிந்திருந்தால் என்
 உறவுகளைப் புதைத்த குழியில் உன்னையும் புதைத்திருப்பேனென்றேன்
கடவுள் வருத்தப் பட்டார்
 அந்த குழிகளிலிருந்து நிறைய பேர் பிறப்பர்
 உறுதி என்றார்
அப்படியா
 பெரிய ஞானவாக்கு தருவதாக நினைப்பா
 எழுந்து போ' அதலாம் எங்களுக்குத் தெரியுமென்றேன்
உண்மையாகவே எழுந்துப் போய்விடவா
 பிறகு வருத்தப்பட மாட்டாயே என்றார்
நிறைய பட்டுவிட்டோம்
 அதில்
 இதுவும் ஒன்றாக இருக்கும் போ என்றேன்
உடம்பு சற்று குலுங்கி
 கீழே சரிந்துப் போனேன்
ஐயோ என்னாச்சு என்று என்
 மனைவி வந்து தூக்கி அமர்த்துகிறார்
 கத்தி பதறி எல்லோரையும் அழைக்கிறாள்
 குடும்பமே சூழ்ந்து நின்று
 கத்தி அலறியது கீழே சரிந்த எனைப் பார்த்து
நன்றாகத் தான் இருந்தார் என்கிறார்கள்
 தியானம் செய்து கொண்டிருந்தேன்
 அப்படியே சரிந்துவிட்டேன் என்கிறார்கள்
 கைகால் ஆட்டிப் பார்த்து கண்ணிமை நீக்கிப் பார்த்து
 இறந்துவிட்டேன் என்கிறார்கள்
 என் பிள்ளைகள் கத்தி கதறி
 அப்பா அப்பா எங்களைப் பாருப்பா என்று
 அழுகிறது -
 நான் கடவுளே என்னைக் காப்பாத்திவிடேன் என்றேன்
கடவுள் தெரிந்தார் எதிரே
 சட்டென -
 உடல் துடித்து அசைந்து
 கண்களைத் திறக்க' அப்பா அப்பா உங்களைப் பார்க்க
 யாரோ வந்திருக்காங்க என்றான் என் மகன்
 மனைவி ஆமாங்க எப்போதோ வந்தார் பாவம்
 அதோ வாசல் ல அமரவைத்திருக்கேன் பாருங்க' என்றாள்
சுற்றி சுற்றி பார்த்தேன் நான்
 யாரும் என்னைச் சுற்றி அழவோ
 கத்தவோ கதறவோ யில்லை
 அத்தனைக் கூட்டமும் வீட்டிலில்லை
எழுந்து சென்று
 வாசலில் எதிரேப் பார்த்து அமர்ந்திருந்தவரை வணங்கி
 ஐயா வாங்க
 வணக்கம் என்றேன்
 அவர் வணக்கம் சொல்லிவிட்டு
 தன்னை ஒரு கடவுள் மறுப்புக் கொள்கை உள்ளவராக
 அறிமுகப் படுத்திக் கொண்டார்
இன்று மாலை இந்த ஊரில் ஒரு கூட்டம் வைத்துள்ளோம்
 தாங்களும் கலந்துக் கொள்ளவேண்டும்
 கடவுள் பற்றி பேசவேண்டும் என்றார்
நான் புன்னகைத்து விடை தந்தேன்
 கடவுளைப் பற்றிப் பேச வேகமாக
 மாலைக்கு முன்நேரமே புறப்பட்டுப் போனேன்
 அங்கே எனைத்தாக்கும் எதிர்வினைகள்
 நிறைய இருந்தன
எல்லோரும் கடவுள் பற்றி நிறைய இழிவாகப் பேசினர்
 கடவுள் ஒரு மூலையில் நின்றுக்கொண்டு
 நீ போய் பேசு என்றார்
 நான் மேடையேறி கடவுள்களுக்கு வணக்கம் என்றேன்
எல்லோரும் கைதட்டினார்கள்
எல்லாம் குற்றம் குறைகளுக்கும்
 காரணம் நாம் தான் பிறகு எதற்கு
 கடவுளையே குறை சொல்லிக் காலத்தைப் போக்குவானேன்
 மனிதரைப் பற்றி பேசுவோம்
 மனிதர் புரிந்தால் கடவுளும் புரியுமென்றேன்
இல்லாத கடவுள் ஏன் புரியவேண்டும்?
 மேலும் கடவுளை உண்டென்று பேசினால் முட்டைப் பறக்குமென்றார்
 கூட்டத்தில் ஒருவர் எழுந்து
நான் திரும்பி கடவுளைப் பார்க்க
 கடவுள் எனைப் பார்த்து பேசு பேசு தயங்காதே என்றார்
எத்தனை முட்டை அடிப்பீர்கள்?
 இன்னும் எத்தனை கொலை விழும்?
 எவ்வளவு நாளிற்கு இன்னுமிந்த இருக்கு இல்லை போராட்டம்,
 இதற்கு முற்றுப் புள்ளியே கிடையாதா?
ஏனில்லை கோவிலையும் சிலைகளையும் உடைத்துப் போடுங்கள்
 போராட்டம் முற்றுபெரும்,
தங்கத்தையும் வைரத்தையும் எடுத்து
 தாலி செய்யுங்கள்
 முதிர்கன்னிகள் எண்ணிக்கை குறையும்,
கோவிலிடத்தில் வீடும் பள்ளிக்கூடமும் கட்டுங்கள்
 ஏழையின் கண்ணீர் காயும்,
இறைஞ்சி நின்ற நேரத்தில்
 இன்னும் நல்லது கெட்டதைப் படியுங்கள் அறிவு வளரும்,
அதைவிட்டுவிட்டு மனிதராய் பிறந்து கடவுளில் தொலைவதா? மிக
 நன்றாக கேட்டார் என்னை அழைக்க வீடுவந்த
 அந்த பெரியவர்
என் கவலை கடவுள் பெயரில்
 மனிதரைக் கொள்வதில் மட்டுமே இருந்தது
சரி கடவுள் போகட்டும்
கடவுள் இல்லை என்போர் கையை உயர்த்துங்கள் என்றேன்
 அந்த அக்கூட்டத்தில் பாதிக்கும் மேல்
 கையுயர்த்தினர்;
சரி இப்போ கடவுள் இருக்கு என்பவர்கள்
 கை தூக்குங்கள் என்றேன்
அந்த கூட்டம் கடந்து
 அந்த ஊரில் இருந்த அத்தனைப் பெரும் கை தூக்கினர்
பார்த்தீர்களா?
 நீங்கள் உடைப்பது வெறும் கோவில் அல்ல
 இத்தனைப் பேரின் மனசு
 நீங்கள் எதிர்ப்பது வெறும் கடவுளின் சிலைகளையல்ல
 இவர்களின் நம்பிக்கையை'
கடவுள் தூர நின்று வெகு ஜோராக கைதட்டினார்
எல்லோரும் திரும்பி
 சப்தம் வரும் திசை நோக்கிப் பார்க்க
 கடவுள் நின்றிருந்த இடம் அவர்களுக்கு வெற்றிடமாகவே தெரிந்தது
நானாகப் பேசத் துவங்கினேன்
 கடவுள் நமக்கு ஒரு பொருட்டல்ல
 நன்மை தீமைகளை ஆராய்வோம்
 அதை யார் மனதும் நோகாமல் எடுத்துச் சொல்வோம்
 இருக்கு என்பவர்களுக்கு தெரியும் கடவுள் தெரிந்துப் போகட்டுமே
இல்லை என்போருக்கு தெரியாத கடவுள்
 எங்கேனும் மறைந்து நின்றுக் கொள்ளட்டுமே என்றேன்
கடவுள் மீண்டும் கைதட்டினார்
நான் கடவுளிருக்கும் திசை நோக்கி
 வணங்கிக் கொண்டேன்
என்ன என்ன நடக்கிறது ஏய் வீசுடா முட்டையை
 என்றொரு கும்பல் எழுந்திருக்க
நான் உங்களைத் தான் வணங்கினேன்
 என்றேன்
எங்களையா?
ஆம் உங்களுக்குள் இருக்கும் கடவுளை என்றேன்
இல்லை இவன் ஏதோ குழப்புறான்
 நீ கீழிறங்கு
 பேசினது போதும் போ' என்றார்கள்
ஆம் இறங்கத் தான் போகிறேன்
 இறங்கும் முன் ஒன்றைக் கேளுங்கள்; உங்கள் கோபம் கடவுளின்
 மீது வேண்டாம்,
 கடவுள் உண்டென்று நம்பியே வளர்ந்துவிட்ட
 மனிதர்களின் மனதை நசுக்குவதில் வேண்டாம்,
 அவர்களின் நம்பிக்கையை விட்டுவிட்டு குறைகளை
 இதுவன்று மட்டும்
 அக்கறை உண்டெனில் எடுத்துக் காட்டுங்கள்,
 மூடபழக்கவழக்கத்தின் கொடூர தீவினையை
 முன்வைத்து
 மறுக்கக் கோருங்கள்' நான் பேசிக்கொண்டிருக்கும் போதே
 ஒருத்தர் எழுந்தார்
வேறென்ன செய்கிறோம் நாங்கள் ?
 இல்லாத கடவுளை உண்டென்று நம்புவது
 மூடத்தனம் இல்லையா?
 அதைத் தானே வேண்டாம் என்கிறோம்?
மிகக் கோபமாக
 கேள்வி எழுப்பினார் அவர்
பொறுங்கள் பொறுங்கள்
 கடவுளே இல்லை என்று எண்ணிக் கொண்ட
 உங்கள் மனசு
 இருக்கு என்று நம்பி வாழ்வோருக்கு வேண்டாமா?
முதலில் கடவுளை நம்புவோர்
 மூடர் என்பதை விடுங்கள்
 முட்டாளை கூட முட்டாள் என்றால் வலிக்கும்
 அது முதலில் அவரவர் உணர்வென்று உணருங்கள்
 இதிலென்ன பெரிய உலக சீர்திருத்தம் வேண்டும்?
சீர்திருத்தம் செய்யத் தக்க இடங்கள் நிறைய உண்டு
 அதை செய்வோம்,
 நமது கோபத்தை
 அப்பாவி மக்களின் நம்பிக்கையின் மீது செலுத்தி
 மனவருத்தத்தை உண்டாக்குவதை விட
 கடவுள் உண்டென்றும் இல்லை என்றும் செய்யும்
 அரசியலின்மீது தொடுப்போம்,
 மூடதனத்தின் மூலதனமே சுயநலம் தான் இல்லையா?
 அந்த சுயநலம் அறுங்கள்
சரி தவறு புரிந்து நன்மைக்கு தோள் கொடுங்கள்
 கடவுள் எங்கேனும் இருந்துவிட்டுப் போகட்டும்..
 நாம் மனிதராக மட்டும் வாழ முயற்சிப்போம் என்று சொல்லிவிட்டு
இறங்கி கீழே நடந்தேன்
 கடவுள் என் பின்னாலேயே வந்தார்
 நான் அவரைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை
நில் எங்கேப் போகிறாய்
 நானும் வரேன் நில் என்றார்
நான் இல்லையில்லை
 எனக்கு வேறு வேலையுண்டு நான் போகிறேனென்றேன்
 எங்கேப் போகிறாய் இத்தனை அவசரமாக
 சற்று நில் என்றார் கடவுள்
வேறெங்கு போவது, இது என் தியானிக்கும் நேரம்
 என் மனைவிவேறு இன்றைக்கு முழுக்க விரதம்
 எனக்கு ஏக வேலை உண்டு
 உன்னைமாதிரியா நீ தான் வெறுமனே
 கண்மூடிக் கிடக்கிறாய் நானில்லை என்று சொல்லிவிட்டு
 அங்கிருந்து வேகமாக நடந்தேன்
கடவுள் சிரித்துக் கொண்டே அங்கேயே
 நின்றுக் கொண்டார்..
கடவுள் கூப்பிடுந் தூரத்தில் இருந்தும்
 என் பயணம் அவரைவிட்டு விலகி
 கல்லுக்கு பூஜை செய்வதிலேயே இருந்தது..
 

Comments