Skip to main content
எதையாவது சொல்லட்டுமா....78
 
அழகியசிங்கர்
 

 செப்டம்பர் மாதம் ஐந்தாம்தேதி என் மாமியார் சுப்புலட்சுமி அம்மாள் இறந்துவிட்டார்.  அவருக்கு வயது 89.  உலகில் எல்லா மூலைகளிலும் இப்படி எத்தனையோ சுப்புலட்சுமிகள் இறந்து போய்க்கொண்டே இருப்பார்கள். ஆனால் முதியவர்களை நாம் எப்படி நடத்துகிறோம் என்பது முக்கியமான விஷயமாக எனக்குப் படுகிறது.  ஒருமுறை ஜீ எஸ்டி ரோடில் உள்ள சாலை ஓரத்தில்  ஒரு முதியவர் யார் கவனிப்பின்றி கிடக்க, போலீஸôர் அவரை விஜாரித்தபோது யார் அவரை அப்படி தள்ளிவிட்டுப் போனார்கள் என்பதை அவர் சொல்ல மறுத்துவிட்டார்.

 என் வீட்டில் கீழே இருந்த ஒருவர், அவர் அம்மாவைப் பார்த்துக்கொள்ள முடியாது என்ற நிலைக்கு வந்து அவரும் அவர் மனைவியும் சேர்ந்து தாம்பரத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் கொண்டு போய் விட்டுவிட்டார்கள்.  அங்குபோய் சேர்ந்த சில வாரங்களுக்குள் அவர் தாயார் இறந்து விட்டார்.  அம்மாவைப் பார்த்துக்கொள்ள முடியாத  கொடுமையாக இது என் மனதில் பட்டது.  அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தால், இன்னும் கொஞ்சநாட்கள் அவர் உயிரோடு இருந்திருக்கலாம்.  ஏன் நமக்கு இந்தப் பொறுமை ஏற்படுவதில்லை? நம்மை வளர்த்த அம்மாவைக்கூட நம்மால் ஏன் பார்த்துக்கொள்ள முடியவில்லை?

 எங்கள் வீடு இருக்கும் தெரு முனையில் ஒரு முதிய ஆசிரியை தனியாக வசித்து வந்தார்.   அவர் ஏன் தனியாக இருந்தார் அவ்வளவு பெரிய வீட்டில் என்ற கேள்விக்கு எனக்குப் பதில் தெரியவில்லை.  ஆனால் ஒரு தீபாவளியின்போது  அவர் வீட்டிற்கு திருட வந்தவன்.  அசிரியையின் நகைகளைப் பறிக்க முயற்சித்தான்.  அவன் எடுத்துக்கொண்டு போகட்டும் என்று விட்டுவிடாமல்  போராடியதால், இரக்கமே இல்லாமல் அந்த முதியப் பெண்மணியைக் கொன்றுவிட்டு நகைகளைத் திருடிக்கொண்டு சென்றுவிட்டான்.  அந்த தீபாவளியை என்னால் மறக்கவே முடியாது. 
   
 நினைவுத் தப்பிப்போய் மரணப்படுக்கையில் பிரமிள் இருந்தார்.  அவரும் ஒரு தனிமைவாசி.  அவரை வேலூர் அருகிலுள்ள கரடிக்குடி என்ற கிராமத்திலுள்ள சிறிய அரசாங்க மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்படி நேரிட்டது.  அந்த மருத்துவமனையைப் பார்த்துக்கொள்பவர் பிரமிளின் விசிறி. பிரமிள் நினைவுத் தப்பிப்பேய் கிடக்கிறார்.  அப்படியே சில தினங்களில் மரணம் அடைந்து விடுகிறார்.  அவரைப் பார்த்த செவிலிப்பெண்களுக்கு அந்த மருத்துவமனையில் அவருடைய மரணம்தான் முதல் மரணம்.  நினைவுத் தப்பிப்போன பிரமிளுடன் அவர்கள் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை.  புதிதாக அப்போதுதான் மருத்துவமனையில் சேர்ந்திருந்த  செவிலிப் பெண்கள் பிரமிளின் மரணத்தை முதன்முறையாக சந்திக்கிறார்கள்.  அதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  அவர்கள் வாய்விட்டு அழுததை இன்னும்கூட என்னால் மறக்க முடியாது.

 2050-ல் உலகில் 60 வயது கடந்த முதியவர்கள் அதிக அளவில் இருப்பார்கள் என்று ஐ.நா அறிக்கையில் ஒரு தகவல் வெளியிட்டிருக்கிறார்கள்.  ஆனால் 60 வயதில் எத்தனைபேர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள்.  பலர் வியாதிகளுடன் போராடிக் கொண்டிருப்பார்கள்.  உலகில் சர்க்கரை நோயுடனும், ரத்த அழுத்த நோயுடனும் மாத்திரைகளை விழுங்கிக்கொண்டு பலர் இருப்பார்கள்.  இறக்கவும் முடியாமல், இருக்கவும் முடியாமல். 
 எனக்கு நகுலன் கவிதைதான் ஞாபகம் வருகிறது.  =இருப்பதற்காக வருகிறோம..இல்லாமல் போய் விடுகிறோம்.+ படிப்பவர்கள் மனதை கிலிகொள்ள வைக்கும் கவிதை.

 சில ஆண்டுகளுக்கு முன் மறைந்த எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் தேவதச்சன் என்ற கவிஞரின் கவிதையை என்னிடம் படிக்கக் கொடுத்தார்.  அந்தக் கவிதையின் முதல் வரி, =உயிர் பிரிவதற்கு ஒரு நிமிடம்தான் இருக்கிறது+ என்று இருக்கும். இந்தக் கவிதையைப் படிக்கும்போது என்ன இப்படி எழுதியிருக்கிறாரே என்று தோன்றியது.  ஏன்எனில் படிப்பவரை தேவையில்லாமல் சலனப்படுத்தும் கவிதை இது.  இப்படி சலனப்படுத்துவது அவசியமா என்ற கேள்வி என் மனதில் எழும். நம் வாழ்க்கையில் எத்தனையோ அதிர்ச்சிகளை தினம் தினம் செய்தித்தாள்கள் மூலம் அறியாமல் இல்லை.  ஆனால் அந்த அதிர்ச்சியை உணர்ந்த நாம் அந்த நிமிடமே மறந்தும்விடுவோம்.       திருவல்லிக்கேணியில் ஒரு கட்டடம் இடிந்து தரை மட்டமானது என்பது முதல் நாள் அதிர்ச்சி தகவல்.  அடுத்தநாள் அது சாதாரண நிகழ்வாக மாறி அந்த இடத்தைப் போய்ப் பார்க்கிறோம். அதிர்ச்சி நிகழ்வு வேடிக்கைப் பார்க்கும் நிகழ்வாக மாறி விடுகிறது.  ஆனால் தேவதச்சனின் கவிதையைத் திரும்பவும் படித்தால் அந்த அதிர்வை சலனத்தை எப்போதும் அது உண்டாக்கும். படிப்பவருக்கு இது தேவையா என்றும் நினைக்கலாம.

 நான் சீர்காழியில் இருக்கும்போது, =என்ன மூதியோர் இல்லம் நடத்துகிறாயா?+ என்று என் மனைவியைக் கிண்டல் செய்வது வழக்கம்.   89 வயதான என் மாமியார், 90 வயதான என் அப்பா, 75 வயது நிரம்பிய என் வீட்டில் பணிபுரிபவர் என்று வயதானவர்களின் ஆதிக்கம் என் வீட்டில் இருந்தது.  மனைவியால் தனியாக சமாளிக்க முடியாது என்பதால் நான் இங்கு வர நேர்ந்ததா என்றெல்லாம் யோசிப்பேன்.  என் மாமியார் 20 ஆண்டுகளுக்கு மேலாக எங்களுடன் வாழ்ந்தவர்.  குடும்பத்துடன் நாங்கள் வெளியூருக்குப் பயணம் செய்தால் எங்களுடன் தெம்பாக வருபவர்.  மே மாதத்தில் என் புதல்வனின் திருமணத்தில் உற்சாகமாகக் கலந்துகொண்டவர். 

 கார்லஸ் காஸ்டினேடா ஒரு புத்தகத்தில், மரணம்தான் ஒரு மனிதனின் எதிரி என்று எழுதியிருக்கிறார்.  வேறு யாரும் எதிரி இல்லையாம்.  அவருடைய புத்தகங்கள் எல்லாம் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கில் விற்றன.  இன்னும் விற்றுக் கொண்டிருக்கின்றன. அப்படியெல்லாம் எழுதி புகழ்பெற்ற காஸ்டினேடா இறந்த விஷயம் ஒரு மாதம் கழித்துத்தான் டைம் பத்திரிகையில் வெளிவந்தது.  அவர் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் இடையே அவர் சம்பாதித்த சொத்தின்மீது கோர்ட்டில் உரிமைக் கொண்டாடி சண்டை.

AT THE HOUR OF DEATH  என்ற புத்தகம் படித்தேன்.  அந்தப் புத்தகத்தில் மரணம் அடையும் தறுவாயில் அவர்கள்  கண் முன்னால் அவருக்கு முன்னால் இறந்தவர்கள் கண்ணில் படுவார்களாம்.  சிலருக்கு யேசு தென் படுவார் அல்லது முருகன் தென் படுவார்.  என் பாட்டி இறந்துபோகும் தருணத்தில் எப்போதோ இறந்துபோன அவருடைய கணவர் வந்ததாக சொல்லியிருக்கிறார். அதைக் கூறியபோது அவர் முகம் மிகவும் பிரகாசமாக இருந்தது. நல்ல நினைவு இருக்கும்போது, =போனால் தேவலை..+ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.  ஆனால் இதுமாதிரி ஏற்படுவதற்குக் காரணம்.  உடம்பில் சோடியம் பொட்டாசியம் குறைந்து போவதால் உண்டாகிறது என்று மருத்துவ உண்மை குறிப்பிடுகிறது. என் மாமியார் மரணம் அடையும் தருணத்தில்தான் இதை உணர்ந்தேன்.  நடக்க முடியாத வலியுடன் என் மாமியார் சில தினங்கள் நாற்காலியைத் தள்ளி தள்ளி நடந்து தன் தேவைகளை  ஜாக்கிரதையாகப் பூர்த்தி செய்துகொண்டார்.  ஆனால் ஒரு தருணத்தில் ஒன்றும் செய்ய முடியாமல் மிகக் குறைந்த உயரத்தில் இருந்த திவானிலிருந்து கீழே விழுந்துவிட்டார்.  அடிப்பட்டு ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.  அவருக்கு வலியும் தெரியவில்லை. கத்தவும் இல்லை.

 மகேஷ்பட் என்கிற ஹிந்திப் படத் தயாரிப்பாளர்- டைரக்டர்,  யூ ஜி கிருஷ்ணமூர்த்தியிடம் அளவுகடந்த மதிப்பும்  மரியாதையும் கொண்டவர்.  யூ.ஜியைச் சுற்றி சுற்றி வருபவர்.   A TASTE OF LIFE என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.  அப்புத்தகம் யூ ஜி கிருஷ்ணமூர்த்தியின் கடைசி தினங்களை விவரிக்கிறது.  ஓரிடத்தில் யூ ஜி கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார்.  'நான் இறந்தபிறகு என் உடலை என்ன செய்யப்போகிறீர்கள்.  அதைக் குப்பைத்தொட்டியில் போட்டுவிடுங்கள்' என்று. 

 டிசம்பர் 1ஆம் தேதி எனக்கு 60 வயது ஆரம்பமாகிறது.

(அம்ருதா நவம்பர் 2012 இதழில் வெளிவந்த கட்டுரை)
 

Comments