Skip to main content

Posts

Showing posts from April, 2014

புள்ளி (ஒரு சின்ன கவிதைத் தொகுப்பு) - 5

            இயற்கை         நோடீசு ஒட்டக்கூடாதென்று         எழுதியிருந்த         காம்பௌண்டு  சுவரில்         வேப்ப மரக்கிளை நிழல்         நோடீசாகப் படிந்திருந்தது                                                                                    - நா ஜெயராமன்

இன்று உலகப் புத்தக தினம்

                     அழகியசிங்கர்               எல்லாக் குப்பைகளையும் தூக்கி     தெருவிலுள்ள குப்பைத் தொட்டியில் போட்டாள்     என் புத்தகக் குவியலைப் பார்த்து     மலைத்து நின்றாள்     என்ன செய்வதென்று அறியாமல்     பின் ஆத்திரத்துடன்     தெருவில் வீசியெறிந்தாள்     போவோர் வருவோர் காலிடற     புத்தகங்கள் சிதறிக் கிடந்தன தெருவெல்லாம்     ஒரு புத்தகம் திறந்தபடியே இருந்தது     அதிலுள்ள வரிகள் எல்லார் கண்களிலும் பட     படித்தவர்கள் சிரித்தபடியே சென்றனர்     எல்லார் முகங்களிலும் புன்னகை     நானும் ஆவலுடன்     மாடிப்படிக்கட்டிலிலிருந்து     தடதடவென்று இறங்கி     புத்தகத்தின் வரியை     இடுப்பில் ஒழுங்காய் நிலைகொள்ளாத     வேஷ்டியைப் பிடித்தபடி படித்தேன்     'இன்று உலகப் புத்தக தினம்     இன்றாவது புத்தகம் படிக்க     அவகாசம் தேடுங்கள்'     நானும் சிரித்தபடியே     புத்தகத்தில் விட்டுச் சென்ற     வரிகளை நினைத்துக்கொண்டேன்     இடுப்பை விட்டு நழுவத் தயாராய் இருக்கும்     வேஷ்டியைப் பிடித்தபடி....                                                                                          (14.06.

புள்ளி (ஒரு சின்ன கவிதைத் தொகுப்பு) - 4

        பாதைப் பசுக்கள்     பால் வற்றிய பசுக்களும்     மலட்டுப் பசுக்களும்     கவனிப்பாரற்ற கறவைகளும்     தசைகள் அசைத்து     மெல்ல சாலைகளின் ஊடே     நடப்பதனால்     வண்டிக் காளையின்     கவனம் கெட்டுக்     குழப்பமும் விபத்தும்     நிகழ்வது தவிர்க்க     உரிமையாளர்க் கொரு     பணிவான வேண்டுகோள்     அவரவர் பசுக்களை     ஒழுங்கில் வைக்கவும்     அநாதைப் பசுக்களை     அரசுக் காக்கும்                 ஆர். வி சுப்பிரமணியன்

புள்ளி (ஒரு சின்ன கவிதைத் தொகுப்பு) - 3

                   பூக்கள்                                                                                  1. வெட்கமின்றி சிரித்தது        கொட்டும் மழையில்        குளிக்கும் ரோஜாப்பூ     2. சூரியன் மறைவில்        கூம்பிய மலர்கள்        மூடிப்பிடித்தவை அப்        பாவி வண்டுகள்     3. பனிபூக்க முகம் பூக்கும்        நான் வளர்க்கும்        ரோஜாப்பூ     4. மனிதரோடு மாடுகள்       போகும் ஊரோர       தார்சாலை மரங்கள்       இறைத்திருக்கும்       மலர்கள்     5. இரவில் ஊரார் கால்         கழுவ        போகுமிடம் பெருமாள்                 குளம்        புண்ணாய் நீரெல்லாம்         ஊதாப்பூ.     6. வேலைக்குப் போகும்          மகளிராய்        பஸ் ஸ்டாண்டில்              கூடைப்பூ     7.அருகழைத்து பின்       விரதமென்று புறந்       தள்ளும் பவழ மல்லி                                            பதி

சில குறிப்புகள்

      அழகியசிங்கர்                           என் நண்பர் ஒருவர், 'யாருக்கு உங்கள் ஓட்டு?' என்று கேட்டார். அப்போதுதான் ஞாபகம் வந்தது.  ஓட்டுப் போய் போட வேண்டும் என்பது.  நான் யாருக்கு ஓட்டுப் போடுவேன் என்பதையே நிச்சயமாக சொல்ல முடியவில்லை.  அந்த அளவிற்கு இந்த அரசியல் போரடித்து விட்டது.  இவ்வளவு பெரிய நாட்டை ஏதோ ஒரு கட்சி ஆளப் போகிறது.  அது எளிதான விஷயம் அல்ல.  ஒவ்வொரு ஐந்தாண்டுகளும் மக்களும் மாற்றி மாற்றித்தான் ஆட்சியைக் கொண்டு வருகிறார்கள்.  ஆனால் இந்த நாட்டின் பிரச்சினை அவ்வளவு எளிதில் தீர்ந்து விடாது.      ஜோ டி குரூஸ் என்ற எழுத்தாளர் மோடிக்குத்தான் என் ஆதரவு என்று கூறியது.  பெரிய பிரச்சினையாகி அவருடைய நாவல் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளிவர வேண்டியது நின்று விட்டது. தனிப்பட்ட முறையில் ஒருவர் ஒருவரின் கருத்தை வெளியிடுவது கூட தவறாகப் படுகிறது.  உண்மையில் ஜோ டி குரூஸ் என்ற எழுத்தாளர் சொல்வதால்தான் அப்படி ஆகிவிட்டது.  அதையே வேறு எதாவது எழுத்தாளர் சொன்னால் அது ஒரு விஷயமாகவே மாறிவிடாது.      நல்லகாலம் சாகித்திய அக்காதெமி பரிசு வாங்கும் சமயத்தில் ஜோ டி குரூஸ் இந்தக்

புள்ளி (ஒரு சின்ன கவிதைத் தொகுப்பு)

                    பேப்பர்     இது என் பேப்பர்     ரெயிலில் செல்கையில்     அடுத்தவர் தோள்மேல்     அரை மேய்ந்ததில்லை     விரைந்து விழுங்கும்     இரவல் ஷீட் அல்ல     கைக்குள் வைத்து     மடித்துப் படிப்பேன்     மேஜைமேல் போட்டு     விரித்துப் படிப்பேன்     பகலிலும் படிப்பேன்     இரவிலும் படிப்பேன்     படிக்காமல் கூட     தூக்கி எறிவேன்     இது என் பேப்பர்                                                                             நீலமணி

காக்கை கூட்டம்

    ப்ரியாராஜ்                                                          வெளிநாட்டுப் பறவைக் கூட்டம் காண     வேடந்தாங்கல் போவானேன்?     எச்சம் தின்னும் கருநிற காக்கை     கூட்டம் பார்க்க மெரினா     கடற்கரை போகலாம்? எதையும்     தின்னும் இந்த நூற்றாண்டின் மனிதனைவிட     நாம் எறிந்த மிச்கம் தின்னும் காக்கை மேல்         போன திங்கள் அப்பா திதியின் போது     ஆசாரமாய்ச் சமைத்த சாத உருண்டையைக் கூவி     அழைத்துச் சாப்பிட ஒற்றைக் காக்கை கூட வரவில்லை     இங்கு எத்தைனைப் பேர்கள் நீத்தார் திதியைச் செய்தபின்     இறுக்கம் போக்க கடற்கரை நோக்கி வந்தாரோ?     இன்றுவரை இறந்த அத்தனைப் பேரும் காக்கையாய்     சுற்றி சுற்றி வருகிறார்களா? எறிந்த மிச்சம்     தின்னும் அத்தனை காக்காய்க் கூட்டம் பார்த்தப்பின்பு     கொதிக்கும் மனம் கொஞ்சம் அமைதியாயிற்று...    

புள்ளி (ஒரு சின்ன கவிதைத் தொகுப்பு)

             அக்ரகாரத்துக் கதவுகள்             எங்களூர் அக்ரகாரத்தில்             அதிசியங்கள் ஆயிரம் உண்டு             செம்மண் பட்டையிட்டு             செங்காவிச் செறிவீச்சில்             கொலுவிருக்கும் வீடுகளின்             ஜன்னல்களுக்கோ             கதவுகளே இல்லை -             ஆனாலும்             டெர்ரிகாட் பளபளப்பில்             குதிகால் நடையுயர்த்தி             நட்ட நடுத் தெருவில்             நீள நடந்தால்             கறுப்பு சிவப்பு             பழுப்பு மாநிறப்             பரபரப்பு முகங்கள்             கதவுகளாய் முளைக்கும்.                          நா. விச்வநாதன்

ஐராவதம்

ஐராவதம் பக்கங்கள்     பிப்ரவரி 4 ஆம்தேதி ஐராவதம் எதிர்பாராதவிதமாய் மரணம் அடைந்துவிட்டார்.  ஆனால் அவர் என்னிடம் அவர் படித்தப் புத்தகங்கள் பற்றி குறிப்புகள், விமர்சனங்கள் எழுதிக் கொடுத்துள்ளார்.  அவற்றை முடிந்தவரை கொண்டு வருவதுதான் என் நோக்கம்.     திசை காட்டி என்கிற எஸ் வைதீஸ்வரன் புத்தகம் பற்றி 22.06.2013 அன்று ஐராவதம் எழுதியதை இங்கே அப்படியே பிரசுரம் செய்கிறேன். (திசை காட்டி - கட்டுரைகள் - எஸ் வைதீஸ்வரன் - நிவேதிதா புத்தகப் பூங்கா - விலை ரூ.75)     பிரெஞ்சுக்கவிஞர் 'சார்லஸ் போதலர்' முழு நேரக் கவிஞராக தன்னைக் காட்டிக் கொண்டவர்.  ஒரேயொரு உரைநடை நூல் எழுதினார். ஜெர்மன் கவிஞர் 'ரெயின் மேரி ரில்கே' இவரும் ஒரே ஒரு உரைநடை நூல் எழுதினார்.  அந்த வகையில் எஸ் வைதீஸ்வரனின் 'திசை காட்டியை'க் குறிப்பிடலாம் என்றால் ஒரு விஷயம் உதைக்கிறது.  இவர் இதற்கு முன்னமே 'கால் முளைத்த மனம்' என்ற தலைப்பில் விருட்சம் வெளியீடாக ஒரு சிறுகதைத் தொகுப்பு கொண்டு வந்துள்ளார்.  அந்த நூல் முதல் பதிப்பு விற்று இரண்டாம் பதிப்பாக கிழக்குப் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.    

காலத்தின் கட்டணம்

அசோகமித்திரன்   ஐராவதம் என்ற ஆர் . சுவாமிநாதன் அவர் ‘ கோணல்கள் ’ என்ற சிறுகதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரையிலிருந்து எனக்கு அறிமுகமானார் . அவரை ஒரு பையன் என்றுதான் நினைப்பார்கள் . ஆனால் முன்னுரையில் நல்ல மனமுதிர்ச்சியை உணர முடிந்தது . அப்போது அவர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு சென்னை தியாகராயநகர் நடேசன் தெருவில் வசித்துவந்தார் . ரிசர்வ் வங்கியில் வேலை கிடைத்தது . ஒரு கட்டத்தில் அவருக்கு வங்கித் தொகுப்பு குடியிருப்பில் வீடு கிடைத்தது . அது வரையில் நாங்கள் வாரம் இருமுறை மூன்று முறை சந்திப்போம் . அவர் என்னை விட குறைந்தது பதினைந்து ஆண்டுகள் சின்னவர் . ஆனால் அவர் எனக்கு எது எது படிக்க வேண்டும் , எந்தத் திரைப்படம் பார்க்கவேண்டும் என்று யோசனை கூறுவார் . அவர் தேர்ந்தெடுத்துக் கூறிய எதுவும் தவறான தேர்வாக இருக்காது . க . நா . சு டில்லி விட்டு மீண்டும் சென்னை வந்த போது முதலில் அவரை ஐராவதம் வீட்டில்தான் தங்க வைத்தது .   சில நாட்கள் இன்னொரு நண்பர் வீட்டில் . மயிலை டி . எஸ் . வி கோவில் தெருவில் இரு அறைகள் கிடைத்தவுடன் அங்கு சுமார் பத்து ஆண்டுகள் இருந்தார் . அதோடு அவர் வாழ்க்கை முடிந்த

பால்ய வனம்

     மி ருணா          பால்கனியில் இன்று பார்த்த நீல வானம்/ நினைவு படுத்துகிறது பால்யத்தை./ தும்பைப் பூக்களில் தேன் அருந்தும்/ மூடிய இமைகளுள்ள அந்த பருவத்திற்கு/ வாய்த் தண்ணீருள் மூழ்கிய/ கனகாம்பர விதைகள் வெடிக்கும்/ துடி துடிக்கும் இதயம்./ தட்டான்கள் ரீங்கரிக்க/ வண்ணத்துப்பூச்சி பிடிக்க/ ஓடும் பசிய வெளியில்/ பதிந்திடும் பாதச் சுவடுகள்/ நூறு வண்ணத்துப் பூச்சிகள்./ பின் அயர்ந்து தூங்குகையில்/ வயலெட், மஞ்சள் டிசம்பர் பூக்களைப் பற்றிய/ சிறிய அவாக்களும்/ வெள்ளை ரோஜா மரம் வளர்க்கும்/ பெரும் வனக் கனாக்களும்./ முட்களை மறைத்தபடி/ நுண்ணிய வலைத்துகளாய் விரியும்/ முற்றிய வெயில் மஞ்சள் கண்ணியில்/ சிக்காமல் ஒரு சிறுமி/ பால்யத்தின்/ சிறு வெண்சிமிழ் பூக்களை நுகர்ந்த படி/ அதன் எலுமிச்சை வாசனை பரவ/ பச்சை வண்ண சீப்புக் காயை/ தலையில் தேய்த்தபடி/ ஓடிக் கொண்டே இருக்கிறாள்/ எதன் பின்னும் அல்லாமல்./                       

ஓசிப்மெண்டல்ஷ்டாமின் கவிதை

   கவிதை எண் 17  குளம் எங்கே அசுத்தமாகவும் கலங்கலாகவும் இருக்கிறதோ  அங்கே நான் வளர்ந்தேன் ஒரு சலசலக்கும் நாணலாக  மேலும் ஒரு தளர்ந்த, மென்மையான பேராசையுடன்  சுவாசிக்கிறேன் எனக்கு மறுக்கப்பட்டிருக்கிற ஒரு வாழ்வினை  மண்ணினுள் ஒரு குளிர்ந்த வளைக்குள் நான் கீழே அமிழ்ந்து  போவதை  எவரும் பார்ப்பதில்லை  இலையுதிர் காலத்தின் சிறிய இடைவெளியில்  ஒரு சரசரப்பு என்னை வரவேற்கும் பொழுதில்  நான் எனது குரூர வலியில் கொண்டாடுகிறேன்  மேலும் என் வாழ்வில், அது கனவு போலிருக்கிறது  ரகசியமாக நான் எல்லா மனிதர் மீதும் பொறாமைப்படுகிறேன்  மேலும் ரகசியமாக அவர்கள் அனைவரையும் நேசிக்கிறேன்       தமிழில் : பிரம்மராஜன்