Skip to main content

எதையாவது சொல்லட்டுமா......97

  

    அழகியசிங்கர்


    ரொம்ப நாளைக்குப் பிறகு ஜெயகாந்தன் சிறுகதை வெளியீடு கூட்டத்திற்கு சென்றேன்.  இதற்கு முன் ஜெயகாந்தன் என்ற பெயரையே மறந்து விட்டேன்.  சமீப காலத்தில் யாரும் ஜெயகாந்தன் என்ற எழுத்தாளர் பெயரை யாரும் உச்சரிப்பதில்லை.  அவர் மீது யாருக்கும் எந்தக் கோபமும் இல்லை.  பல ஆண்டுகளுக்கு முன்னாலே அவர் எழுதுவதை நிறுத்தி விட்டார்.  பத்திரிகைகளில் கூட அவரைப் பற்றி எந்தச் செய்தியும் வருவதில்லை.  ஒருமுறை அவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரைப் பற்றி பேச்சு வந்தது.  அவர் நலமாக வீடு வந்து சேர்ந்துவிட்டார் என்ற செய்தியுடன் அவரைப் பற்றி பேச்சு நின்று விட்டது. 

    அவர் சிறிய வயதிலேயே எழுத ஆரம்பித்து விட்டார்.  சிறுகதைகள், நாவல்கள் என்று எழுதிக் குவித்தவர்.  அவர் எழுத்துக்களைப் பிரசுரம் செய்ய பெரிய பத்திரிகைகள் காத்துக்கொண்டிருந்தன.  குறிப்பாக விகடன் அவர் எழுத்தை பிரசுரம் செய்ய காத்துக்கொண்டிருந்தது.  அந்தக் காலத்தில் தமிழ் எழுத்தாளர்களிடையே மதிப்பை உயர்த்தியவர் ஜெயகாந்தன் என்று குறிப்பிடுவார்கள். 

    ஆனந்தவிகடன் பத்திரிகை அலுவலகத்தில் சட்டையும் பேன்டும் அணிந்துகொண்டு  மிடுக்காக செல்பவர் அவர் ஒருவர்தான். பொதுவாக மற்ற எழுத்தளார்கள் வேஷ்டியைக் கட்டிக்கொண்டு போவார்களாம்.

    முழுக்க முழுக்க எழுத்தையே நம்பி பெரிய வெற்றி அடைந்தவர் அவர் ஒருவர்தான். மியூசிக் அகாடமி, சென்னையில் 24ஆம் தேதி நடந்த கூட்டத்தில், உட்கார இடம் கூட கிடைக்காமல் பலர் அவதிப் பட்டார்கள்.  அப்படி கூட்டம்.   ஜெயகாந்தன் கதைகள் என்ற அவர் புத்தகமும், அவருடைய பிறந்தநாள் விழாவும் சிறப்பாக நடைப்பெற்றன. டாக்டர் ராம்தான் ஜெயகாந்தன் கதைகள் என்ற புத்தகத்தைத் தொகுத்தவர்.  அவர் நீண்ட வரவேற்புரையை நிகழ்த்தினார்.  சிறு பத்திரிகைகளிலிருந்து பெரிய பத்திரிகைக்கு நுழைந்தவர் ஜெயகாந்தன் என்று குறிப்பிடுவார்கள்.  ஆனால் சிறுபத்திரிகையைச் சேர்ந்த யாரையும் பேசக் கூப்பிடவில்ல

    நான் கல்லூரி படிக்கும் காலத்தில் ஜெயகாந்தன் ஆலந்தூரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பேச வந்தார்.  அவர் பேச்சைக் கேட்பதற்காக ஆவலுடன் நானும் கலந்து கொண்டேன்.  கையில் வைத்திருந்த துண்டு மாதிரியான துணியை பாரதி மாதிரி முண்டாசு கட்டிக்கொண்டார்.  அவர் பேச ஆரம்பித்தபோது ஆவேசமாகப் பேசினார்.  அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களையே அவர் திட்ட ஆரம்பித்தார்.  எனக்கு அவர் அப்படி திட்டி பேசியதைக் கேட்டு அவர் துணிச்சலை நினைத்து ஆச்சரியப்பட்டேன்.  அந்த வயதில் ஆச்சரியமாக இருந்தது.  நானும் எங்கள் மாம்பலம் ஏரியாவில் ஒரு இடத்தில் பேச போனபோது ஜெயகாந்தன் மாதிரி ஆவேசமாகக் கத்தினேன்.  பின் யோசித்தபோது அது முட்டாள்தனம் என்று தோன்றியது.  அந்தக் கூட்டத்திற்குப் பின் நான் ஜெயகாந்தன் கூட்டங்களுக்குப் போவதில்லை.  அவர் எப்படி பேசுவார் என்பதைத் தெரிந்து வைத்துக்கொண்டிருந்தேன். 

    கொஞ்சம் கொஞ்சமாக நான் சேகரித்து வைத்திருந்த ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவம், சினிமா அனுபவம் போன்ற புத்தகங்களை என் நண்பர்களிடம் கொடுத்துவிட்டேன்.  அவர்கள் படித்தார்களா என்பதுகூட தெரியவில்லை.  ஏனென்றால் யாரும் திரும்பவும் புத்தகங்களைக் கொடுக்கவும் இல்லை.  படித்த மாதிரியும் சொல்லவில்லை. 

    ஜெயகாந்தனால் தொடர்ந்து எழுத முடியவில்லை என்றாலும் பல எழுத்தாளர்கள் அவர் எழுத்தை தொடர்ந்து அதே பாணியில் எழுத ஆரம்பித்தார்கள். 

    பின்னாளில் ஜெயகாந்தன் பேசும்போது, அவரிடம் அந்த ஆவேசம் குறைந்து விட்டது.  ஆனால் பேசும்போது ஒருவிதத் தெளிவை என்னால் உணர முடிந்தது.  எந்த விஷயத்தைப் பற்றியும் அவர் தெளிவான சிந்தனையுடன் பேசுவார் என்று தோன்றியது.  நானோ மாறி விட்டேன்.  ஜெயகாந்தன் கூட்டத்தைவிட நான் ஜே கிருஷ்ணமூர்த்தி கூட்டத்திற்குத்தான் போவேன்.  கூட்டத்தில் பேசத் தெரியாத, விரும்பாத எழுத்தாள நண்பர்களுடன்தான் பேசுவேன்.

    24ஆம் தேதி அன்று ஜெயகாந்தன் கூட்டத்திற்கு வந்திருந்தபோது, அவர் எழுந்து சிறிது நேரம் கூட நிற்க முடியவில்லை.  ஆனால் அவரிடம் ஒரு கம்பீரம் இருக்கும்.  அந்தக் கம்பீரத்திற்கு எந்தக் குறைவும் இல்லை.  இன்றைய எழுத்து அவருடைய எழுத்தையெல்லாம் தாண்டிப் போய்க் கொண்டிருக்கிறது.  ஆனால் ஜெயகாந்தனை நம்மால் மறக்க முடியாது. 

Comments