Skip to main content

சில விபரங்கள்




    விருட்சம் இலக்கியச் சந்திப்பு என்ற பெயரில் கூட்டம் நடத்த முயற்சி செய்வதற்கு முதல் காரணம்.  ஆடிட்டர் கோவிந்தராஜன்.  இவர் முழுக்க முழுக்க ஒரு சிறுகதை வாசிப்பாளர். பல ஆண்டுகளுக்கு முன் நான் ஆரம்பித்து நிறுத்தி இருந்த இலக்கியக் கூட்டங்களை திரும்பவும் ஆரம்பிக்க என்னைத் தூண்டியவர்.  இதுவரை நாங்கள் 4 கூட்டங்களை நடத்தி இருக்கிறோம்.  இலக்கியக் கூட்டம் நடத்தும்போது நான் எதிர்கொள்வதை கோவிந்தராஜனுக்கும் தெரியும்.  அவர் ஒரு ஆடிட்டர் மட்டுமல்ல.  வகுப்பும் நடத்தும் ஆசிரியர்.  பல இடங்களுக்குச் சென்று அவருடைய துறை சம்பந்தமாக பேச வல்லவர்.  என்னமோ தெரியவில்லை அவருக்கு தமிழ் சிறுகதைகளைப் படிப்பதில் ஒரு பித்து.  எந்தப் பத்திரிகையில் எந்தக் கதை வந்தாலும் படித்து விடுவார்.  மேலும் சிறுகதைத் தொகுதிகளையும் வாங்கிப் படிப்பார்.  படிப்பதோடு அல்லாமல் அந்தந்த எழுத்தாளர்களைக் கூப்பிட்டு பாராட்டவும் செய்து விடுவார்.     

    அவர் முயற்சியில் இன்னொன்றையும் செய்ய முனைந்து விட்டேன்.  மாதம் ஒரு சிறுகதையை பத்திரிகைகளிலிருந்து தேர்ந்தெடுத்து பரிசு கொடுப்பது என்று.  இந்த முயற்சி ஏற்கனவே இலக்கியச் சிந்தனை செய்வதுதான்.  ஆனால் இலக்கியச் சிந்தனை சிறுபத்திரிகையில் வரும் கதைகளை கவனிப்பதில்லை.  நானும் ஆடிட்டரும் எல்லாப் பத்திரிகைகளில் வரும் கதைகளைப் படித்து சிறந்த கதை என்று எங்களுக்குத் தோன்றுவதை தேர்ந்தெடுத்து ரூ.500 பரிசளிப்பது என்ற முறையை ஆடிட்டர் கோவிந்தராஜன் முடிவுபடி செய்து உள்ளோம்.  அப்படி ஒவ்வொரு மாதமும் தேர்ந்தெடுக்கும் கதைகளை மொத்தமாக புத்தக உருவில் விருட்சம் வெளியீடாகக் கொண்டு வருவது என்று நான் முடிவு எடுத்துள்ளேன்.  எங்கள் எண்ணம் எந்த அளவிற்கு நிறைவேறும் என்பதை நாங்கள் அறியோம்.

    முதன் முதலாக ஜøலை மாதம் கதையாக ஆனந்தவிகடன் 16.07.2014 ல் வெளிவந்த 'காணும் முகம் தோறும்' என்ற எஸ் செந்தில்குமார் எழுதிய கதையைத் தேர்ந்தெடுத்துள்ளோம். நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு என்ற பெயரில் இக் கதை பிரசுரம் ஆகி உள்ளது.  உண்மையில் அப்படித்தான்.  நாங்கள் இதற்காக பல பத்திரிகைகளைப் படித்தோம்.  எல்லாக் கதைகளைப் பற்றியும் சிறு சிறு குறிப்புகளும் எழுதி உள்ளோம்.  இந்தக் கதைத் தேர்ந்தெடுப்பில்  எஸ் ராமகிருஷ்ணன் போன்ற பிரபலமான கதை ஆசிரியர்களை தவிர்த்து விட்டோம்.  அ முத்துலிங்கம் 'சின்ன சம்பவம்' என்ற சிறப்பான கதையை உயிர்மை இதழில் ஜøலை மாதம் எழுதி உள்ளார்.  ஆடிட்டர் அன்பளிப்பாக அளிக்கும் இத் தொகை குறைவானதுதான்.  வேறு யாராவது இன்னும் எதாவது நன்கொடை அளிக்க முன் வந்தால் அதையும் சேர்த்து செந்தில் குமார் அவர்களுக்கு அனுப்பலாம். 

    உங்கள் மேலான கருத்துக்களை அறிய ஆவலாக உள்ளோம். 


Comments