Skip to main content

கசடதபற ஜøலை 1971 - 10வது இதழ்





தெலியலேது ராமா

- ஜதுஷ்டிரன்



'ப்ராங்க்ளின் கொட்டைப்ராந்து
முத்துச்சாமி செத்த எலி'
செல்லப்பா சொல்லி விட்டார்
நாப்பா போட்டு விட்டார்

IDENTITY CRISIS
ALIENATION FEELING

'இழப்பில்' இதுவெல்லாம்
எங்கேயும் இல்லையாம்
செல்லப்பா சொல்லிவிட்டார்
நாப்பா போட்டுட்டார்.

தமிழ்நாட்டில் தமிழ்க் குலத்தில்
தமிழ்ச் சரித்திர வரலாற்றில்
சோகத்துக்கிடமில்லை - இதயச் 
சோரத்துக் கிடமில்லை

ஸந்தோஷம் ஸல்லாபம்
ஸம்போகம் தார் மீகம்
சத்தான சொல்லடுக்கு
தமிழ்க் கதைக்கு மிக மிடுக்கு

செல்லப்பா சொல்லிட்டார்
நாப்பா போட்டுட்டார்

இனி -
ஆறடி உயரம் அழகான பெண்மைமுகம்
(மேற்கொண்டு வர்ணனைக்கு
நாப்பாவைக் கேளுங்கள்)
சத்தான கருத்துக்கள்
நாயகன் அவிழ்த்துவிட
ஐந்தடி உயரம் ஐந்தடி கூந்தல்
திரண்ட தமிழறிவும் தியாகேசர் கீர்த்தனையும்
தெரிந்த நல்நாயகி திடீரென வந்து
நிம்போமேனியாவில் நாயகனைக் காதலுற்று
லக்ஷணமாய் குண்டு குண்டாய்ச் சித்திரங்கள் போட்டு
ட்ராஜடியாய் காமடியாய் ட்ராஜிக் காமெடியாய்

(தெலியலேது ராமா தமிழ் நாவல் மார்க்கமு)

நாப்பா எழுதிடுவார்
செல்லப்பா வாழ்த்திடுவார்

செத்த எலிகளுக்கு இடமில்லை தமிழினிலே
ஜோடித்த பிணங்களுக்கே சொகுசுண்டு இனிமேலே

ஜரதுஷ்டிரன் என்ற கவிஞர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை.  அவர் எழுதிய சில கவிதைகள் கசடதபற, பிரஞ்ஞை, கணையாழி போன்ற பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.
மேற்குறிப்பிட்ட கவிதையை முதலில் படிப்பவர்கள் ஒன்றுமே புரியாமல் முழிப்பார்கள்.  கசடதபற இதழ்களை முன்பே படித்தவருக்கு 
ஓரளவு இந்தக் கவிதை எதைப் பற்றி சொல்கிறது என்பது தெரியும். இப்போது புதியதாகப் படிக்கும் வாசகர்களுக்கு தலையும் புரியாது காலும் புரியாது.  பொதுவாக தமிழில் கவிதை எழுதுபவர்கள் ஒருவரை ஒருவர் குறை சொல்வதும் கவிதையின் ஒரு அங்கம்.  
இந்தக் கவிதையில் செல்லப்பா என்று சொல்வது எழுத்து ஆசிரியர் சி சு செல்லப்பாவை குறிக்கும்.  நாப்பா என்பது நா பார்த்தசாரதியைக் குறிக்கும்.  ந முத்துசாமி எழுதிய கதையை ப்ராங்களின்  என்ற ஆங்கிலேயர் பாராட்டியதால், சி சு செல்லப்பா அந்தக் கதையைக் குறித்து நா பா நடத்திய தீபம் பத்திரிகையில் தாக்கி எழுதியதை கவிதை ஆக்கி உள்ளார் ஜரதுஷ்டிரன்.   

Comments