Skip to main content

கோயிலுக்குள் ஒரு யானை

‘மாஸ்கோ நகரம் மிகவும் நேசித்த எழுத்தாளரான ஆண்டன் செகாவின் சவப்பெட்டி ரயில் நிலையத்தை வந்தடைந்தது. பச்சை நிறத்தில் இருந்த அந்த ரயில் பெட்டியின் கதவில் பெரிய எழுத்துகளில் ‘ஆயிஸ்டர்களுக்காக’ என்று எழுதியிருந்தது. ரயில் நிலையத்தில் காத்திருந்த கூட்டம் சவப்பெட்டியைத் தொடர்ந்து சென்றது. அப்போது இறுதி மரியாதைக்கான ராணுவ இசை முழங்கிற்று. செகாவுக்கு ராணுவ மரியாதையா என்று கூட்டம் வியப்படைந்தது. ஆனால் அவர்கள் தொடர்ந்து சென்ற ராணுவ அதிகாரியின் சவப்பெட்டி மஞ்சூரியாவிலிருந்து வந்தது. விஷயம் தெரிந்ததும் செகாவின் இறுதி மரியாதைக்கான கூட்டம் சிரித்தது. கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை நூறுக்கும் மேல் இராது’ – இப்படி எழுதியிருக்கிறார் செகாவின் சமகால எழுத்தாளரான மாக்சிம் கார்க்கி.
செகாவின் இறுதி ஊர்வலத்தில் நேரில் கலந்துகொண்ட கார்க்கி அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை நூறுக்கு மேல் இல்லை என்றார். ஆனால் அவரே தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை மூவாயிரம் முதல் ஐயாயிரம் வரைக்கும் என்று சொல்லியிருக்கிறார். கட்டுரையில் ஒன்று சொல்கிறார், கடிதத்தில் ஒன்று சொல்கிறார் கார்க்கி. வெறுமனே துக்கம் கொண்டாடப் போனவர் மட்டுமல்ல கார்க்கி. எத்தனைப் பேர்கள் இறுதி ஊர்வலத்தில் வந்தார்கள் என்று மட்டுமல்லாமல் அவர்களில் சிலர் என்ன பேசினார்கள் என்று கவனித்துக்கொண்டிருந்தவராகவும் இருக்கிறார் காரக்கி. புதிய அழகான உடை உடுத்திய ஒருவர் புறநகரில் தான் வாங்கிய வீட்டின் வசதிகளைப் பற்றியும், சுற்றிலும் அமைந்த இயற்கை அழகைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தாராம். இன்னொருவர் வளர்ப்பு நாய்களின் அறிவுடைமை பற்றிப் பேசினாராம். அழகான குடை பிடித்துக்கொண்டு ஊர்வலத்தில் பங்கேற்ற ஒரு பெண் ஒருவரிடம் – நல் ப்ரேம் போட்ட கண்ணாடி அணிந்தவர் – ‘ஹி இஸ் அன்பிலீவப்லி நைஸ் அண்ட் ஸோ விட்டி’ என்று சொல்லிக்கொண்டே நடந்தாராம். இவையெல்லாம் நமது சிந்தனைகளைத் தூண்டுகின்றன. கார்க்கியிடம் எழுத்தாளர் எப்போதும் எந்தத் தருணத்திலும் விழித்திருக்கிறார் என்பது தெளிவு. ஆனால் எவ்வளவு நம்பலாம் என்று சொல்ல முடியாது. முதலில் நூறென்றும் பிறகு பல ஆயிரம் என்றும் நேரில் பார்த்த அவரே சொல்வாரானால், பாரதியைக் கோவில் யானை தாக்கிய காட்சியை நேரில் பார்த்தவர்கள் என்று நம்பப்படுபவர்கள் எதுவும் சொல்லாதிருக்க அல்லது என்ன சொன்னார்கள் என்பது தெரியாதிருக்க யார் என்ன சொன்னாலும் நம்ப நேர்கிறது.
யானையால் பாரதி தாக்கப்பட்டாரா? அப்படித்தான் சொல்லப்பட்டிருக்கிறது. யார் சொன்னார்கள்? தெரியவில்லை. ஆனால் ஒரு செய்தி அக்காலத்தில் வெளிவந்துகொண்டிருந்த சுதேசமித்திரனில் வெளியாகியிருக்கிறது. எந்தத் தேதியில் வெளியாயிற்று அந்தச் செய்தி? பாரதியால் பூணூல் அணிவிக்கப்பட்டதற்காகப் பெயர் பெற்ற கனகலிங்கம் ‘சுதேசமித்திரனில் பார்த்தசாரதி கோவில் யானை பாரதியாரைத் தாக்கியது’ என்ற வாக்கியம் கண்ணில் பட அவர் திருவல்லிக்கேணிக்குப் போய்ப் பார்த்தாராம். ஆறு சொற்களாலான வாக்கியம் செய்தித் தாளுக்குள் இருந்ததா? அல்லது முக்கியச் செய்திகளைக் கூறும் சுவரொட்டிதானா? அது எப்போது எந்த நாளில் வெளியாயிற்று? சாதாரணமாக மறுநாள் வெளியாகியிருக்கக்கூடும். அல்லது தேதி குறிப்பிடாமல் ‘அண்மையில்’ என்று குறிப்பிட்டு செய்தி வெளியிடுவார்கள். அந்தச் செய்தி பாரதி யானையால் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நாளுக்கு எத்தனை நாள்கள் கழித்து வெளியாயிற்று? தெரியாது. அந்தச் செய்தி ஆங்கில நாளேடுகளில் வெளிவந்ததா? தெரியாது. ஆனால் சுதேசமித்திரன் பெயர் மட்டும்தான் அந்தச் சம்பவம் குறித்துக் கூறப்படுகிறது. பாரதியின் பள்ளித் தேழர் நாவலர் சோமசுந்தர பாரதியார்
‘சமீபத்தில் சென்னையில் யானைக்குப் பழமருந்தப் போய் மிதியுண்டு (பாரதி) பலநாள் வருந்தியது பத்திரிகை படிக்கும் பலருக்கும் தெரியும்.’
என்று எழுதியிருக்கிறார். பலருக்கும் தெரியும் என்றால் என்ன அர்த்தம்? பாரதியார் வண்டியில் கொண்டுபோகப்பட்டுப் புற நோயாளியாகப் பார்க்கப்பட்டு உடனே வீடு திரும்பியிருக்கிறார். பாரதிக்கு ஏற்பட்ட காயம் பெரிய காயமாக இருந்திராது. எனவேதான் உடனே அவர் வீடு திரும்ப முடிந்தது. யானையால் – சோமசுந்தர பாரதி சொல்வது போல – பாரதியார் ‘மிதியுண்டிருந்தால்’ அது சாத்தியமா?
‘இவர் (பாரதியார்) சர்வ ஜீவராசிகளோடும் தமக்குப் பகையற்ற நேசமுண்டு என்று வற்புறுத்தி வாதிக்கக் கேட்டிருக்கிறேன்.’
என்று ஒரு செய்தியைச் சேர்த்திருக்கிறார் சோமசுந்தர பாரதியார்.
சர்வ ஜீவராசிகளோடும் தமக்குப் பகையற்ற நேசமுண்டு என பாரதியார் சொல்லியிருக்கலாம். ஆனால் இதில் வற்புறுத்த என்ன இருக்கிறது? இல்லை என்று பிறர் மறுத்தபோதுதானே வற்புறுத்த நேரும்? பிறகு வாதிக்கக் கேட்டிருப்பதாகவும் சொல்கிறார் பாரதியின் நண்பர். இங்கேயும் வாதிக்க என்ன இருக்கிறது? நான் சர்வ ஜீவராசிகளுடனும் நேசமுடையவன் என்று ஒருவன் சொன்னால் யார் கிடையாது என்று மறுக்கப்போகிறார்கள்? ‘காக்கை குருவி எங்கள் ஜாதி’, ’வானில் பறக்கும் புள்ளெலாம் நான்’ போன்ற வரிகளை எழுதியவர் பாரதி. இந்தச் செய்தியை வைத்துக்கொண்டு கோயில் யானையால் பாரதி தள்ளப்பட்ட சம்பவம் புனையப்பட்டதாகக் காட்சி தரத் தொடங்குகிறது.
இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்ததாகச் சொல்லப்படும் குவளைக் கண்ணனோ, அல்லது மண்டயம் ஸ்ரீநிவாஸாசாரியரோ தாங்கள் எழுதிய கட்டுரைகளில் இந்நிகழ்ச்சி பற்றியோ எதுவும் குறிப்பிடவில்லை. இத்தனைக்கும் இவர்களில் ஒருவரான குவளைக் கண்ணன்தான் பாரதியாரை யானையிடமிருந்து மீட்டதாகக் கூறப்படுகிறது. அது உண்மையென்றால் குவளைக் கண்ணன் அந்தச் செய்தியைச் சொல்லாமல் விடுவாரா என்ன. இந்தக் கதை இருபது ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிக்கு ஒரு ஆகிருதி ஏற்படத் தொடங்கியபோது அவருடைய மனைவி செல்லம்மாவால் மகள் தங்கம்மாளுக்கு சொல்லப்படுகிறது. அது முதல் பாரதியின் கதையில் இச்சம்பவம் வந்து அமர்கிறது.
செல்லம்மாள் ஓரளவு செய்தியைக் கூறியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இந்நிகழ்ச்சி இப்படித்தான் நடந்ததென்று யாராலும் உறுதியாகக் கூற முடியாது. பார்க்காதவர்கள் புனைந்த கதை இது. செல்லம்மா சொன்ன கதை அகில இந்திய அளவில் பரவிவிட்டது. ஒரு கவிஞர் யானையால் தள்ளப்பட்டார், அதனால் விளைந்த காயத்தால் இறந்தார் என்பது சுவாரசியமான கதையல்லவா? அதை யாரும் ஆராய்ந்தார்கள் என்று சொல்ல முடியாது. பாரதியுடன் நேர்ப் பழக்கம் இருந்த வ. ராமஸ்வாமி, பாரதியின் வாழ்க்கை வரலாற்றை எழுதி அளித்தவர் – இந்த நிகழ்ச்சியை அவர் மனைவி செல்லம்மா சொன்னபடியே ஏற்றுக்கொள்கிறார். பின்பு கதையைப் பொலிவு செய்கிறார். பார்த்தசாரதி கோயிலுக்குப் பக்கத்து வீதியில் பாரதி வாழ்ந்ததாக வ.ரா. சொல்கிறார். பாரதி வாழ்ந்த தொல்சிங்கப் பெருமாள் கோயில் தெரு பார்த்தசாரதி கோயிலுக்குப் பின்பக்கத்தில் உள்ளது என்பதே தெளிவானதாகும். பாரதி தன் வீட்டிலிருந்து பார்த்தசாரதி கோயிலுக்குப் போக வேண்டுமென்றால் ஏறக்குறைய நூறடிக்கு மேல் நடக்க வேண்டும்.
பாரதியின் மகள் சகுந்தலா, யானை நிகழ்ச்சியை ஜாக்ரதையாக விவரிக்கிறார். சில நாளாகக் கோயில் பக்கம் போகாதிருந்தார் பாரதி என்கிறார் இவர். சில நாளாக இவர் கோயில் பக்கம் போகவில்லை என்பதால் யானைக்கு மதம் பிடித்திருந்ததாக சொல்லப்பட்டது அவருக்குத் தெரியவில்லை என்பதற்காகக் கூறப்பட்டுள்ளது. அவர் சொல்படி ‘யானைக்கு மதம் பிடித்திருந்ததாம். நான்கு கால்களையும் சங்கிலியால் அதைக் கட்டியிருந்தார்களாம். (ஆனால்) ஜனங்கள் கம்பி வேலிக்கு வெளியே நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்களாம். யானைக்கு மதம் பிடித்திருந்தால் மக்கள் அதை வேடிக்கை பார்ப்பார்களா? பார்க்க அனுமதிக்கப்படுவார்களா? அந்த ஆண்டு 1921ம் ஆண்டாக இருந்தாலும் சரி. பாரதி கம்பி வேலிக்கு உள்ளே போனாராம். ஆனால் ஜனங்கள் யாரும் தடுக்கவில்லையாம்! பாரதியின் கையிலிருந்து பழத்தை வாங்கிக்கொண்ட யானை அவரைத் துதிக்கையால் கீழே தள்ளிவிட்டது. யானையின் நான்கு கால்களுக்கிடையில் பாரதி விழுந்துவிட்டார். எழுந்திருக்கவில்லை. இப்படிக் கூறும் சகுந்தலா
ஜனங்கள் அவரைத் (பாரதியை) தாங்கிய வண்ணம் கோயில் வாசல் மண்டபத்துக்குக் கொண்டு வந்தார்கள்
என்கிறார். கோயில் வாசல் மண்டபம் என்றால் எது? இப்போது இருக்கும் பகுதி. அதாவது பிரதான வாசலுக்கு – கொடிமரத்துக்கு – முன்னே அமைந்துள்ள பெரிய கதவுகள் உள்ள பகுதி. அப்படியானால் யானை எங்கே கட்டப்பட்டிருந்தது? கோயிலுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. எல்லாக் கோயில்களிலும் யானை கோயலுக்குள்ளேயே ஓரிடத்தில் கட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். எனவே பாரதி கோயிலுக்குள் போய்விட்டிருக்கிறார். அங்கு செல்லம்மா சொல்வது போல் பாரதியிடம் பழம் வாங்கிக்கொள்ளும் யானை அவரைத் தள்ளி விட்டிருக்கிறது.
ஆனால் வ.ரா.வின் கதையில் பாரதிக்கும் யானைக்கும் உள்ள சகோதரத்வம் முதிர்ந்துவிட்டது. பாரதி யானையிடம் போய் ‘சகோதரா’ என்று பழங்களை நீட்டினாராம். சகோதரா என்று யானையைப் பாரதியார் அழைத்ததாக வ.ரா.வுக்குத் தெரியவந்தது எப்படி? கற்பனைதான். வ.ரா. கதையை இன்னும் உக்கிரமாக வர்ணிக்கிறார். பாரதி யானைக்குப் பக்கத்தில் போனபோதுதான் அது வெறி கொண்டது போல் வ.ரா. சொல்கிறார்.
யானையோ பழங்களோடு பாரதியாரையும் சேர்த்துப் பிடித்து இழுத்துத் தான் இருக்கும் கோட்டத்துக்குக் கொண்டுபோய்விட்டது.
யானைக்குக் கோட்டமா? கோயில் யானைக்குக் கோட்டம் கட்டியிருந்ததாகத் தெரியவில்லை. அப்படியிருந்தால் அந்தக் கோட்டத்தை வ.ரா.தான் கட்டியிருக்க வேண்டும். வ.ரா.வின் வர்ணனையைப் படித்தால் யானை துதிக்கையில் பாரதியாரைத் தூக்கிக்கொண்டு தன்னுடைய இடத்துக்குப் போவது சித்திரமாவதைப் பார்க்கலாம்.
இந்தச் சித்திரப்படி பாரதி யானையின் துதிக்கையில் இருக்கும்போது தப்பித்துக்கொள்ள எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் சும்மா இருந்தது போல் தெரிகிறது. இப்படி நடந்திருந்தால் பாரதி பெரிய காயங்களைப் பட்டிருப்பார். ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. அதனால்தான் இராயப்பேட்டை மருத்துவமனையில் அவரைப் புறநோயாளியாக மட்டுமே வைத்துக்கொண்டு முதல் உதவிகள் (?) செய்து அனுப்பிவிட்டார்கள்.
ரா. கனகலிங்கம் பாரதியை யானை சம்பவத்துக்குப் பிறகு சந்திக்கிறார். அப்போது பாரதி அவரிடம் சொன்னதாக அவர் சொல்கிறார்: பாரதி சொன்னாராம்:
‘எப்போதும் நான் அந்த யானைக்கு வெல்லம் கொடுப்பது வழக்கம். அன்று அது தென்னை ஓலையைத் தின்று கொண்டிருந்தது. அச்சமயம் நான் வெல்லத்தை நீட்டினேன். அது தலைகுனிந்த வண்ணம் ஓலைப் பட்சணத்தைப் பட்சித்துக் கொண்டிருந்ததால் என்னைப் பார்க்கவில்லை. என்னைப் பாராமலேதான் தும்பிக்கையால் தள்ளிவிட்டது.’
கனகலிங்கம் எழுதியிருப்பது நம்பும்படியாக இருக்கிறது. பாரதி தன் வீட்டில் அன்றாடம் பேசியிருக்கக்கூடிய தமிழாக அவருடைய பேச்சு அமைந்திருக்கிறது. பட்சணம், பட்சித்தல் என்ற சொற்கள் அக்காலத்தில் வழங்கிவந்தவைதான். பாரதி கனகலிங்கத்தைப் பார்த்து இளம் புன்னகை செய்ததாகக் கனகலிங்கம் குறிப்பிடுகிறார். எனவே பாரதி அப்போது மோசமான நிலையில் இல்லை என்பது தெளிவு. பாரதி யானைக்கு வெல்லம் கொடுக்கப் போனதாகக் கூறுகிறார். அதுவும் அதுதான் தனது வழக்கம் என்கிறார். ஆனால் சகுந்தலாவோ பாரதி பழம் கொடுக்கப் போனதாகக் குறிப்பிடுகிறார். யானை தென்னை ஓலை தின்றுகொண்டிருந்ததாகப் பாரதி சொன்னதும் கவனிக்கத் தகுந்தது. தென்னை ஓலைகள், தேங்காய்கள் இவற்றைப் பாகன்தான் கொடுப்பான். யானை நல்ல நிலைமையில் இருந்ததையே இந்தக் குறிப்புகள் காட்டுகின்றன. தனக்குத் தெரிந்த ஒருவர் தனக்கு விருப்பமான ஒரு பொருளைத் தருகிறார் என்பதை யானை கவனிக்கவில்லை என்கிறார் கனகலிங்கம். யானை அவரைத் தள்ளியது ஒரு பிழையே தவிர மதத்தினால் அல்ல என்றுதானே முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது. யானைக்கு மதம் பிடித்திருந்தது, சங்கிலியால் கால்களைக் கட்டியிருந்தது போன்ற செய்திகள் எதுவும் கனகலிங்கத்தின் கூற்றில் காணப்படவில்லை. பாரதி தன் நண்பர் பரலி. சு. நெல்லையப்பர் செய்ய முன்வந்த மருத்துவ உதவியை நிராகரித்திருக்கிறார். பாரதி தனக்கு சிறப்பான சிகித்சை தேவைப்படவில்லை என்றுதானே அதை அவர் நிராகரித்திருப்பார். தனக்குத் தேவைப்படும் ஒன்றைப் பிறரிடம் கேட்கத் தயங்கும் இயல்புடையவர் இல்லை பாரதி என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.
யானைக் கதையில் பாரதியின் மகள் சகுந்தலா எழுதுகிறார்:
என் தந்தை எழுந்திருக்கவில்லை. முகத்தினின்றும் ரத்தம் பெருக்கெடுத்துவிட்டது. யானை தன் நண்பனுக்குத் தீங்கு இழைத்துவிட்டோமே என்ற பச்சாதாபத்துடன் தன் பிழையை உணர்ந்தது போல அசையாமல் நின்றுவிட்டது.
இந்த வர்ணனை, குறிப்பாகப் பச்சாதாபம் என்ற சொல் மற்றும் பாரதிக்கு யானையால் ஏற்பட்டதாகக் கூறப்படும் காயம் எல்லாம் பாரதி எழுதிய ‘கோயில் யானை’ என்ற நாடகத்தை நினைவூட்டுகிறது. கோயில் யானை நாடகக் கதையில் கதாநாயகன் வஜ்ரி கோயில் யானைக்குப் பழம் கொடுக்கும்போது யானையால் அவன் தள்ளப்படுகிறான். யானையைப் பற்றிப் பாரதி எழுதுகிறார்:
யானை தன் தந்தையுடைய கடிகாரத்தை வீழ்த்தி உடைத்துவிட்டுப் பின் பச்சாதாபம் எய்தும் குழந்தை விழிப்பது போல விழித்துக் கொண்டு நின்றது.
கோயிலில் ஒரு யானை, அதற்குத் தின்பண்டம் கொடுக்க ஒருவர் போவது, அவரை யானை தள்ளிவிடுவது, இவையெல்லாம் பாரதி எழுதிய கோவில் யானை என்ற நாடகத்தில் வருகிற நிகழ்ச்சிகள். இவையே பாரதிக்கும் நடந்ததாக சாதித்துவிட்டார்கள் போல் தெரிகிறது. சம்பவம் நடந்த இடத்தில் வந்து பாரதியை யானையிடமிருந்து மீட்டதாகக் கூறப்படும் குவளைக் கண்ணனோ ஸ்ரீநிவாஸாசாரியரோ ஒன்றும் சொல்லாதிருக்க, இடத்தில் இல்லாதவர்கள் இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததாக சாட்சி சொல்கிறார்கள். பத்திரிகையில் பாரதி யானையால் தள்ளப்பட்ட செய்தி வந்ததாகச் சொன்னவர்கள் அதன் விவரத்தைத் தர இயலவில்லை. ஆராய்ச்சியாளர்களுக்கும் இதைக் கண்டுபிடித்து உண்மை நிலை என்னவென்று தெரிவிக்க இயலவில்லை.
குறிப்பிட்ட நாளன்று பாரதிக்கு ஏதோ உடல்நலக் கோளாறு ஏற்பட்டிருக்க வேண்டும். தனது வீட்டிலிருந்து நூறடித் தொலைவில் உள்ள பார்த்தசாரதி கோயிலுக்குப் போகும்போது அல்லது கோயிலின் முன்வாசலை அடைந்தபோது அவருக்குத் தற்காலிக உடல்நலக் குறைவு ஏற்பட்டு விழுந்திருக்க வேண்டும். முதல் உதவி – சிறிய ஒட்டல்கள் – சுத்திகரிப்புகள் முதலியன தேவைப்படும் அளவுக்கு அவருடைய காயங்கள் இருந்திருக்கலாம். அல்லது பாரதியாருக்கு வீட்டிலேயேகூட ஏதாவது நிகழ்ந்திருக்கலாம். எது உண்மை என்று தெரிந்துகொள்ள முடியாதபடி கோயில் யானை தள்ளிய கதை என்ற கம்பளியை அவர் மீது போர்த்திவிட்டார்கள் என்று தோன்றுகிறது.
கோயில் யானை தள்ளிய நிகழ்ச்சி உண்மையாக நடந்த ஒன்றுதான் என்பவர்களுக்குச் சில சிக்கல்கள் உண்டு. அது எப்போது நடந்திருக்கக்கூடும் என்பதில் அவர்களிடம் கருத்தொற்றுமை இல்லை. அந்த நிகழ்வின் காரணமாகத்தான் அவர் இறந்துபோனார் என்றவர்கள் பாரதி அதற்குப் பிறகு மூன்று மாதத்தில் இறந்தார் என்றும் (வ.ரா.), நெடுநாள் உலகில் வாழவில்லை என்றும் (பெ. தூரன்), சம்பவம் ஜூன் மாதத்தில் நடந்ததென்றும் சொல்லியிருக்கிறார்கள். அவர்களில் பாரதி வரலாற்றை முதலில் எழுதிய வ.ரா. ஒருவரால்தான் உண்மையை விசாரித்துத் தெரிந்துகொண்டிருக்க முடியும். ஆனால் அவர் நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தில் ஈடுபட்டாரே தவிர அதை ஆராயவில்லை. அது உண்மையில் பாரதி எழுதிய கோயில் யானை என்ற நாடகத்தில் வரும் ஒரு நிகழ்ச்சிதான் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. கோயில் யானை நாடகம் கிடைத்த பிறகு அது நிகழ்ந்தது 1921 ஜனவரியா அல்லது ஜூன் 21ஆ என்று ஆராய்வது சரியல்ல. கோயில் யானை நாடகம் 1921 ஜனவரியில் வெளியாயிற்று என்பது இப்போது உறுதியாயிருக்கிறது. யானை தள்ளிய விஷயத்தை ஏன் பாரதி தன் எழுத்துகளில் குறிப்பிடவில்லை?
கோயில் யானையால் தள்ளப்பட்டு ஒரு தமிழ்க் கவிஞர் இறந்துபோனார் என்ற செய்தி வடநாட்டவரைக் கவர்ந்திருக்கிறது. மாடர்ன் ரிவ்யூ என்ற பத்திரிகைையின் 1956ம் வருட நவம்பர் இதழில் ‘தெருவில் ஓடிய ஒரு மதம் பிடித்த யானையிடமிருந்து ஒரு சிறுமியைக் காப்பாற்றிய பாரதி தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை. அவரை ஸ்தலத்திலேயே யானை கொன்றுவிட்டது’ என்று எழுதியது. கதையின் ஒரு பகுதியை மறுத்த பாரதியின் தம்பி விஸ்வநாதன், பாரதியின் இறப்போடு யானைக்குள்ள தொடர்பை மறுக்கவில்லை. எனவே இந்த யானை தாக்கிய விஷயம் பாரதியின் குடும்பத்தாரால் பேணப்பட்டது என்று சொல்லலாம்.
கோயில் யானை ஒருவனைத் தாக்கியது என்ற கற்பனை பாரதிக்குப் பார்த்தசாரதி கோவிலிலிருந்தே கிடைத்திருக்கக்கூடும் என்று சொல்லலாம். பார்த்தசாரதி கோயில் சிற்பங்கள் அந்தக் கோயில் அளவுக்குத் தொன்மையானவையா என்று சொல்ல முடியாது. இருந்தாலும் கோயிலில் காணப்படும் இரண்டு சிற்பங்கள் பாரதியின் மீது செல்வாக்குடையன என்று சொல்லலாம். ஒன்று, நரசிம்மர் சனனதியின் வலது பக்கத்தில் ஒரு தூணில் உள்ள ஒரு சிற்பம். அதில் ஒரு மனிதன் தன் மனைவியை இடது பக்கத்துத்தோளை அணைத்தவாறு இருக்கிறான். பாரதி தன் மனைவியுடன் நிற்கும் ஒரு போட்டோவைப் பாரதியின் போட்டோக்களுடன் பரிச்சயமுள்ளவர்கள் உடனே தெரிந்துகொண்டுவிடுவார்கள். மனைவியைத் தோள் பற்றி நிற்பது நவீனமல்ல என்பதுதான் இங்கே விளங்கிக்கொள்ள வேண்டியது.
மற்றொரு சிற்பம் யானையைப் பற்றியது. இது ஒரு தொடராக அமைந்திருப்பது. கவிதை இயலில் ஒரு கருத்தைப் பல செய்யுள்களால் அமைப்பதைக் குளகம் என்பார்கள். இந்தச் சிற்பங்கள் எல்லாம் சேர்ந்து யானை என்னென்ன செய்யும் என்று சொல்கிறது. இவற்றில் ஒன்று ஒரு யானை ஒரு வீரனை இடுப்பைப் பற்றித் தூக்கிக்கொண்டு செல்கிறது. தூக்கிச் செல்லப்பட்ட வீரன் ஆபத்தில் இருக்கிறான் என்பது தெளிவு. இப்படிக் கூறுவதன் மூலம் பழங்காலத்தில் பார்த்தசாரதி கோயிலுக்கு வருபவர்களுக்கு யானையால் – அல்லது பிற வனவிலங்குகளால் – ஆபத்து நேரலாம் என்று எச்சரிக்கப்படுகிறது.
இப்படிப்பட்ட எச்சரிக்கைகளைக் கலை இலக்கியங்கள் தொன்றுதொட்டுச் செய்துவருகின்றன. பாலை நிலத்தில் எத்தகைய ஆபத்துகள் உண்டு என்று பாலைத் திணைச் செய்யுள்கள் சொல்கின்றன. பரத்தமையைப் பற்றி எச்சரிக்கும் சிற்பங்களும் கோயில்களில் உண்டு. யானையால் எடுத்துச் செல்லப்படும் காட்சியைக் கூறும் கோயில் சிற்பம்தான் பாரதிக்குக் ‘கோயில் யானை’ என்ற நாடகம் எழுதத் தூண்டுதலாக இருந்திருக்கும் என்பதில் தவறில்லை. பாரதி கோயில் யானைக்குப் பழமோ வெல்லமோ கொடுக்கப் போவார் என்பதுதான் மற்றவர்களுக்குத் தெரிந்திருந்ததே தவிர அங்கே சிற்பங்களைத் தேடி நடந்திருக்கலாம் என்பது தெரியவில்லை. ஏனெனில் அது அவர்கள் மனதில் பதிந்திராது. சென்னையின் வேறு பகுதியில் சில காலம் வசித்துவிட்டுத் திருவல்லிக்கேணிக்கு வந்த புதிதில் கோயிலை முதல் தடவையாக சுற்றிப் பார்த்து ஆராய்ந்தபோது பாரதி இந்த சிற்பங்களைக் கண்டுபிடித்திருக்க வேண்டும். இந்த யானைச் சிற்பங்கள் – அரையடி நீளமுள்ளவை – தாயார் சன்னதிக்குள் அமைந்த மண்டபத்தில் அடிபாகத்தில் உள்ளன. இன்றும் உள்ளவை.
கட்டுரையின் தொடக்கத்தில் ஆண்டன் செகாவின் இறுதி ஊர்வலத்தைப் பற்றிக் குறிப்பிட்டேன். நூறு என்று தொடங்கி மூவாயிரம் ஐயாயிரம் என்று செகாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவவர்களின் எண்ணிக்கை பற்றி மாக்சிம் கார்க்கி எழுதியதையும் குறிப்பிட்டேன். பாரதியார் இறுதிச் சடங்கில் பதினான்கு பேர் கலந்துகொண்டார்கள் என்று தெரிகிறது. அவர்களது பெயர்கள்கூடத் தெரியும். 1920களில் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு மயானம் வரை ஊர்வலம் போகிற பண்பாடு கிடையாது. இறுதி நாளன்று பார்க்கப் போகிறவர்கள் பின்பற்ற வேண்டிய மரபுகள் உண்டு. அதுவும் பாரதி பிறந்த பிராமண வகுப்பில் நிறையவே உண்டு. எல்லோரும் வர வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஈமச் சடங்கு உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டும். தகனம் செய்ய உரிமை உடையவர் உடனே வர இயலவில்லை என்றால் இன்னொருவருக்கு அந்த உரிமை தரப்பட்டு அவர் சடங்குகளைச் செய்துவிடுவார். யார் வருகிறார்கள், எத்தனைப் பேர் வருகிறார்கள் என்பது முக்கியமில்லை. பாரதியின் சடலத்தை மொய்த்த ஈக்களின் எண்ணிக்கைகூட இல்லை ஊர்வலத்தில் கலந்துகொள்ள வந்தவர்களின் எண்ணிக்கை என்று சிலர் தற்காலத்தில் சொல்கிறார்கள். ஆனால் அது அறியாமை உடைய கூற்றாகும். பாரதி வாழ்ந்த வீடு ஒரு கோயிலின் முன்னே உள்ளது. கோயில் முன்னே அல்லது கோயிலின் பிரதான வீதிகளில் எங்காவது ஒருவர் இறந்தால் உடனே கோயில் வேலைகள் அனைத்தும் நிறுத்தப்படும். சடலம் எடுத்துச் செல்லப்பட்ட பிறகு கோயில் நிர்வாகம் தெருவுக்குச் சாந்தி செய்யும். பின்னரே பூசைகள் வழக்கம் போல் தொடரப்படும். எனவே பாரதி இறந்த பின் உரிய நேரத்தில் ஈமக்கிரியைகளைச் செய்திருப்பார்கள். ஈ மொய்க்க நேரம் இருந்திருக்காது.
பாரதி யானையால் எறியப்படவில்லை. அதனால் அவர் இறக்கவில்லை. அவர் எழுதிய நாடகத்தின் கதையையே அவர் தலையில் சுற்றிவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
பாரதி இறந்த அடுத்த ஆண்டிலிருந்தே தமிழகம் அவரது நினைவு நாளைக் கொண்டாடத் தொடங்கிவிட்டது. அவரது இறந்த நாளுக்குப் பதிலாகப் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என்று 1960ல் கோரிக்கை எழுப்பிய இளைஞர்களில் நானும் ஒருவன் என்பதை நான் மகிழ்வுடன் நினைவுகூர்கிறேன்.
ஞானக்கூத்தன்
10.4.2015
குறிப்புகள்
  1. “1921ல் எவ்வளவு பிரபலம் அடைய வேண்டுமோ அந்த அளவுக்கு அவருடைய கவிகள் பிரசித்தி அடையவில்லை.”
    – 17.9.21 இதழில் (சுதேசமித்திரன்) எஸ். சத்யமூர்த்தி
  2. 1930ல் எழுத வந்த பல தமிழ் எழுத்தாளர்கள் பாரதியைப் பிறகுதான் தெரிந்துகொண்டார்கள். பலர் தமிழில் எழுத முடியும் என்று பாரதியைக் கொண்டுதான் தெரிந்துகொண்டதாகக் கூறியிருக்கிறார்கள்.
  3. 1940ல்கூடப் பாரதியின் பெருமைகளைத் தமிழகம் உணரவில்லை என்று சொல்லியுள்ளார் வ.ரா.
  4. பாரதியார் சில காலமாக நோயாளியாக இருந்துவந்தார் என்கிறது 12.9.21 தேதியிட்ட The Hindu.
  5. ஒருவார காலமாக பாரதி தேகநோய் கண்டு திருவல்லிக்கேணியில் அசௌகரியமாக இருந்து திடீரென்று நேற்று இரவு 1 மணிக்கு இம் மண்ணுலகை விட்டு விண்ணுலகை அடைந்தார் என்கிறது 12.9.21 தேதியிட்ட சுதேசமித்திரன் செய்தி. யானை தள்ளியதைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.
  6. ரா.அ. பத்மநாபன் சித்திர பாரதியில் ‘செப்டம்பர் முதல் தேதி பாரதிக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. அதுவே ரத்தக் கடுப்பாக மாறியது’ என்று குறிப்பிடுகிறார். இதைப் பற்றி மித்திரன் குறிப்பிடவில்லை. திரு பத்மநாபன் 1981ல் சென்னை கார்ப்பரேஷன் சுகாதாரத் துறையிடமிருந்து பாரதிக்கு இறப்புச் சான்றிதழ் ஒன்றைப் பெற்றிருக்கிறார். அது பாரதியாரின் வர இருந்த நூற்றாண்டு விழாவை ஒட்டிப் பெறப்பட்டது போலும். அந்தச் சான்றிதழில் ‘அக்யூட் டிசண்ட்ரி டென் டேஸ்’ என்று இங்கிலீஷிலும் 10 நாள்களாகக் கடுமையான ரத்தக் கடுப்பு என்று மொழிபெயர்ப்பிலும் தரப்பட்டுள்ளது. இந்தச் சான்றிதழ் பாரதி இறந்த 60 ஆண்டுகளுக்குப் பின் பெறப்பட்டுள்ளது. ஆங்கிலப் படிவத்தில் இறப்பின் காரணம் சொல்லப்படவில்லை. பிரதியில் இறப்புக் காரணத்தைக் கூற முடியாது என்றும் கார்ப்பரேஷனால் சொல்லப்பட்டுள்ளது. பாரதி வயிற்றுப் போக்கால் இறந்தார் என்று இறப்புச் சான்றிதழ் கூறுவதாக வாசகர் எண்ணும்படி இப்பகுதி அமைந்துள்ளது.
உதவிய நூல்கள்
  1. Anton Chekov and His Times, Progress Publishers, Moscow. 1990. ப. 187, 188, 247
  2. மகாகவி பாரதியார் – வ.ரா., சந்தியா பதிப்பகம், சென்னை 83. பதிப்பு 2001.
  3. பாரதியின் இறுதிக் காலம் – ய. மணிகண்டன், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ். டிசம்பர் 2014
  4. சித்திரபாரதி – ரா.அ. பத்மநாபன்., காலச்சுவடு மற்றும் கடவு வெளியீடு, டிசம்பர் 2000
  5.  பாரதியார் கவிதைகள், விகடன் பிரசுரம், 2012.

Comments