Skip to main content

மறந்து போன பக்கங்கள்....

அழகியசிங்கர்


தி சோ வேணுகோபாலன் என்ற கவிஞரின் கோடை வயல் என்ற கவிதைத்தொகுதி எழுத்து பிரசுரமாக 1965ஆம் ஆண்டு பிரசுரமானது.  7.11.1929ல் பிறந்த வேணுகோபாலன் பற்றிய செய்தி எதுவும் தெரியவில்லை.  இப்படி காணாமல் போன படைப்பாளிகள் தமிழில் அதிகம்.  இவற்றை மறந்து போன பக்கங்கள் என்ற பெயரில் கொண்டு வர உத்தேசம்.  அவ்வப்போது கொஞ்சங் கொஞ்சமாக இவருடைய கவிதைகளைக் கொண்டு வர உள்ளேன். இதேபோல் இன்னும் பலரையும் கொண்டு வர உள்ளேன். 1959ல் எழுத்துவில் கவிதை எழுத ஆரம்பித்தார்.  கோடை வயல் என்ற தொகுப்பிற்கு வைதீஸ்வரன் என்ற கவிஞர் அட்டைப் படம் தந்துள்ளார்.


சின்னஞ் சிறிய திரி.
எண்ணெய் முழுகியது.
சூடு நெருப்பாச்சு.
காணும் ஒளியாச்சு.
கண்ணில் பிடிபடலாம்.
கையில் பிடிபடுமா?
தத்துவமா? தெரியாது.
போகட்டும்.

சின்னஞ்சிறு விட்டில்.
சன்னச் சிறகாலே
புயலைச் சூல்கொண்ட
காற்றைக் கிழித்தது.
எப்படி? தெரியாது.
போகட்டும்.

ஒளிமோகம் கொண்டது
களிகொண்ட விட்டில்.
காற்றைச் சிறகின்மேல்
ஏற்றிச் சுழன்றது.
வட்டம் குறுகியது
சொட்டாமல்த் திரிநுனியில்
நிற்கும் ஒளித்திவலை,
'மெய்' தீண்டும் காட்சி,
'சொய்' என்னும் விசும்பல்
ஒளியின் குரலா?
ஊனின் ஓலமா?
எரியாமல் திரியில்
கருகியது சிறகு.

என்னடா இதிலும்
தததுவ மயக்கா?
தெரியாது
போகட்டும்.
மீண்டும்  ஒரு வீட்டில..
தூண்டாத் திரியின் மேல்
பாய்ந்து விழுந்தது.
'சொய' என்னும் விசும்பல்
தேய்ந்து கருகியது.
'மை' யாச்சு சிறகு.
வெட்டவெளிவட்டம்
முட்டிச் சிதறிவிழும்
சுடர்த்தலை அழுத்திக்
கபந்தனாய் விட்டதா?
ஒளியெங்கே?
இருளில்
'மை'ச் சிறகில் கூடி
வட்டம் பெரிதாக்கிக்
கருகியது ஒளியும்.
இருள்கூட ஒளியா?
கண்ணில் பிடிபடலாம்.
கையில் பிடிபடுமா?
வெற்றியா? தோல்வியா?
அதுவும் யாருக்கு?
ஐயையோ இதிலும்
தத்துவப்  பொருளா?
தெரியாது
போகட்டும்.

தத்துவத் திரையை
ஒதுக்கிப் பார்த்தேன்
புரிந்தது கொஞ்சம்.
கொஞ்சமும் புரிந்ததா?
தெரியாது
போகட்டும்.

எழுத்தாளன் எங்கே?
கேட்கப் போனேன்.
நடப்பூர் தாண்டி
நினைவூர் கடந்தபின்
கற்பனைத் தோப்பிலே
கள்ளுக் கடையில்
கவிஞனைக் கண்டேன்.
போதைக் கிறக்கம்
எழுதிய கவிதை
எங்கே கிடைத்தது?
கேள்வி குழைந்தது.
பதில் ஒரு குமறல்.

இருட்குகை ஒன்றில்
இலககியப் பொருளில்
சோதனை நடந்ததாம்.
தட்டித் தடவினான்.
சிந்தனைக் கையில்
வந்ததை எடுத்து
வீசினான் வெளியில்.
இருளில் குமைந்த
பொருளை ஒளியில்
கண்டவன் திகைத்தான்
தத்துவம் எங்கே?
பொருளும் மெய்யா?
பயனும் உண்டா?
..........................

எனக்குத் தெரியவே
தெரியாது
கவிஞன் மதுவின்
அவதியில் இருப்பதால்
தெரியாது.



Comments