Skip to main content

நீங்களும் படிக்கலாம்....21

அபத்த உலகத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறாரா?



அழகியசிங்கர்




சமீபத்தில் நான் இரண்டு சிறுகதைத் தொகுதிகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  ஒன்று இத்தாலிய எழுத்தாளர் மொரவியா எழுதிய மதர் லவ் என்ற புத்தகம்.  இன்னொன்று தமிழவனின் நடனக்காரியான 34 வயது எழுத்தாளர்.  பெண்களின் உணர்வுகளைச் சித்திரிக்கும் ஆல்பெர்ட் மொரவியா ஒரு ஆண் எழுத்தாளர்.  அவருடைய புத்தகத்தில் காணப்படும் பெண்கள் பலவித இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.  அவற்றை துல்லியமாக வடித்துக் கொடுத்திருக்கிறார் மொரவியா.  இன்னும் இந்தப் புத்தகத்தை நான் முடிக்கவில்லை. படிக்க படிக்க இன்னும் இன்னும் படிக்க வேண்டுமென்று தோன்றுகிறது.  சமீபத்தில் வந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புத்தகங்களில் இதுவும் ஒன்று.  இப் புத்தகத்தை மாடியில் உள்ள வெயிலில் உலர்த்தி படிக்க ஆரம்பித்தேன்.  படிக்க படிக்க இந்தப் புத்தகத்தை கண்டு கொள்ளாமல் இத்தனை நாட்கள் ஏன் விட்டோம் என்று தோன்றியது.  இப்படி கண்டுகொள்ளமல் விடுப்பட்ட நூல்கள் அதிகமாகவே என்னிடம் இருப்பதாக தோன்றுகிறது.
ஏற்கனவே நான் தமிழவனின் நாவல்கள், கட்டுரைகள், சிறுகதைகளைப் படித்திருக்கிறேன்.  அவர் கவிதைகள் எழுதி இருக்கிறாரா என்பது எனக்குத் தெரியாது.  தமிழில் பின் நவீனத்துவ பாணியை அறிமுகப்படுத்திய பங்கு அவருக்குண்டு.  சோதனை ரீதியாக அவர் பல நாவல்களை எழுதி இருக்கிறார். தற்போது தீராநதியில் அவர் எழுதிக் கொண்டு வருகிற கட்டுரைகள் முக்கியத்துவம் உள்ள கட்டுரைகள். 
முன்பே காவ்யா வெளியீடாக வந்த தமிழவன் கதைகள் என்ற தொகுதி 1992-ல் வெளிவந்தது.  இத் தொகுதிக்குப் பிறகு 2015ல்தான் இவருடைய இன்னொரு சிறுகதைத்தொகுதியான நடனக்காரியான 35 வயது எழுத்தாளர் என்ற பெயரில் வெளி வருகிறது.  
2015 ஆம் ஆண்டில் வெளிவந்த சிறுகதைத் தொகுதிகளில் முக்கியமான தொகுதியாக இதைக் கருதுகிறேன். காலம் மாற மாற எழுத்துக்கள் மாறிக்கொண்டிருக்கின்றன.  பெரிய பத்திரிகைகள் சிறுகதைகளை துறந்து விடுகின்றன.  அதேபோல் சிறுகதைகளும் இறுகலாக இருந்தால் படிப்பவர்களும் காணாமல் போய்விடுவார்கள்.  தமிழவன் கதைகள் என்ற இவருடைய முந்தைய தொகுப்பு இதற்கு உதாரணம்.  அதனால் புதுமாதிரியான வடிவத்தை கதை எழுதுவதற்கு எடுத்துக்கொண்டிருக்கிறார்.  132 பக்கங்கள் கொண்ட இத் தொகுதியில் மொத்தம் 22 கதைகள் உள்ளன.  நிச்சயம் படிப்பவர்களை இக் கதைகள் வசீகரிக்காமல் இருக்காது.
ஹர்ஷவர்த்தனர் அறிவு என்ற கதை இந்தத் தொகுதியில் உள்ளது.  அது மொத்தமே ஒரு பக்கத்தில் முடிந்து விடுகிறது.  பேராசிரியர் ஹர்ஷவர்த்தனர் சாமான்யரைப் போல் வேடமிட்டு  அரண்மனையை விட்டு வெளியே வருகிறார்.  அறிவைத் தேடிப் பயணம் மேற்கொள்கிறார்.  அப்படிப் பயணம் மேற்கொள்ளும்போது அவர் பலரை சந்திக்கிறார்.  அந்தச் சந்திப்பைப் பற்றிய குறிப்புதான் இக்கதை.    மேலும் இவருடைய ஒவ்வொரு கதையாக எடுத்துப் படிக்க படிக்க வாசிக்கிற அலுப்பு இந்தத் தொகுதியில் ஏற்படுவதில்லை.  பலருடைய கதைத் தொகுதியில் காணப்படுவது இந்த வாசிப்பு அலுப்பு.  அதை உடைத்திருக்கிறது இந்தத் தொகுதி.  
நம்முடைய முந்தைய தலைமுறையைச் சேர்ந்த பலருடைய கதைத் தொகுதிகளில் வாசிப்பு அலுப்பு இருப்பதில்லை.  உதாரணமாக உமைச்சியின் காதல் என்ற றாலி கதையை இப்போதும் எடுத்துப் படிக்கலாம்.  வாசிப்பு அலுப்பே இருக்காது.  ஆனால் மௌனி கதையைப் படிக்கும்போது, வாசிப்பவரை சிறைப் பிடித்து விடுகின்றது எழுத்து.  இப்போதைய சிறுபத்திரிகைகளில் பக்கம் பக்கமாக வருகிற கதைகளைக் கூட என்னால் ரசிக்க முடியவில்லை.  எப்போது கதை முடியும் என்று அவசரம் அவசரமாகப் படிக்க வேண்டி உள்ளது.  பொது ஜன வாசிப்புப் பழக்கம் உள்ளவனுக்கு வாசிப்பு அலுப்பு ஏற்படுவதில்லை.  கதைகளை நகர்த்திச் செல்வதில் ஜன ரஞ்சக கதாசிரியர்கள் திறமையானவர்கள்.  ஆனால் ஒரு குறிக்கோளுடன் கதையை ஆரம்பித்து கதையை முடிப்பார்கள். ஜாலம் இருக்கும். ஆழம் இருக்காது.  
தீவிரமான இலக்கியப் பத்திரிகையில் கதையை வாசிக்க வருபவன், கதையைப் படிக்க படிக்க அவனுக்கு தலை சுற்ற ஆரம்பித்துவிடும்.  இதை தமிழவன் உடைத்திருக்கிறார்.  ஆரம்பத்தில் அதைச் செய்ய தவறி விட்டார் என்பதை தமிழவன் கதைகள் என்ற புத்தகத்தைப் படித்தால் புரியும். அது அந்தக காலத்தில் எழுதப்பட்ட கதைகள்.  
இத் தொகுதியில் உள்ள  கதைகளின் முக்கியத் தன்மை என்ன?  விபரம். அதை உடைத்திருக்கிறார்.  விவரணையில் நம் எழுத்தாளர்கள் குறிப்பாக சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் மாட்டிக்கொள்வதுபோல் தமிழவன் மாட்டிக்கொள்ளவில்லை.  எல்லாக் கதைகளிலுமிருந்து விவரணையைக் கழட்டி விடுகிறார். சிலர் சிலரை சந்திக்கிறார்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  இப்படியே போகிறது கதைகள். விவரங்களை உடைத்தவர்களில் நம் முன்னோடி அசோகமித்திரன்.  அவருடைய கதைகள் பெரும் பத்திரிகைகக்கும் சிறுபத்திரிகைக்கும் பாலமாக அமைந்திருக்கின்றன.  1958 ஆம் ஆண்டு மழை என்ற பெயரில் அசோகமித்திரன் ஒரு கதை எழுதி இருக்கிறார்.  அதை இன்றும் வாசிக்க முடியும்.   இத் தொகுதிகளில் உள்ள தமிழவனின் கதைகளில் எந்தக் கதையை எடுத்துப் படித்தாலும் இன்னும் இன்னும் படிக்க வேண்டுமென்கிற உணர்வை ஏற்படுத்தும். 
இத் தொகுப்பின் சிறப்பென்ன?  கதா பாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒன்றுக்குள் ஒன்று தலையிடாமல் பார்த்துக் கொள்வது..அதீத உணர்ச்சியை வெளிப்படுத்தாமல் இருப்பது, அனாவசிய விவரணையை அழிப்பது. அதேபோல் காலத்தையும் இடத்தையும் ஒழிப்பது இக் கதையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எந்தக் காலத்தில் இக் கதைகள் நடந்தன என்பதை நம்மால் படிக்கும்போது தெரிந்து கொள்ள முடியவில்லை. நடனக்காரியான 35 வயது எழுத்தாளர் என்ற கதையில் பிரகதி ரை என்ற எழுத்தாளர் 17 கதைகளை மட்டும் எழுதியிருக்கும் ஒரு எழுத்தாளரை சந்திக்கிறார்.  அவர் முன்பு ஒரு நடனக்காரியாக இருந்திருக்கிறார்.  பின் எழுத்தாளராக மாறி விட்டிருக்கிறார். மகிமா பவர் என்ற இன்னொரு எழுத்தாளரும் அவர்களுடன் இருக்கிறார். இவர்கள் மூவரும் பேசுவதுதான் கதை.  இப்படி பெரும்பாலான கதைகளில் ஒருவருடன் ஒருவர் பேசுவதாக அமைகிறது.  அப்படிப் பேசுவது கூட அசாதாரணமாக இருக்கிறது.  இதுமாதிரியான கதைகள் மூலம் தமிழவன் ஒருவித அபத்த உலகத்தை படம் பிடித்துக் காட்டுவது போல் தோன்றுகிறது.
கதைகளை எப்படியெல்லாம் எழுதலாம் என்பதற்கு இத் தொகுதி உதாரணமாகத் திகழ்கிறது.  வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகம்.

நடனக்காரியான 35 வயது எழுத்தாளர் - தமிழவன் - சிறுகதைகள் - வெளியீடு : புது எழுத்து, 2/205 அண்ணா நகர், காவேரிப்பட்டினம் - 635 112, கிருஷ்ணகிரி மாவடடம் -பக்கம் : 132 - விலை : ரூ.120 - தொலை பேசி : 98426 47101


Comments