Skip to main content

ஒரு அறிவிப்பு

அழகியசிங்கர்





தமிழில் வித்தியாசமான முறையில் விமர்சன மரபை உருவாக்கியவர் தமிழவன். ரசனை முறையில் படைப்பிலக்கியத்தை அணுகியவர் க நா சு. சி சு செல்லப்பாவோ விமர்சனத்திற்கு ஒரு அலசல் முறையை உருவாக்கியவர். க நா சுவைத் தொடர்ந்து வெங்கட்சாமிநாதனும், பிரமிளும் விமர்சனத்தை அணுக, சி சு செல்லப்பாவைத் தொடர்ந்து தமிழவன் விஞ்ஞானப் பூர்வமான விமர்சனத்தை முன் வைத்தார். புதியதாக உருவான பல இஸம்களை தமிழிலும் கொண்டு வந்தார். மற்ற மொழிகளில் தமிழவன் மாதிரி ஒரு படைப்பாளி இருந்திருந்தால் பெரிதும் கொண்டாடப்பட்டிருப்பார். அவரைத் தொடர்ந்து பலர் அவர் பாதையில் விமர்சனத்தை அணுகி உள்ளனர். இன்று வரை அந்த மாதிரியான விமர்சனத்தை எதிர்கொள்வது சற்று சிரமமானது.

விமர்சனம் மட்டுமல்லாமல் படைப்பிலக்கியத்திலும் தமிழவன் பங்கு முக்கியமானது. நாவல்கள், சிறுகதைகள் என்று பலவற்றை புதிய முறை எழுத்தில் முயற்சி செய்துள்ளார. ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் என்ற புதுவகை நாவல் ஒன்றை அவர் 1985 ஆம் ஆண்டில் முதன் முறையாக உருவாக்கி உள்ளார்.

தற்போது வந்துள்ள சிறுகதைத் தொகுப்பு நடனக்காரியான 35 வயது எழுத்தாளர் என்ற தொகுப்பு, முன்பு வெளிவந்த அவருடைய கதை முறையை முற்றாகத் துறந்து வெளிவந்திருக்கிறது.

வரும் 21ஆம் தேதி ஞாயிறு தமிழவன் குறித்து ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இக் கூட்டத்தை சிற்றேடும், நவீன விருட்சமும் ஏற்படுத்துகிறது. அதற்கான அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன். எல்லோரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.




Comments