Skip to main content

Posts

Showing posts from September, 2016

மனதுக்குப் பிடித்த கவிதைகள் 27

அழகியசிங்கர்   போகன் சங்கர் கவிதை முத்தம் செய்வதெப்படி எனக் கேட்ட முதிரா முலைப் பெண்ணே... முத்தத்தைப் பலவகைகளில் செய்யலாம் தெய்வத்தைத் தொழுவதைப் போல பக்தியுடன் சிலர் செய்வார் பழம் சாப்பிடுவது போல பசியுடன் சிலர் செய்வார் பட்டாம்பூச்சி பிடிப்பது போல் பயத்துடன் சிலர் செய்வார் முள்கரண்டியில் இறைச்சியைக் குத்துவது போல இன்னும் சிலர் செய்வார் நான் எப்போதும் முத்தத்தை யுத்தத்தைப் போலதான் செய்வேன் நன்றி : எரிவதும் அணைவதும் ஒன்றே - கவிதைகள் - போகன் சங்கர் - பக்கம் : 112 - விலை : ரூ.90 - சந்தியா பதிப்பகம், புதிய எண் : 77, 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக்நகர், சென்னை 600 083, தொலைபேசி : 044-24896979 

விருட்சம் ஏற்பாடு செய்துள்ள பத்து கேள்விகள் பத்து பதில்கள் - 8

அழகியசிங்கர் வழக்கம்போல எட்டாவது கூட்டம் இது.  என் நண்பர் பெ சு மணி நாங்கள் இருந்த போஸ்டல் காலனி முதல் தெருவின் எதிரிலுள்ள ராமகிருஷ்ணபுரம் 2வது தெருவில் வசித்து வருகிறார்.  ஒவ்வொரு முறையும் தெருவில் நடந்து செல்லும்போது அவரைச் சந்திப்பது வழக்கம். இப்படி ஒவ்வொரு விழாக்கிழமையும் பலரைச் சந்தித்து பேட்டி எடுக்க வேண்டுமென்பது அடியேனின் விருப்பம்.  இதை எத்தனைப் பேர்கள் ரசிப்பார்கள் என்பது தெரியாது.  இதை இன்னும் கொஞ்சம் முன்னதாகவே ஆரம்பித்திருக்க வேண்டும்.  இப்போதுதான் இது புரிய வருகிறது. https://www.youtube.com/watch?v=Wwzk5ADv8qs&authuser=0 https://www.youtube.com/watch? v=Wwzk5ADv8qs

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 26

அழகியசிங்கர்   தெரிதல் புரிதல் பிரம்மராஜன் நான் எழுதிக்கொண்டிருப்பதை எழுதிக்கொண்டிருக்கிறேன். எழுதிக்கொண்டிருக்கிறேன் என்பதை எழுதிக்கொண்டிருக்கிறேன். எழுதிக்கொண்டிருப்பதாக எழுதுவதை எழுதுகிறேன். எழுதுவதை எழுதுகிறேன் என்று எழுதிக்கொண்டிருப்பதை எழுதுகிறேன். எழுதுவதால் எழுதுகிறேன். தெரிகிறேன் என்பதால் பார்க்கிறாய் பார்ப்பவன் பார்க்கப்படுகிறான் தெரிகிறதா கேட்கப்படுபவன் கேள்வியாக தெரிபவன் தெரிதலாக புரிபவன் புரிதலாக பூப்பவன் புதிராக அடுக்கடுக்காய் அதிர்ச்சியாக சிந்திப்பவன் சிக்கலாக சிற்பி உளியாக ஓவியன் காணுதலாக சிக்கல் சிரமமாக சிரமம் சிந்தனையாக சுடர் சாம்பலாக சாம்பல் உன் எலும்பாக பாஸ்பரஸ் பகற்கனவாக பகற்கனவு பதியன் பூவாக பூத்தது புதிராக புரியாதாய் புதிய புத்தம் கவிதையாய் அடுக்கடுக்காய் அணூ அணுவாய் அலையில் அலையில் தழுவித் தழுவி கழுவிக் கரைந்த உடலாக கரைமீது கால். நன்றி : ஞாபகச்சிற்பம் - கவிதைகள் - பிரம்மராஜன் - பக் : 64 - முதல் பதிப்பு : ஜøன் 1988 - விலை ரூ.12 - தன்யா - பிரம்மா பதிப்பகம், பர்ன் வூயு, குன்னூர் தெரு, ஊட்டி 643 001 

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 25

அழகியசிங்கர்                       பெண்பாற் கூற்று சுகிர்தராணி வெகுதூரம் ஓடிய விலங்கொன்றின் உலர்நாவென தரையோடு வற்றிவிட்டது உறைகிணறு ஒற்றை உடலோடு உறங்குமிந்த இரவு உவப்பாக இல்லை என் பாதிப் புன்னகைக்குப் பின்னே சொல்லப்படாத கதையொன்று இருக்கிறது அவனை மிகவும் விரும்புகிறேன் சீராக நறுக்கப்படாத அவன் மீசையையும் என் கவிதைகளைச் சிலாகிக்கிறீர்கள் குழந்தைகள்மீது பெருவிருப்பம் எனக்கு ஆயினும் கருத்தரிக்க இயலாது கூந்தலை வெட்டிக் கொள்கிறேன் உதட்டில் ஊறும் முத்தங்களை அவ்வப்பொழுது உமிழ்ந்து விடுகிறேன் வேறென்ன செய்ய இறந்து போன அப்பாவைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது சிறுமிகளுக்கு மாலை நேர வகுப்பெடுக்கிறேன் கள்ளக்காதல் என்னும் சொல்லின் பின்னுள்ள வலி புரிகிறது இந்தக் கவிதையில் மர்மங்கள் எவையுமில்லை அகழ்ந்தெடுத்தல் புராதனச் சோதனை எவையும் வேண்டாம் வேண்டுமானால் என்னை ஒழுக்கங்கெட்டவள் என்று சொல்லிக் கொள்ளுங்கள் நன்றி : இப்படிக்கு ஏவாள் - கவிதைகள் - சுகிர்தராணி - விலை ரூ.75 - பக் : 72 - முதல் பதிப்பு : மே 2016 -  காலச்சுவடு பதிப்பகம், 669 கே பி சாலை, நாகர்கோவில் - போன்

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 24

அழகியசிங்கர்  தூர்  நா முத்துக்குமார் வேப்பம்பூ மிதக்கும் எங்கள் வீட்டுக் கிணற்றில் தூர் வாரும் உற்சவம் வருடத்திற்கொரு முறை விசேஷமாய் நடக்கும். ஆழ்நீருக்குள் அப்பா முங்க முங்க அதிசயங்கள் மேலே வரும். கொட்டாங்குச்சி, கோலி, கரண்டி, கட்டையோடு உள்விழுந்த துருப்பிடித்த ராட்டினம் வேலைக்காரி திருடியதாய் சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர், சேற்றிற்குள் கிளறி எடுப்போம் நிறையவே. சேறுடா...சேறுடாவெபன அம்மா அதட்டுவாள் என்றாலும் சந்தோஷம் கலைக்க யாருக்கு மனம் வரும்? பகை வென்ற வீரனாய் தலைநீர் சொட்டச் சொட்ட அப்பா மேல் வருவார். இன்றுவரை அம்மா கதவுகளின் பின்னிருந்துதான் அப்பாவோடு பேசுகிறாள். கடைசிவரை அப்பாவும் மறந்தே போனார் மனசுக்குள் தூரெடுக்க நன்றி :  பட்டம்பூச்சி விற்பவன் - கவிதைகள் - நா முத்துக்குமார் - முதல் பதிப்பு : டிசம்பர் 1997 - விற்பனை உரிமை : ப திருநாவுக்கரசு, 31/48  இராணி அண்ணா நகர், கலைஞர் நகர், சென்னை 600 078 - விலை ரூ.20.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் 23

அழகியசிங்கர்   நிலவும் நிலவுகளும் தேவதச்சன் எங்கள் ஊர் சிற்றூரும் அல்ல பேரூரும் அல்ல எங்களூரில் நான்கு கிணறுகள் மூன்று ஊருணிகள் ஒவ்வொரு இரவும் எங்களூரில் ஏழு நிலவுகள் வந்து அழகு கொள்ளை கொள்ளும் தண்ணீரில் கல் எறிந்து ஒரே நிலவை ஆயிரம் நிலவாய் ஆக்குவோம் நாங்கள் சிறார்கள். வெறுமனே பொறுமை காத்து ஆயிரம் நிலவுகள் ஒரே நிலவாய் கலப்பதை பார்ப்பார்கள் பெரியவர்கள் இப்போது ஊருணியை பஸ் நிலையங்கள் ஆக்கிவிட்டார்கள்.  மேலும் கிணற்றை மூடி குப்பைத்தொட்டியாக மாற்றி விட்டார்கள். இப்போது தனியான ஒரு நிலவு எங்கள் ஊர் மேலாகப் போய்க்கொண்டிருக்கிறது நன்றி : எப்போதும் விடிந்து கொண்டிருக்கிறது - கவிதைகள் - தேவதச்சன் - பக்கம் : 64 - விலை : ரூ. 40 - உயிர்மை பதிப்பகம், 11/29 சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை  600 018 - தொ பேசி : 91-44-24993448

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 22

அழகியசிங்கர்   நான் நகுலன் வழக்கம்போல் என் அறையில் நான் என்னுடன் இருந்தேன் கதவு தட்டுகிற மாதிரி கேட்டது üüயார்?ýý என்று கேட்டேன். üüநான்தான் சுசீலா கதவைத் திறýý என்றாள் எந்த சமயத்தில் எந்தக் கதவு திறக்கும் என்று யார்தான் சொல்ல முடியும்? நன்றி : நகுலன் கவிதைகள் - தொகுப்பும் பதிப்பும் : முனைவர் சு. சண்முகசுந்தரம் - காவ்யா பதிப்பகம், கோடம்பாக்கம், சென்னை - பதிப்பாண்டு : 2001 - விலை : ரூ.100 

பத்து கேள்விகள் பத்து பதில்கள் - 7

பத்து கேள்விகள் பத்து பதில்கள் - 7 அழகியசிங்கர்       நண்பர்களே, வணக்கம். பத்து கேள்விகள் பத்து பதில்கள் என்ற பகுதியில் ஞாநி யைப் பேட்டி கண்டுள்ளேன்.  இது என்னுடைய ஏழாவது பேட்டி.  மிகச் சிறிய சோனி டிஜிட்டல் காமெரா மூலம் இதை செய்துகொண்டு வருகிறேன். இன்னும் தொடர்ச்சியாக இதைத் தொடர விரும்புகிறேன்.  இதை நீங்கள் பார்த்து உங்கள் கருத்துகளையும் தெரிவிக்க வேண்டுகிறேன்.எழுத்தாளர்கள் மட்டுமின்றி மிகச் சாதாரண மனிதர்களையும் பேட்டி எடுக்க உள்ளேன்.  இதில் நான் இன்னும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்பதை நீங்கள் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். எனக்கு  ஞாநி யை பரீக்க்ஷா மூலம் தெரியும்.  இதற்கு முன்னால் அவர் கிருத்துவக் கல்லூரியில் படித்தவர்.  அவரை ஞாநியாகத் தெரியாத தருணத்தில் கல்லூரியில் சில நண்பர்களிடம், இனி கசடதபற வராது என்று சொல்லிக்கொண்டிருந்ததை நான் கேட்டிருக்கிறேன்.  பின் பரீக்ஷா ஏற்பாடு செய்த நாடகத்தில் நானும் நடித்திருக்கிறேன். அப்போது ஒரு வியாபார ரீதியில் சரியாக இயங்கத் தெரியாத ஒரு நாடகக் குழுவில் போய்ச் சேர்ந்து, அவர்கள் என்னை துரத்தி விட்டார்கள். அந்தத் தருணத்தில

சி சு செல்லப்பாவும் சுதந்திரதாகம் நாவலும்...

சி சு செல்லப்பாவும் சுதந்திரதாகம் நாவலும்... அழகியசிங்கர் சுதந்திரதாகம் என்ற மூன்று பாகங்கள் கொண்ட நாவலை கொண்டு வருவதற்காக பங்களூரிலிருந்து சி சு செல்லப்பா சென்னைக்கு மனைவியை அழைத்துக்கொண்டு வந்துவிட்டார்.  அவர் முன்பு இருந்த பிள்ளையார் கோயில் தெருவிலேயே அவர் குடி வந்து விட்டார்.  அவருடைய உறவினர் சங்கர சுப்பிரமணியன் அவர் வீட்டின் பக்கத்தில் குடியிருந்தார்.  சி சு செல்லப்பாவின் மனைவியின் மூத்த சகோதரியும் - சங்கர சுப்பிரமணியனின் தாயாரும் அங்கு இருந்தார்கள். சி சு செல்லப்பா தன் புத்தகம் கொண்டு வரும் ஆவலை கட்டுப்படுத்த முடியாமல் ஒரு இலக்கியச் சிந்தனை ஆண்டு விழாக் கூட்டத்தில் ஒவ்வொரு பதிப்பாளரையும் அணுகி தன்னுடைய மூன்று பாகங்கள் கொண்ட சுதந்திரதாகம் என்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகத்தைக் கொண்டு வர முடியுமா என்று கேட்டுக்கொண்டிருந்தார். அந்த ஆண்டு 1995ஆம் ஆண்டாக இருக்குமென்று நினைக்கிறேன்.  எந்தப் பதிப்பாளரும் சுதந்திர தாகம் புத்தகத்தைக் கொண்டு வரத் தயாராயில்லை.  காரணம் சி சு செல்லப்பாவின் எழுத்து. அவருக்கு விளக்கு பரிசு கொடுக்க முயற்சி செய்தபோது, அதன் மூலம் கிடைக்

எதையாவது சொல்லட்டுமா ......102

         அழகியசிங்கர் நேற்று நான் மயிலாடுதுறையில் இருந்தேன்.  நான் தங்கியிருக்கும் லால் பகதூர் வீதிக்குச் செல்லும் வழியில் ஏகப்பட்ட நாய்கள்.  ஒவ்வொன்றும் கத்திக்கொண்டிருந்தது.  எனக்கு நாய் என்றால் பிடிக்காது.  கடித்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் கூட உண்டு.  என்னை பைக்கில் அழைத்துக்கொண்டு வந்தவர், மயிலாடுதுறையில் இருக்கும் என் நண்பர் பிரபு.  அவரிடம் கேட்டேன்: "இந்த நாய்களை ஒன்றும் செய்ய முடியாதா?"  'முடியாது,' என்பதுபோல் தலை ஆட்டினார்.  இரவு நேரத்தில் தனியாக அந்தத் தெருவில் நடந்து வர முடியுமா என்பது சந்தேகம். சில மாதங்களுக்கு முன்பு என் உறவினர் ஒருவருக்கு அந்தப் பகுதியில்தான் ஒரு நாய் கடித்துவிட்டது.  பிரபுடன் வண்டியில் போனதால்தான் இப்படி ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது.   அந்த உறவினர் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மயிலாடுதுறைக்கே வரவில்லை என்று பிரபுவிடம் சொல்லி ஜோக் அடித்தேன்.   "மேனகா காந்தியால் பிராணிகள் வதை செய்யக்கூடாது என்று சட்டம் போட்டதால், நாய்களை யாரும் பிடித்துக்கொண்டு போக மாட்டார்,"  என்றார்  பிரபு பெருமிதத்தோடு.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 21

அழகியசிங்கர்   தூரத்து மலைகள் ஆனந்த் தூரத்து மலைகள் அருகில் நெருங்கும்போது பக்கத்து மரங்கள் விலகி வழிவிடுகின்றன பெருமிதம் கொள்கின்றன மலைகள் ஒருநாள் வானம் வந்து சூழ்ந்தணைத்துக்கொண்டபோது மரங்களும் மலைகளும் வெட்கிப்போய் ஓரம் புகுந்தன வானம் அவற்றைக் கூப்பிட்டு சேர்த்தணைத்துக்கொண்டது வானத்தின் அணைப்பில் சற்றும் வலிக்காமல் மலைகளும் மரங்களும் மிதந்து கொண்டிருக்கின்றன நன்றி : அளவில்லாத மலர் - கவிதைகள் - ஆனந்த் - விலை ரூ.65 - பக் : 86 - முதல் பதிப்பு : டிசம்பர் 2007 காலச்சுவடு பதிப்பகம், 669 கே பி சாலை, நாகர்கோவில் - போன் : 04652 - 278525

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 20

அழகியசிங்கர்   ஆயா எம் டி முத்துக்குமாரசாமி  ஆயாவின் பெயரை யாரும் கேட்டதில்லை குடும்பம் உண்டா விலாசம் என்ன வயது என்ன சொந்த ஊர் எது தினசரி எங்கிருந்து வருகிறாள் எங்கே போகிறாள் நோயுண்டா நொடியுண்டா எப்படி சளைக்காமல் வேலை செய்கிறாள் யாரும் கேட்பதில்லை சம்பளப்பணம் பேசியதோடு சரி இந்த ஆயா இல்லாவிட்டால் இன்னொரு ஆயா பேச்சில்லாமல் வேலையைப் பார்த்தோமா போனோமா என்றிருக்க வேண்டும் அவ்வளவுதான் என்றாலும் ஆயாவின் அரதவணைப்பை ஒளியை அறிவது போல நன்கு அறியும் உங்கள் குழந்தைகள் நன்றி : நீர் அளைதல் - கவிதைகள் - எம் டி முத்துக்குமாரசாமி - பக்கம் : 112 - விலை : ரூ.90 - முதற் பதிப்பு அக்டோபர் 2012 - வெளியீடு : நற்றிணை பதிப்பகம், ப எண் : 123 எ புதிய எண் 243 எ திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 5 தொலைபேசி : 9486177208 - 044 43587070

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 19

அழகியசிங்கர்   பற்று           ந ஜயபாஸ்கரன் குலுக்க நீட்டிய கையைப் பின்னால் இழுத்துக் கொள்ள மறந்து போயிற்று. சிறிது கண்ணீர் (கண்ணீர் என்பதே அசங்கிய வார்த்தை) நிறைய சொல் செலவான பின் தெரிந்தது நீட்டிய கையைப் பற்றிக் கொள்ள எதிரே கை ஒன்றும் இல்லை என்று. நீட்டிய கையை நட்டு விட்டுப் பயணப் பட்டேன் எதிர்த் திசையில் ஈரம் அற்ற இன்னொரு கையை எடுத்துக் கொண்டு நன்றி : அர்த்தநாரி அவன் அவள் - கவிதைகள் - ந ஜயபாஸ்கரன் - பக்கங்கள் : 143 - விலை ரூ.100 - முதல் பதிப்பு : டிசம்பர் 2011 உயிர் எழுத்து பதிப்பகம், 9 முதல் தளம், தீபம் வணிக வளாகம், கருமண்டபம், திருச்சி - 1 - தொலைபேசி : 0431 - 6523099 - 

பத்து கேள்விகள் பத்து பதிலகள்- கௌரி கிருபானந்தன்

பத்து கேள்விகள் பத்து பதில்கள் - 6

பத்து கேள்விகள் பத்து பதில்கள் - 6                                                                                                                                                15.09.2016 அழகியசிங்கர் மொழிபெயர்ப்புக்காக சாகித்திய அக்காதெமி பரிசுப் பெற்ற கௌரி கிருபானந்தனை பேட்டி எடுத்து பத்து கேள்விகள் பத்து பதில்கள் பகுதியில் சேர்த்து உள்ளேன்.  கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட புத்தகங்களை தெலுங்கிலிருந்து தமிழுக்குக் கொண்டு வந்துள்ளார். தமிழில் கு அழகிரிசாமி சிறுகதைத் தொகுதியை சாகித்திய அக்காதெமிக்காக தெலுங்கில் மொழிபெயர்த்துள்ளார்.  அதே போல் பிரபஞ்சனின் வானம் வசப்படும் என்ற நாவலையும் தெலுங்கில் மொழிபெயர்த்துள்ளார்.  அவருடைய சிறிய வீடியோ பேட்டி இதோ. https://www.youtube.com/watch? v=5KQL8IunxKU

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 18

அழகியசிங்கர்    எங்கள் ஜாதி கிருஷாங்கினி          மாத முதலில் அல்லது கடைசியில் இடைவிடாத லாரிகளின் ஓட்டம், காலியாக அல்லது தானிய மூட்டையுடன். அரசின் தானியக் கிடங்கு, அதன் அருகில் எங்கள் வீடு விடியற் கருக்கலில் ஆளரவமற்ற போதில் காக்கைகளும் குருவிகளும் தெருவில் தானியம் கொத்திப் பசியாறுகின்றன. நன்றி : கவிதைகள் கையெழுத்தில் - கவிதைகள் - கிருஷாங்கினி - விலை : ரூ.150 - பதிப்பாண்டு 2007 - பக்கம் : 143 - அளவு கால் கிரவுன் - வெளியீடு : சதுரம் பதிப்பகம், 34 சிட்லப்பாக்கம் 2வது பிரதான சாலை, தாம்பரம் சானடோரியம், சென்னை 600 047 - தொலைபேசி : 044 - 22231879 

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 17

அழகியசிங்கர்  முனியமரம் பாலா அந்த புளியமரத்தைக் கடந்துதான் எல்லோரும் செல்லவேண்டும் ஊருக்குள் உருண்டு திரண்டு நிற்கும் அந்தப் புளியமரம் ஒட்டுமொத்த ஊருக்கான பயத்தையும் உள்வைத்திருந்தது ஒத்தையாய் ஒருவரும் கடப்பதில்லை முனி இருப்பதாய் சொல்லும் அந்தப் புளியமரத்தை வாந்தி பேதி முதல் நல்லது கெட்டது வரை முனியோட வேலைதான் என நம்பிய ஊர் இரவு எட்டுமணிக்கும் சாமியாடியின் பேச்சுக்கும் அடங்கிபோகும் முனி விரட்டுதலும் மூலிகை வைத்தயமும் மூன்று தலைமுறையாய் வளர்க்கிறது சாமியாடியின் சந்ததியை வாக்கு கேட்டு வருவோரின் வசதியை பொருத்து வசூலிக்கப்படும் வகை வகையாய் சுருட்டு, சாராயம், கோழி என எல்லாவகை வஸ்த்துக்களும் ஒரு நாள் அடித்த அசுரக் காற்றில் அடியோடு சாய்ந்த முனியமரம் பெருந்திரள் கூட்ட பூசையோடு அகற்றப்பட்டது பிழைப்புப்போன விசனத்தில் ஒடுங்கிப்போன சாமியாடிக்கு பாடம் போட்டாள் சாமியாடி சம்சாரம் "அட கூறுகெட்ட மனுசா ஒத்தையா குத்தவைச்சு ஒக்காராம ஊருக்குள்ள போயி சொல்லு! புளியமரத்துல இருந்த முனி நேத்து வைச்ச புங்க செடியில் குடியேறிச்சுனு" அடுத்த பூசை ஆர

பாரதியார் நினைவு நாள் : செப்டம்பர் 11

தொலைந்துபோன பாரதியார் அழகியசிங்கர் நண்பரொருவர் பேச்சைக் கேட்டு எழுதிப்பார்த்தேன் பாரதியாரை துடிக்கும் மீசையுடன் என் முன்னால் நின்றார் பாரதியார் எங்கே ஒளிந்திருக்கிறீர் என் வரிகளில் என்று அவரைக் கேட்டேன் சிரித்தபடி மறைந்து விட்டார் போனில் படித்தபோது நண்பர் தலை ஆட்டி 'நன்று நன்று' என்றார் கொண்டு வருவார் துடிப்புடன் பாரதியார் பற்றி எழுதிய பலர் கவிதைகளையெல்லாம் சேர்த்தென்றால் கேட்டவுடன் திட்டத்திலிருந்து விலகி விட்டார் அப்போது எழுதிய அந்தக் கவிதையை எங்கே வைத்தேன் ஃபைல்களைப் புரட்டிப் பார்த்தாலும் கிட்டவில்லை பாரதி என் பாரதி நீண்ட நோட்டில் எழுதிப் பார்க்கும் கவிதைகள் பலவற்றை சேர்த்து வைக்கும் பழக்கமெனக்குண்டு இருந்தாலும் பாரதியாரைப் பற்றி நானெழுதிய கவிதையைக் காணவில்லை ஏனோ.. எங்கே ஒளிந்துகொண்டார்? தெரியவில்லை வாவென்றால் வருவாரா? தெரியவில்லை அவர் வரிகளிலிருந்து கயிறு பிடித்து இறங்கியிருக்கிறோம். வழிதெரியாமல் திகைத்த எங்களுக்கு வரங்கொடுத்து வரி தந்த மேதையவர் அவரை வைத்துப் படம் எடுக

மனதுக்குப் பிடித்த கவிதைகள் 16

அழகியசிங்கர்    வேஷம் க. நா. சு நான் அறிவாளி என்று வேஷம் போட்டபோது எல்லோரும் என்னை அறிவாளி என்றார்கள் நான், சோம்பேறியாக வேஷம் போட்டபோது எல்லோரும் என்னை சோம்பேறி என்றார்கள். நான் எழுதத் தெரியாதவன் மாதிரி வேஷம் போட்டபோது எல்லோரும், பாவம் அவனுக்கு எழுதவராது என்றார்கள். நான் பொய்யன் போல வேஷம் போட்டபோது அவர்கள் எல்லோரும் என்னைப் பொய்யன் என்றார்கள் நான் பணக்காரன் போல நடந்துகொண்டபோது அவர்கள் என்னைப் பணக்காரன் என்றார்கள். நான் எதையும் லக்ஷியம் பண்ணாதவன் மாதிரி வேஷம்                         போட்டபோது நான் எதையும் லக்ஷியம் பண்ணாதவன் என்றார்கள். நானும் அறியாமலே, மனவலி தாங்காது நான் முனகியபோது நான் துயருற்றவன் போல வேஷம் போடுகிறேன் என்றார்கள் நன்றி : க நா சு கவிதைகள் - கவிதைகள் -  பக்கம் : 176 - விலை ரூ.65 - சந்தியா பதிப்பகம், புதிய எண் : 77, 53வது தெரு,9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83    

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 15

அழகியசிங்கர்  எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்பவர்களுக்கு.... விக்ரமாதித்யன் எப்பொழுதும்போல இருக்கிறேன் எப்பொழுதும்போல என்றால்? எப்பொழுதும் போலத்தான் அதாவது பசித்தால் சாப்பிடுகிறேன் தூக்கம் வந்தால் தூங்குகிறேன் காசு கிடைக்கையில் குடிக்கிறேன் வெளியில் சொல்லமுடியாதபடி வாழ்கிறேன் ஏதாவது படிக்கத் தோன்றினால் படிக்கிறேன் எழுதத் தோன்றினால் எழுதுகிறேன் நண்பர்களைப் பார்க்க விரும்பினால் தேடிப்போய்ப் பார்க்கிறேன் அமைதியாக இருக்கலாமேயெனப் பட்டால் அமைதியாக இருக்கிறேன் ஊர்சுற்றும் எண்ணம் வந்தாக்கால் ஊர் சுற்றுகிறேன் கோயில்களுக்குப் போய்வரநினைத்தால் கோயில் கோயிலாகப் போய் வருகிறேன் இப்படி இப்படித்தான் எப்பொழுதும் போலவே வேறென்னவாவது செய்யத்தான் வழிவகை வாய்க்கால் உண்டா சொல்லுங்கள்

பத்து கேள்விகள் பத்து பதில்கள் - 5

             அழகியசிங்கர் இதுவரை நான்கு படைப்பாளிகளைப் பேட்டிக் கண்டு பத்து கேள்விகள் பத்து பதில்களை வீடியோவில் பிடித்து யூ ட்யூப்பில் இணைத்துள்ளேன்.  அசோகமித்திரன் தான் இதை ஆரம்பித்து வைத்தார்.  அவரைத் தொடர்ந்து எஸ் வைதீஸ்வரன், சாரு நிவேதிதா, ஞானக்கூத்தன் என்று எடுத்திருந்தேன்.  சமீபத்தில் சென்னை வந்திருந்த எழுத்தாளர் விட்டல்ராவை இது மாதிரி பேட்டிக் கண்டு எடுத்துள்ளேன்.  பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 14

அழகியசிங்கர் தலைப்பில்லாத கல்யாண்ஜி கவிதை கல்யாண்ஜி உங்களைப் பல தடவைகள் பார்த்திருக்கிறேன். தபால் பெட்டியில் கடிதம் இடுபவராக ஆதார் அட்டை வரிகையில் நிற்பவராக மீன் வியாபாரியிடம் சிரித்துப் பேசுபவராக, மழையில் வாகனம் ஓட்டிச் செல்பவராக, கண்மருத்துவ மனையில் சோதிக்கப் படுபவராக, மரணவீட்டில் நாற்காலியில் குனிந்திருப்பவராக, புதிய சுவரொட்டியை ஆர்வமாக வாசிப்பவராக, கீழே விழுந்த கைக்குட்டையை எடுத்துக் கொடுப்பவராக, தலைக் கவசம் அணியாமல் காவலரிடம் கெஞ்சுபவராக, பலூன் விற்பவரிடம் நீல பலூன் வாங்குபவராக... இவ்வளவு இடங்களில் பார்த்திருக்கிற என்னை எங்குமே பார்க்காதது போல் உங்களால் போக முடிவது எப்படி நன்றி : மூன்றாவது முள் - கவிதைகள் - கல்யாண்ஜி - பக்கம் : 64 - விலை ரூ.55 - சந்தியா பதிப்பகம், புதிய எண் : 77, 53வது தெரு,9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83    - PHONE : 044 - 24896979

நவீன விருட்சம் 100வது இதழும் நானும்...

. அழகியசிங்கர் நவீன விருட்சம் 100வது இதழைத் தயாரித்துக் கொண்டிருக்கிறேன்.  இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் இதழ் வெளிவந்துவிடும்.  மொத்தம் 250 பக்கங்களுக்கு மேல்.  இதுதான் முதல் முறை நான் அதிகப் பக்கங்களுடன் நவீன விருட்சம் இதழைத் தயாரிப்பது.  ஏகப்பட்ட கவிதைகள், ஏகப்பட்ட கதைகள், கட்டுரைகள் என்று இதழ் ரொம்பி வழிகிறது.  இந்த முறை எனக்கு உதவி செய்ய நண்பர்கள் வட்டமும் சேர்ந்துள்ளது.    100வது இதழுக்காக மயிலாடுதுறையைச் சேர்ந்த பிரபு அனுப்பிய கவிதையை உங்களுக்குப் படிக்க அளிக்கிறேன். புத்தகம் -------------- பலர் உள்ள ஒரு வீட்டில் பிரியும் தாள் திரளாய் சஞ்சிகையாய் காலிகோ பைண்டாய் பேப்பர் பேக்காய் பேதமாகி பிரிந்து ஒற்றைச்சொல் அடையாளப்படுத்தலாய் ஆனது புத்தகம் மொழி படியா மழலைக்கு பிம்பப் பெருவெளியாய் சிறார்க்கு சாதனையாய் வெல்லும் சவாலாய் மங்கையர்க்கு குறிப்புகளின் சமையலாய் முதியோர்க்கு கதியாய் தன்னிருப்பை தானுணர்ந்தது புத்தகம் ரசங்கள் ஒன்பதும் வாசகர் உணர்ந்தும் வாசித்து தவழும் குழவி ஸ்

பார்வையாளராக இருத்தல்

ஸ்ரீநிஸகர்கதத்தா மஹாராஜ்  பார்வையாளராக இருத்தல்                                                                                                             தமிழில்  : அழகியசிங்கர் கேள்விகேட்பவர் :  நான் முழுக்க ஆசைகளுடன் இருப்பவன்.  எப்படி நான் விரும்புவதைப் பெற முடியும்? மஹாராஜ் : நீங்கள் விரும்புவதைப்பெற தகுதியுடையவரா?  ஏதோ வகையில் நீங்கள் விரும்புவதைப்பெற நீங்கள் உழைக்க வேண்டும்.  உங்களுடைய சக்தியைச் செலவிடவேண்டும்.  பின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். கே.கே : எங்கிருந்து அந்தச் சக்தியைப் பெறுவது? மஹா : நம்முடைய ஆசையே நம் சக்தி. கே.கே :  அப்படியென்றால் ஏன் எல்லா ஆசைகளும் நிறைவேறுவதில்லை. மஹா : அது நிறைவேறும்படியாக கடைசிவரை வரும்படி வலிமை மிக்கதாக இருக்காது.. கே.கே :  ஆமாம்.  அதுதான் என்னுடைய பிரச்சினை.  சிலவற்றை விரும்புகிறேன்.  அதை நிறைவேற்றப் போகும்போது சோம்பேறியாக இருக்கிறேன். மஹா : உங்களுடைய ஆசை தெளிவாகவும் வலிமையாகவும் இல்லாவிட்டால், அது எந்த உருவத்திற்கும் வராது.  கூடவே, உன் ஆசை உன்னுடையதாக இருக்கும் பட்சத்தில் அதாவது உன் சந்தோஷத்திற்காகவென்றால் அது க

மனதுக்குப் பிடித்த கவிதைகள் 13

அழகியசிங்கர்         அரும்புகள் ராமலக்ஷ்மி என்றைக்கு எப்போது வருமென எப்படியோ தெரிந்து வைத்திருக்கின்றன அத்தனைக் குஞசு மீன்களும் அன்னையருக்குத் தெரியாமல் நடுநிசியில் நழுவிக் குளம் நடுவே குழுமிக் காத்திருக்க தொட்டுப் பிடித்து விளையாட மெல்ல மிதந்து உள்ளே வருகிறது பிள்ளைப் பிறை நிலா. நன்றி : இலைகள் பழுக்காத உலகம் - ராமலக்ஷ்மி - கவிதைகள் - விலை : ரூ.80 - முதல் பதிப்பு : ஜனவரி 2014 - வெளியீடு : அகநாழிகை பதிப்பகம், எண் 33, மண்டபம் தெரு, மதுராந்தகம் 603 306 - தொலைபேசி : 999 454 1010 

மனதுக்குப் பிடித்த கவிதைகள் 12

அழகியசிங்கர்  முதல் முத்தம் சுஜாதா செல்வராஜ் அது அத்தனை நேர்த்தியாக இருக்கவில்லை முன்னறிவிப்பின்றி நிகழ்ந்து முடிந்த முயற்சி மீனை கவ்விக்கொண்டு பறக்கும் பறவையின் துரிதக்கணம் அது கன்னத்தின் இதழ் சித்திரம் மட்டுமே அது முத்தம் நிகழ்ந்த இடமென்று அறிவித்துக்கொண்டிருந்தது நினைவைக் கலைத்துக் கலைத்து அடுக்கிப்பார்க்கிறேன் ஒரு முழு முத்தக்காட்சியை கண்டுணரவே முடியவில்லை ஆனால் அதிர்வு அடங்கா நரம்புகளும் கொதித்து ஓடும் குருதியும் சொல்லும் இது போன்றதொரு முத்தம் இனி சாத்தியமே இல்லை என்று நன்றி : காலங்களைக் கடந்து வருபவன் - சுஜாதா செல்வராஜ் - கவிதைகள் - விலை : ரூ.90 - முதல் பதிப்பு : ஆகஸ்ட் 2014 - வெளியீடு : புது எழுத்து,  2/205 அண்ணா நகர். காவேரிப்பட்டினம் 635 112 தொலை பேசி : 9042158667