Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 15


அழகியசிங்கர் 

எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்பவர்களுக்கு....

விக்ரமாதித்யன்



எப்பொழுதும்போல
இருக்கிறேன்

எப்பொழுதும்போல
என்றால்?

எப்பொழுதும்
போலத்தான்

அதாவது
பசித்தால் சாப்பிடுகிறேன்

தூக்கம் வந்தால்
தூங்குகிறேன்

காசு கிடைக்கையில்
குடிக்கிறேன்

வெளியில் சொல்லமுடியாதபடி
வாழ்கிறேன்

ஏதாவது படிக்கத் தோன்றினால்
படிக்கிறேன்

எழுதத் தோன்றினால்
எழுதுகிறேன்

நண்பர்களைப் பார்க்க விரும்பினால்
தேடிப்போய்ப் பார்க்கிறேன்
அமைதியாக இருக்கலாமேயெனப் பட்டால்
அமைதியாக இருக்கிறேன்

ஊர்சுற்றும் எண்ணம் வந்தாக்கால்
ஊர் சுற்றுகிறேன்

கோயில்களுக்குப் போய்வரநினைத்தால்
கோயில் கோயிலாகப் போய் வருகிறேன்

இப்படி இப்படித்தான்
எப்பொழுதும் போலவே

வேறென்னவாவது செய்யத்தான்
வழிவகை வாய்க்கால் உண்டா சொல்லுங்கள்






Comments