Skip to main content

நீங்களும் படிக்கலாம்....23


அழகியசிங்கர் 


  கோட்பாடு ரீதியாக ஒரு புத்தகத்தை அணுகுவது எப்படி?




எம் டி முத்துக்குமாரசாமி எழுதியுள்ள 'நிலவொளி எனும் இரசசிய துணை என்ற கட்டுரைகளும் கட்டுரைகள் போலச் சிலவும்' என்ற புத்தகத்தைப் படித்தேன்.  முன்னுரையில் 'இலக்கியம் பெரும்பாலும் பிரக்ஞையின் கரை உடையும் தருணங்களையே வாசக அனுபவமாக்குகிறது என இலக்கியப் பிரதி பற்றி எனக்கொரு கருத்து உண்டு' என்று  குறிப்பிடுகிறார் எம் டி எம்.   இதை கடந்த முப்பது வருட இலக்கியக் கோட்பாட்டு வாசிப்புகளிலிருந்து அவர் அணுக்கமாகப்  பெற்ற பார்வையாகும் என்கிறார்.  இதைச் சாதாரண வாசகனே அவன் படிப்பனுவத்திலிருந்து உணர முடியாதா?

இத் தொகுப்பில் உள்ள கட்டுரை ஒன்றில் சுப்பிரமணிய பாரதியார் மகா கவியே என்பதை நிரூபிக்கிறார் எம் டி எம்.  இக் கருத்தை ஜெயமோகனுக்கு பதிலாக தெரிவிக்கிறார்.   அப்படி சொல்லும்போது பாரதியார் கவிதைகளில் பிரஞ்ஞையின் கரை உடையும் தருணங்கள் வாசக அனுபவமாக எளிதில் வசப்படுகின்றன என்கிறார். பாரதியார் குறித்து அவர் கூறும் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.    

மொழியியல், இலக்கிய விமர்சனம், மனோதத்துவம், பெண்ணியம் ஆகிய சிந்தனைகளை முற்றிலும் புதியதாக மாற்றுகிறார் ஜøலியோ கிறிஸ்தவா. மேலும், üபெண்ணிய எழுத்தைப் பற்றி குறிப்பிடும்போது உடலுறுப்புகளை எழுதுவது உடல் உந்துதல்களை எழுதுவது ஆகாதுý என்கிறார் கிறிஸ்தவா.  மனிதனுக்கும் மொழிக்குமான எல்லா உறவுகளிலும் தன்னிலை மற்றவையின் ஊடாட்டம் நிகழ்வதைக் கவிûதையை முன்னிறுத்தி துல்லியமாக எடுத்துரைக்கிறார் கிறிஸ்தவா.  கிருஸ்தவாவைப் பற்றி விவரித்துக்கொண்டே போகிறார் எம்டிஎம்.  படிக்க படிக்க புதிய சிந்தனையை உருவாக்குகிறது. கிறிஸ்தவா புத்தகங்களைத் தேடிப் படிக்கத் தூண்டுகிறது.

'கற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு,' என்ற கட்டுரையில் பிரம்மராஜனின் கவிதைகளைத் தொடர்ந்து பயில்வதால் கிடைக்கும் வாசக அக லயம் அபூர்வமானது என்று குறிப்பிடுகிறார்.  

புனைவுகளாலும் எதிர் புனைவுகளாலும் மட்டுமே ஆளப்பட்ட ஈழத்துத் தமிழ்ப் போர்ச் சூழலும் போருக்குப் பின் வாய்த்த சூழலும் றியாஸ் குராணாவுக்கு பிரமிளின் கவிதையில் உள்ள இறகை விடுத்து பறவையைக் கவனிக்கும் ஆற்றலைத் தந்துள்ளது.

இது அதிகம் பாவிக்கப்பட்ட பறவை
இன்னும் பழுதடைந்துவிடாமல்  என்று கவிதை போகிறது.

பொதுவாக புனைகதையாளர்களையும் தத்துவாதிகளையும் சரித்திர ஆசிரியர்களையும் அரசியல்வாதிகளையும் விட கவிஞர்களையும் அவர்களின் கவிக் குரல்களையும் நம்பலாம் என்கிறார் முத்துக்குமாரசுவாமி.  இந்தக் கருத்துக்கு நானும் உடன் படுகிறேன்.

காலவழுவமைதி, சினிமாச்சோழர், மஹ்ஹான் காந்தி மஹ்ஹான், ஆகஸ்ட் 15 போன்ற ஞானக்கூத்தன் கவிதைகள் நுட்பமாக நவீனமான எதிர்ப்புக் கவிதையின் வடிவத்தைக் கட்டமைத்தவை என்கிறார்.  பிரமிளின் அரசியல் பிரக்ஞை விழிப்பு கண்டது 1980 களில்தான் என்கிறார்.  

எம்டிஎம் குறிப்பிட்ட சில கருத்துக்களை மேலும் இங்கே தெரிவிக்க விரும்புகிறேன். 

- நகுலனில் நான் - நீ உரையாடல் களன் பெரும்பாலும் சமத்துவமுடையதாக இருக்கிறது.
- ஆத்மநாம் கவிதை தன்னிருப்பை முழுமையாக நிராகரிக்கிற தன்மை கொண்டது.
- சி மணி கவிதையில் வெளியே செல்லமுடியாமல் மாட்டிக்கொள்ளும் தன்னிலையை அவதானிக்கிறது.

பசுவய்யாவின் கவிதையிலோ நீ என்ற பிறன்மை முழுமையான கொடூரமாகி, நரகமாகிவிடுவதால் அதை எதிர்த்துப் போராடி தன்னை நிலை நிறுததுகிறது என்கிறார் எம்டிஎம்.  உதாரணமாக சவால் என்ற பசுவய்யாவின் கவிதையைக் குறிப்பிடுகிறார்.

போர்ஹெசின் கவிதைகளை முன் வைத்து எம்டிஎம் கூறுபவை : 'மனம் தன் போக்கில் அசைபோட்டுக் கொண்டிருக்கும்போதே போர்ஹெஸ்ஸின் கவிதைகள் நினைவுக்கு வந்தன .'

படிக்கும்போது வெகு சாதாரணமாகத் தோன்றக்கூடிய போர்ஹெஸ்ஸின் கவிதைகள் அனுபவம் - அகம் - வரலாறு - பிரபஞ்சம் என்ற தொடர்பை வெளிப்டுத்தி மொழி போதாதிருப்பதைப் பல இடங்களில் சுய சுட்டுதலாகக் கொண்டிருக்கின்றன.  இதற்கு உதாரணமாக பல கவிதைகளைக் குறிப்பிடுகிறார்

போர்ஹெசின் கவிதைகளை கடந்த 25 வருடங்களாக வாசிக்கிறவர் எம்டிஎம்.  மற்ற கவிஞர்களின் கவிதைளை விட அதிகமாக வாசித்திருப்பது போர்ஹெயின் கவிதைகள் என்கிறார்.  எம்டிஎம் போர்ஹெயின் கவிதைகளை பற்றி குறிப்பிடும்போது, அவருடைய தந்தையைப் பற்றி ஒரு குறிப்பும் கொடுக்கிறார்.  அவர் தந்தைக்கு ப்ரௌனிங்க் என்ற கவிஞரின் கவிதைகள் பிடிக்குமாம்.  போர்ஹெஸ÷க்குப் பிடித்த கவிஞர்களில் ப்ரௌனிங்கும் டென்னிசனும் உண்டு. உற்சாகமாகக் கூறி அப்பாவின் ரகசிய வாசிப்பு உலகத்தைத் திறந்து வைக்கிறார் எம்டிஎம்.  

மௌனிக்கும் போர்ஹெஸ÷க்கும் உள்ள பல ஒற்றுமைகளைப் பற்றி யாரும் எழுதியிருக்கிறார்களா என்பதை தேடிப் பார்க்கிறார் எம்டிஎம்.  தன் அடையாளம், பிறன்மை என்பதன் விளையாட்டைத் தன் கலையின் மையமான சரடாக மௌனியிடமும், போர்ஹெஸ÷டமும் காண்பதாக குறிப்பிடுகிறார்.  நான் மௌனியை மட்டும் படித்திருக்கிறேன்.  போர்ஹேûஸ அவ்வளவாய் படித்ததில்லை.  ஆதனால் எம்டிஎம் இந்தக் கட்டுரையைப் படித்தப்பிறகு போர்ஹெஸ் எழுதிய எழுத்துக்களையும் படிக்க விரும்புகிறேன். எம்டிஎம்மின் இந்தக் கருத்து எவ்வளவு தூரம் உண்மையானது என்று அறியவும் விரும்புகிறேன்.

அதேபோல் நவீன கவிதைகள் என்பது தான் - பிறன்மை என்பற்றிற்கிடையேயான உரையாடலே என்றொரு இலக்கிய கோட்பாடு பிரசித்தம் என்கிறார்.

தமிழ் இலக்கிய வரலாற்றிலேயே தன் அகம் நோக்கிப் பேசுகின்ற கவித்துவக் குரல் பாரதியால் கட்டமைக்கப்படுகின்றது என்கிறார்.  பாரதியார் கவிதைகள் இன்னும் நவீன வடிவமாக இருக்கின்றன என்று பல உதாரணங்கள் மூலம் நிரூபிக்கிறார்.

'இரசனை விமர்சனம் என்பது சந்தைப் பொருளாதாரத்தின் அரசியலை அப்படியே இலக்கியத்திற்குள் கொண்டு வருகிற விமர்சன முறையாகும்' என்று சாடுகிறாரர் எம்டிஎம்.  இதைத்தான் என்னால்  ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எப்படி என்று விவரமாக சொல்ல வேண்டும்.  பெரும்பாலோர் ரசனையின் அடிப்படையில்தான் விமர்சனம் செய்வார்கள். இன்றைய தமிழ் சூழலில் யாரும் ஒரு புத்தகத்தைப் படிக்கவே தயாராக இல்லை.  அப்படிப் படித்தாலும் அது குறித்து எதுவும் எழுதத் தயாராய் இல்லை.  அப்படியொரு சூழலில்  முதலில் விமர்சனம் செய்வதை தமிழில் ரசனை மூலமாக ஆரம்பித்து வைத்தவர் க நா சு.  எளிதாக எல்லோராலும் ஏற்றுக்கொள்கிற முறையும் இதுதான்.  ஆனால் எம் டி எம் இப்படி சொல்கிறார் : அவர் சார்ந்து இருக்கிற விமர்சன முறை பின்னை காலனிய, பின் நவீனத்துவ முறை என்கிறார். இந்த மாற்று விமர்சன முறையை கையாளுபவர்கள் பலர் ஒரே மாதிரியாக இதை அணுகுவதாக எனக்குத் தெரியவில்லை.  

காஃப்கா தன் தந்தைக்கு எழுதிய கடிதம் என்ற கட்டுரையில், தமிழில் சுந்தர ராமசாமிக்குக் காப்ஃகாவின் படைப்புகளின் பெரிய பிரமிப்பு இருப்பதாக குறிப்பிடுகிறார்.
  
ஏனெனில் தந்ûதையுடனான மகனின் உறவு என்பது பௌதிக தந்தையுடனான உறவு மட்டுமல்ல.  அது  மரபு, அரசு, குரு, அதிகார பீடம், விதி, தேசம், சட்டம் ஆகியவற்றோடு ஒருவன் கொள்கிற உறவின் தன்மையையும் சொல்லக்கூடியது என்கிறார்.  

  கோபோ அபேயை ஜப்பானிய இலக்கியத்தில் காஃப்கா, பெக்கெட், ஐயனஸ்கோ ஆகிய எழுத்தாளர்களோடு ஒப்பிடப்பட்டு விவாதிக்கப்படுபவர் என்கிறார்.  

சூஃபி இசையைப் பற்றி குறிப்பிடும்போது ராஜஸ்தானின் புகழ் பெற்ற, மறைந்த நாட்டுப்புறவியல் அறிஞர் பதம்பூஷண் கோமல் கோத்தாரியைப் பற்றி விவரிக்கிறார்.  அவருடன் சூஃபி இசையைச் சேகரிக்க பலமுறை பாலைவன கிராமங்களில் அலைந்த அனுபவத்தை படிக்க படிக்க நாமும் அந்த அனுபவத்தை உணர்வதுபோல் உணரச் செய்கிறார.  

ஒரு கதையைப்போல் சில கட்டுரைகளை எம்டிஎம் விவரித்துக் கொண்டு போகிறார்.  அதில் ஒன்று உஸ்தாத் பில்மிலலாஹ் கான் என்ற கட்டுரை.  பத்ரி என்ற நண்பர் மூலம் உஸ்தாத்தைப் பார்த்துப் பேசுகிற நிகழ்ச்சியை விவரிக்கும்போது அக் கட்டுரை படிப்பவரையும் பரவசப்படுத்தத் தவறவில்லை.   

'ஒரு ராகத்தை ஒரு உணர்வை உணர்ச்சியை இந்துஸ்தானி இசைக் கலைஞன் அடையாளம் காண்கிறான்.  அந்த உணர்வின் எல்லைகளைப் பரிசோதிக்கிறான்.  அதன் நுட்பங்களை வடிவாக்குகிறான், சக மனிதனிடம் பகிர்ந்து கொள்கிறான் அவனுக்கும் அந்த உணர்வும் தேடலும் அர்த்தமாகிறதா என்று கவனித்துக் கவனித்து மேலே போகிறான்.' என்று எம்டிஎம் விவிரித்துக்கொண்டே போகும்போது, வேற ஒரு பார்வையில் இந்துஸ்தான் இசையை ரசிக்க வேண்டுமென்ற உணர்வை ஏற்படுத்தத் தவறவில்லை.   

அஞ்சலி  என்ற தலைப்பில் பாடகர் பரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் பற்றி குறிப்பிடுகிறார்.  புதிய பார்வையில் எழுதிய எம்டிஎம்மின் கதையான பத்மநாபனின் கூடு குறித்து ஒன்றை குறிப்பிடுகிறார்.  அந்தக் கதை பிரசுரமான தினத்தில்தான் ஸ்ரீனிவாஸ்  டிரைவ் இன்னில் சந்திக்கிறார்.  மூளை வளர்ச்சி குன்றிய ஒருவன் பிரமாதமான பாடல் வரிகளை சொல்வது பற்றிய கதை அது.  எங்கே உன் கதாபாத்திரம் சொல்லும் நல்ல வரி ஒன்றைச் சொல் பார்க்கலாம் என்கிறார் ஸ்ரீனிவாஸ் எம்டிஎம்மைப் பார்த்து.   'என் ஆத்மாவைக் கரைத்து உன் விழிகளுக்கு அஞ்சன மை தீட்டவா?' என்ற வரியை வாசித்துக் காட்டுகிறார் எம்டிஎம்.  ஸ்ரீனிவாஸ் புன்னகைத்தபடி அந்த வரியை மெதுவாக வாசித்துக் காட்டினாராம்.  பத்மநாபனின் கூடு கதைப் பிரதி கிடைக்குமென்றால் அதை ஸ்ரீனிவாஸ÷ற்கு மனப்பூர்வமாக சமர்ப்பணம் செய்வதாக உணர்ச்சிவசப்பட்டு  சொல்கிறார் எம்டிஎம்.  இத் தொகுதியில் இரண்டு தலயாத்திரைகள் பற்றியும், பாகேஸ்ரீராகம் பற்றியும், எம்டிஎம்மின் வாழ்க்கை அனுபவங்களைப் பற்றியும் சுவாரசியமாக சொல்லிக்கொண்டே போகிறார். 

இப் புத்தகத்தைப் படிக்கும்போது இரண்டு விதமாக நான் உணர்கிறேன்.  ஒன்று  எம்டிஎம்மின் தனிப்பட்ட வாழ்வியல் அனுபவம்.  இந்தப் பகுதியை அவர் பல சிறு கதைகளாகவோ நீண்ட நாவலாகவோ எழுதியிருக்கலாம்.  ஆனால் அவர் சுய சரிதமாக எழுதி உள்ளார். இன்னொரு பகுதியில் அவர் பல புத்தகங்களைப் படித்த அனுபவத்தையும், பல எழுத்தாளர்கள் பற்றிய கூற்றையும் விவரித்துக்கொண்டு போகிறார்.   கோட்பாட்டு முறையில் இப்புத்தகத்தை அணுக எனக்குத் தெரியவில்லை. ஆனால் எல்லோரும் விரும்பி வாசிக்கக் கூடிய புத்தகம் இது என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
நிலவொளி எனும் இரகசிய துணை - கட்டுரைகளும் கட்டுரைகள் போலச் சிலவும் - எம் டி முத்துக்குமாரசாமி - பக்கங்கள் : 263 - பதிப்பு : 2014 - விலை : ரூ.200 - வெளியீடு : அடையாளம், 1205/1 கருப்பூர் சாலை, புத்தாநத்தம் 621310இ திருச்சி மாவட்டம், தொலைபேசி : 0432 273444 
                                                                                                               (நன்றி :  மலைகள்.காம்)



 
 
 

Comments