Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் 53


அழகியசிங்கர்  


 பார்க்கும் புத்தர்


பேயோன்




நேற்று புத்தர் வீட்டிற்கு வந்திருந்தார்
தள்ளுவண்டிக் கடையில் வாங்கியவர்
பீங்கானில் செய்த முனிபுங்கவர்
தாடி வைத்தால் திருவள்ளூவர்
போட்டிசெல்லி முகபாவி
சுருட்டைமுடிக் காந்தார உருவி
தொங்கட்டானை இழந்த காது
மூக்கென்னவோ கிழக்காசியம்
நகைச்சுவைத் துணுக்கொன்று
சொல்லி முடித்த புன்னகை
மனக்கண்ணில் எதையோ பார்க்க
விரும்பி மூடிய கண்கள்
கண் திறந்தால் தெரிந்துவிடுமோ
என்று மூடிய கண்கள்
எனக்கு புத்தரைப் பிடிக்கும்
பார்த்தால் அமைதி தருகிறார்
என்றெண்ணவைக்கும் ஆளுமை
கிளர்ந்தெழும் அன்போடு
கண்வாங்காமல் பார்க்கிறேன் அவரை
பிறவியிலேயே மூடிய கண்களால்
அவரும் என்னைப் பார்க்கிறார்
ஆனால் பீங்கானுக்குள்ளிருந்தல்ல
எங்குமில்லா ஓர் இடத்திலிருந்து
அவர் பார்ப்பது எனக்குத் தெரியும்
நான் பார்ப்பது அவருக்குத் தெரியாது.

நன்றி : வாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை - பேயோன் - கவிதைகள் - பக்கங்கள் : 243 - விலை : 200 - வெளியீடு : சஹானா,  26/1 சிபிடபூள்யூடி குவார்ட்டர்ஸ், பெசண்ட் நகர், சென்னை 90

Comments