Skip to main content

ஏன் என்று தெரியவில்லை?


அழகியசிங்கர்





தமிழ் ஹிந்துவைப் புரட்டிப் பார்த்தேன்.  ஞ:ôனக்கூத்தன் பிறந்த நான் இன்று.  எனக்கு ஒரு சம்பவம் ஞாபகம் வந்தது.  சில ஆண்டுகளுக்கு முன்.. ஞாயிற்றுக்கிழமை என்று நினைக்கிறேன்.   :ஞானக்கூத்தன் எங்களைப் பார்க்க கடற்கரைக்கு வந்திருந்தார்.  ஞானக்கூத்தன் ஒன்று சொன்னார் : "எனக்கு இன்று பிறந்த நாள்," என்று.  வாழ்த்துத் தெரிவித்தோம்.  பின் இன்னொன்றும் சொன்னார் üஇந்தப் பிறந்தநாள்போது வீட்டில் உள்ளவர்களிடம் சொன்னாராம்.  ஆண்டவன் இன்றுவரை உயிரோடு விட்டு வைத்திருக்கிறானாம்.  அவனுக்கு நன்றி சொல்ல வேண்டுமென்று.  இதைக் கேட்டவுடன் வீட்டில் உள்ளவர்கள் கலங்கி விட்டார்கள்," என்று.  அன்று முழுவதும் ஞானக்கூத்தன் சொன்னது என் ஞாபகத்தை விட்டுப் போகவில்லை.

என் அப்பா பாட்டியெல்லாம் பிறந்த நாள் கொண்டாடியதில்லை. அவர்களுக்கே தெரியாது..எப்போது பிறந்தோம் என்று..எனக்குக் கூட பல ஆண்டுகளாக பிறந்த நாள் எப்போது வருகிறது என்பது தெரியாது..உண்மையில் என் பெண்ணின் பிறந்தநாளை கொண்டாடிய பின்தான் என் பிறந்தநாள் ஞாபகம் வந்தது.  

ஒரு முறை என் பெண் பிறந்த நாளை வீட்டில் கொண்டாட கேக்கெல்லாம் வாங்கிக்கொண்டு வந்தேன்.  சுற்றிலும் தெருவில் உள்ள சின்ன சின்ன பொடியன்கள்.  பெண்ணை எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியை ஊதிவிட்டு கத்தியால் கேக்கை வெட்டச் சொன்னேன்.  பெண் மிரண்டாள்.  பின் ஓங்கி என் கன்னத்தில் அடித்து விட்டாள்.  

இந்தச் சம்பவத்தை என்னால் மறக்க முடியாது.   

ஒருநாள் மாலை பிரமிள் வீட்டிற்கு வந்தார்.  பின் என் கையைப் பிடித்துக் குலுக்கினார்.  "என்ன?" என்றேன்.  "பிறந்தநாள்" என்றார்.
அசோக்நகரில் உள்ள சரவணபவன் ஓட்டலுக்குச் சென்றோம். டிபன் சாப்பிட்டு பிறந்தநாள் கொண்டாடினோம்.

ஒவ்வொரு பிறந்தநாள் போதும் பிறந்தநாள் கவிதை எழுதுவது வழக்கம். பிறந்தநாள் போது யாரும் வாழ்த்தவில்லையே என்று ஏக்கம் இருக்கும். பிறந்த தினம் போது மட்டும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.  அடி எதுவும் படக்கூடாது.  யாரிடமும் திட்டு வாங்காமல் இருக்க வேண்டும்.  முடிந்தவரை பேசாமல் இருப்பது  பிறந்த தினம் போது கவிதை எழுதுவது வழக்கம்.

2011ஆம் ஆண்டு ஒரு கவிதை எழுதினேன்.  58 என்று.

58

ஓடி விட்டன 
நாட்களும் மாதங்களும் ஆண்டுகளும்
கழுத்தில் சுருக்கம்
இளமை இன்னும் மாறவில்லை
என்று அப்போதிருந்த சிந்தனை
ஓட்டம் ஒரே மாதிரிதான்

வானத்தில் நட்சத்திரம் மின்ன
தூரத்தில் தெருநாய் குரைத்தது
வேடிக்கையாக யாரோ
கொட்டாவி விட்டனர்

இன்று 58

இப்படித்தான் 59ஆம் வயதில் ஒரு கவிதை எழுதினேன்.  ஆனால் அதன்பின் எழுதவில்லை.   ஞானக்கூத்தனோ பிரமிளோ ஏன் வைதீஸ்வரனோ பிறந்த தின கவிதைகள் எழுதவில்லை.  ஏன் என்று எனக்குத் தெரியவில்லை?

Comments